You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகப் பார்வை: `நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு` - சிகிச்சைக்குப் பின் அர்னால்ட்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை
ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு (70) லாஸ் ஏஞ்சல்ஸில் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆஸ்திரிய - அமெரிக்க நடிகர் மற்றும் முன்னாள் கலிஃபோர்னியா ஆளுநராக இருந்த அர்னால்டுக்கு இதய வால்வு அறுவை சிகிச்சை உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்து கண்விழித்தவர் , 'நான் மீண்டும் வந்துவிட்டேன்' என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபிக்கப்பட்ட இளவரசர்
பெல்ஜியம் இளவரசர் லாரண்ட்டின் மாத ஊதியத்தை ஓராண்டுக்கு குறைக்க அந்நாட்டு நாடாளுமன்றம் முடிவெடுத்துள்ளது. அரசின் அனுமதி இல்லாமல், கடந்த ஆண்டு கடற்படை சீருடையில் சீன தூதரகம் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இளவரசரின் 15 சதவீத ஊதிய குறைப்புக்கு இசைவாக வாக்களித்துள்ளனர்.
கருப்புப் பட்டியலில் கப்பல் நிறுவனங்கள்
வட கொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை மீறி, அந்நாட்டிற்கு உதவியதாக 27 கப்பல்கள், 21 கப்பல் நிறுவனங்கள் மற்றும் ஒரு தனி நபரை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது ஐ.நா பாதுகாப்பு மன்றம். கடந்த மாதம் அமெரிக்கா முன் வைத்த யோசனையை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாலத்தீனியர்கள் பலி
காசா - இஸ்ரேல் எல்லை பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்களது ஆறு வாரகால போராட்டத்தை தொடங்குவதற்காக காசாவிலுள்ள ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் இஸ்ரேலின் எல்லையை நோக்கி பேரணியாக சென்றிருந்தனர். "திரும்புவதற்கான மாபெரும் பேரணி" என்றழைக்கப்படும் இந்த பேரணிக்காக இஸ்ரேலின் எல்லைப்பகுதிக்கு அருகில் பாலத்தீனர்கள் ஆறு முகாம்களை அமைத்தார்கள். இஸ்ரேலில் உள்ள தங்களின் வீடுகளுக்கு அகதிகள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
கலவரத்தை அடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இல்ரேலிய ராணுவம் கூறியது. நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலவரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. "பாலத்தீன மக்களுக்கான பாதுகாப்பு தேவையை" ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் பாலத்தீன பிரதமர் முஹமத் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்."கலவரத்தில் கொல்லப்பட்ட தியாகிகளுக்கு இஸ்ரேலிய அதிகாரிகள்தான் முழு பொறுப்பு" என்றும் அவர் தெரிவித்தார்.
விரிவாக படிக்க: இஸ்ரேல் - காசா எல்லையில் கலவரம்: பாலத்தீனர்கள் 16 பேர் பலி
விமான நிலையத்தில் தீவிபத்து:
பிரிட்டன் எஸ்ஸெக்ஸில் உள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தின் வெளியே ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து அனைத்து விமானங்களும் உள்ளூர் நேரப்படி இன்று நள்ளிரவு வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்