தமிழ்க் குடும்பம் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படுவது நடுவானில் நிறுத்தம்

பட மூலாதாரம், HOMETOBILO/TWITTER
ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்க் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்படுவதற்காக, வலுக்கட்டாயமாக இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானமும் புறப்பட்ட நிலையிலும் ஆஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடுகடத்தலைத் தடுத்தனர். பறந்துகொண்டிருந்த விமானம் தரையிறக்கப்பட்டு, அந்த குடும்பம் இறக்கிவிடப்பட்டது.
விமானம் புறப்பட்டபிறகு நீதிபதி ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவால் நடேசலிங்கம், பிரியா இவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் இலங்கைக்கு அனுப்பப்படுவது தடுக்கப்பட்டது. விமானம் தரையிறக்கப்பட்டு இந்தக் குடும்பம் கீழே இறக்கிவிடப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதிகாரிகள் இந்தக் குடும்பத்தை அவர்களின் குயின்ஸ்லாந்து வீட்டில் இருந்து பலவந்தமாக வெளியேற்றியபோது அவர்களுக்கு ஆதரவான குரல்கள் ஆஸ்திரேலிய நாடு முழுவதும் எதிரொலித்தன.
அவர்கள் அகதிகள் அல்ல என்று கூறி இவர்கள் வெளியேற்றப்படுவதற்கு ஆதரவான அரசின் நிலைப்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை அங்கீகாரம் கிடைத்தது.

பட மூலாதாரம், SIMONE CAMERON
"நம் நாட்டின் மூலம் பாதுகாப்பைப் பெறுவதற்கு அவர்கள் உரியவர்கள் அல்லர்" என்று உள்ளூர் ஊடகங்களிடம் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்தார்.
"அடைக்கலம் கோரி அந்தக் குடும்பம் விடுத்த விண்ணப்பம் குடியேற்றத் துறை அதிகாரிகளால் விரிவாக ஆராயப்பட்டு நிராகரிக்கப்பட்டது" என அவர் கூறினார்.
அடுத்தடுத்து செய்யப்பட்ட மேல்முறையீடுகளிலும் அந்தக் கணவன் மனைவிக்கும், மூத்த குழந்தைக்கும் அளிக்கப்பட்ட அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இலங்கை உள்நாட்டுப் போரில் இருந்து தப்பி ஆஸ்திரேலியா வந்த நடேசலிங்கமும், பிரியாவும் ஆஸ்திரேலியாவில்தான் திருமணமே செய்துகொண்டனர்.
அவர்களின் மூத்த மகள், தற்போது நான்கு வயதுள்ள கோபிகாவும், இளைய மகள், 2 வயதுள்ள தருணிகாவும் ஆஸ்திரேலியாவில்தான் பிறந்தனர்.
இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், இவர்களின் கடந்தகால அரசியல் தொடர்புகள் காரணமாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று இவர்களை ஆதரிப்பவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தக் குடும்பம் பிலோயெலா என்ற சிறு நகரில் உழைத்து வாழ்ந்து வந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் பலவந்தமாக தடுப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விடியற்காலை நேரத்தில் ஒரு டஜன் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைக்கு கடுமையான சமூக எதிர்வினை ஏற்பட்டது. அவர்களை திரும்ப அழைக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தில் 1.2 லட்சம் பேர் ஒப்பம் இட்டனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இதனிடையே, வெள்ளிக்கிழமை ஒரு திருப்பம் ஏற்பட்டது. இந்த தம்பதியின் இளைய மகளை நாடு கடத்துவதற்கு அடுத்த புதன்கிழமை வரை தடை விதித்து கூட்டாட்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் பலனை பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் விரிவுபடுத்த அரசு அனுமதிக்குமா என்று தெரிவியல்லை.
இந்த நிலையில் குடும்பத்தைப் பிரிப்பது மிக மோசமான மனிதாபிமானமற்ற செயலாக இருக்கும் என்று வழக்குரைஞர் கரினா ஃபோர்டு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நடுவானில் நாடு கடத்தல் தடுக்கப்பட்டது எப்படி?
சில மணி நேரங்களில் இந்தக் குடும்பம் நாடுகடத்தப்படும் என்பதை அறிந்த போராட்டக்காரர்கள் வியாழக்கிழமை இரவு மெல்போர்ன் விமான நிலையம் விரைந்தனர்.
அவர்களை ஏற்றிக்கொண்ட விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு புறப்பட்டுவிட்டது. எனினும் அதன் பிறகும் போராடிய வழக்குரைஞர்கள் விமானம் நாட்டு எல்லையைத் தாண்டுவதற்கு முன்பாக கடைசி கட்டத்தில் இளைய சிறுமி தருணிகா நாடு கடத்தலுக்கு எதிராக ஓர் உத்தரவை வெற்றிகரமாகப் பெற்றனர்.

பட மூலாதாரம், TAMIL REFUGEE COUNCIL
தொலைபேசி மூலம் ஒரு நீதிபதி வாய்மொழி தடை உத்தரவு அளித்தபோது விமானம் நீண்ட தூரம் பறந்துவிட்டது. எனினும், நாட்டின் வடக்கு எல்லைக்கு அருகில் கடைசியாக உள்ள டார்வின் விமான நிலையத்தில் அதிகாலை 3 மணியளவில் விமானம் தரையிறக்கப்பட்டது. மெல்போர்னில் இருந்து டார்வின் 3,000 கி.மீ. தூரம்.
அவர்கள் உணர்ச்சிபூர்வமாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர்களின் நண்பர் அங்கேலா ஃப்ரெடரிக்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார். விமானம் பறந்தபோது சிறுமிகள் அழுது கொண்டிருந்தனர் என்றும் அவர்கள் அருகில் அமர அவரது தாய் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல ஆஸ்திரேலியர்கள் இந்தக் குடும்பம் நடத்தப்பட்டவிதம் குறித்த தங்கள் கோபத்தை வெளியிட்டதுடன், அரசாங்கம் அவர்களிடம் சற்று இரக்கத்துடன் நடந்துகொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோல்மேன் அந்தக் குடும்பம் இங்கேயே இருப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












