You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கருக்கலைப்பு: சட்டப்பூர்வமாக்க மறுத்தது அர்ஜென்டினா நாடாளுமன்றம்
அர்ஜென்டினா நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபை, கருவுற்ற 14 வாரங்களுக்குள் செய்யப்படும் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கான மசோதாவை நிராகரித்துள்ளது.
தொடர்ச்சியாக நடத்த விவாதத்துக்கு பிறகு நடந்த வாக்கெடுப்பில் 38 செனட் உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். 31 பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்தத் தோல்வியால், அந்நாட்டுச் சட்டங்களின்படி இந்த மசோதாவை இன்னும் ஓராண்டுக்கு நாராளுமன்றத்தில் முன்வைக்க முடியாது.
தற்போது பாலியல் வல்லுறவால் உண்டான கரு மற்றும் தாயின் உயிருக்கு ஆபத்து ஆகிய இரு சூழல்களில் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அர்ஜென்டினாவில் அனுமதிக்கப்படுகிறது.
வாக்கெடுப்பு நடந்தபோது இருதரப்புக்கும் ஆதரவானவர்கள், நாடாளுமன்றத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கருக்கலைப்புக்கு எதிரான செயல்பாட்டாளர்கள் இந்த மசோதா நிராகரிக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கள் ஆதரவைத் தெரிவிக்க பச்சை நிறத்தில் ஆடை அணிந்து வந்திருந்த கருக்கலைப்புக்கு ஆதரவானவர்கள் மசோதா நிராகரிக்கப்பட்டதால் கண்ணீர் சிந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி தங்களை ஆற்றுப்படுத்திக்கொண்டனர்.
கருக்கலைப்பு மசோதாவின் பின்னணி என்ன?
ரோமன் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக உள்ள அர்ஜென்டினாவில், கருக்கலைப்புக்கு ஆதரவானவர்கள் இந்தச் சட்ட மசோதா நிறைவேற வேண்டும் என பல ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
கருக்கலைப்பை எதிர்க்கும் அதிபர் மௌரீசியோ மாக்ரி நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்ததும் இந்த விவகாரம் சூடு பிடித்தது. நாடாளுமன்றத்தின் கீழவையான காங்கிரசில் இந்த மசோதா மிகச் சில வாக்குகள் வித்தியாசத்தில் சமீபத்தில் வெற்றி பெற்றது.
கருக்கலைப்பை ஆதரிப்பவர்கள் இதை ஒரு பொது சுகாதாரப் பிரச்னையாகப் பார்க்கிறார்கள். சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்துகொண்ட 43 பெண்கள் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளனர்.
"இது சட்டப்பூர்வமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வார்கள்," என்று கருக்கலைப்பை ஆதரித்து பிரசாரம் செய்யும் வழக்கறிஞர் சாப்ரினா கிரோபா கூறுகிறார்.
ஆனால், கருக்கலைப்பை எதிர்க்கும் கேமிலா டூரா என்பவர் கருக்கலைப்பை சட்டவிரோதமாக்குவதன் மூலம் அத்தகைய மரணங்களைத் தடுக்க முடியும் என்கிறார்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருகுவே மற்றும் கியூபா ஆகிய இரு நாடுகள் மட்டுமே கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கியுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :