You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலாலாவை சில பாகிஸ்தானியர்கள் ஏன் வெறுக்கிறார்கள்? என்ன செய்தார்?
(2014 அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவரும் மிக இளம்வயதில் ஐ.நா.வின் அமைதிக்கான தூதராக நியமிக்கப்பட்டவருமான மலாலாவின் பிறந்தநாள் இன்று. அதனையிட்டு 2018 அம் ஆண்டு பிபிசி தமிழில் வெளியான இந்த கட்டுரையை இன்று மறுபகிர்வு செய்கிறோம்.)
எந்த பயமும் இல்லாமல் பாகிஸ்தானுக்கு வருவது என்பது தனது நீண்ட நாள் கனவு என்று மலாலா கூறியுள்ளார். தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பிறகு, முதன்முறையாக பாகிஸ்தான் சென்றுள்ளார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய்.
மனித உரிமை ஆர்வலராக இருக்கும் மலாலாவுக்கு தற்போது 25 வயதாகிறது. பெண் கல்வி குறித்து பேசியதற்காக 2012ஆம் ஆண்டு தாலிபன் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் உணர்ச்சிபூர்வமாக பேசிய மலாலா, "பயமில்லாமல், அமைதியாக பாகிஸ்தானுக்கு வந்து, தெருக்களில் நடந்து, மக்களுடன் பேசுவது என்பது எனது கனவு. தற்போது நான் என் பழைய வீட்டில் உள்ளதாக நினைக்கிறேன். என் கனவு நிறைவேறி இருக்கிறது. உங்களுக்கு நான் கடமை பட்டுள்ளேன்" என்றார்.
சில பாகிஸ்தானியர்கள் மலாலாவை வெறுக்க காரணம் என்ன?
ஹரூன் ரஷித், பிபிசி உருது ஆசிரியர், இஸ்லாமாபாத்
இரண்டு வருடங்களுக்கு முன்பு, மலாலா பாகிஸ்தானுக்கு திரும்ப முடியும் என்று நினைத்து பார்த்திருக்க முடியாது. ஆனால் இஸ்லாமிய வன்முறைகள் நடந்து சில ஆண்டுகள் ஆன நிலையில், அங்கு பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது அவர் மீண்டும் பாகிஸ்தானுக்கு சென்றது, ஆக்கப்பூர்வமானதாகவே பார்க்கப்படுகிறது. அந்நாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது என்பதை வெளிப்படுத்துவதில் பாகிஸ்தான் ராணுவம் கவனம் செலுத்தி வருகிறது.
நீண்ட காலம் பாகிஸ்தானில் இல்லாத மலாலா, அதற்கு ஏற்ற விமர்சனங்கள் வரும் என்பதை அறிந்திருந்தார். எனினும், பெரும்பாலான மக்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால், பாகிஸ்தானின் ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் கல்வி குறித்து மலாலா பிரசாரம் செய்வது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பெண் விடுதலைக்கான மேற்கத்திய கலாசாரத்தை மலாலா பரப்புவதாக பழமைவாத ஆண்கள் சிலர் ஆன்லைனில் அவர் மீது வெறுப்பு காட்டி வருகின்றனர்.
பெண்கள் கல்வி கற்பது என்பதை அவர்கள் அச்சுறுத்தலாகவும் ஆபத்தான ஒன்றாகவும் பார்க்கின்றனர். முக்கியமாக, கிராமப்புற பகுதிகளில் லட்சக்கணக்கான பெண்கள் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டு வேலைகளை செய்கிறார்கள். இப்படிப்பட்ட மனநிலையில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கு எதிராகதான் மலாலா போராடி வருகிறார்.
அவர் ஏன் தாக்கப்பட்டார்?
தாலிபனின் பிடியில் தனது வாழ்க்கை எப்படி உள்ளது என்பது குறித்து, பெயர் வெளியிடாமல் பிபிசி உருது சேவையில் எழுத தொடங்கினார் மலாலா.
தீவிரவாதிகளின் அடக்குமுறைக்கு மத்தியில் பெண் கல்வி குறித்து பெரிதும் பேசி வந்த மலாலா, தனது 15ஆவது வயதில் பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார்; சர்வதேச கவனத்தை அது ஈர்த்தது.
அவர் "மேற்கத்திய கலாசாரத்திற்கு ஆதரவாக" இருப்பதால் அவரை சுட்டதாக பாகிஸ்தானில் உள்ள தாலிபன்கள் தெரிவித்தனர்.
அந்த தாக்குதலில் மலாலா பலத்த காயமடைந்தார். மேலும், அவரின் மூளையில் வீக்கம் ஏற்படுவதை தடுக்க மண்டை ஓட்டின் ஒரு பகுதியை நீக்கும் நிலை ஏற்பட்டது.
பாகிஸ்தானின் ராணுவ மருத்துவமனையில் அவசரகால சிகிச்சைக்கு பிறகு அவர் பிரிட்டனுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தனது குடும்பத்துடன் பிரிட்டனில் வசித்து வருகிறார்.
என்ன செய்தார் மலாலா?
பிழைத்து வந்த மலாலா உலகளவில் குழந்தைகள் கல்வி குறித்தும், கல்வி பெறுவதில் அவர்களுக்கு உள்ள உரிமை குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார்.
உலகில் உள்ள அனைத்து பெண்களும் கல்வி கற்கவும், எந்தவித அச்சமும் இன்றி வாழ்வில் முன்னேறவும் அவர் தனது தந்தை சியாவுதினுடன் சேர்ந்து மலாலா நிதி அமைப்பை அவர் உருவாக்கினார்.
2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் மலாலா. இளம் வயதில் நோபல் பரிசு பெறும் சிறப்பையும், அமைத்திக்கான நோபல் பரிசை பெறும் முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையையும் பெற்றார் மலாலா.
குழந்தைகளின் உரிமைகளுக்காக போராடியதற்காக இந்திய ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியுடன் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டார் மலாலா.
அவர் தனது படிப்பை தொடர்ந்து கொண்டே தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். மேலும் கடந்த ஆண்டு அவருக்கு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது.
பாகிஸ்தானில் ஆபத்து தொடர்கிறதா?
சமீப வருடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முயற்சிகளுக்கு மத்தியிலும், பாகிஸ்தான் தாலிபன் தீவிரவாதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
நூற்றுக்கணக்கானவர்களை பலி வாங்கிய, பள்ளிகள் மீதும் கல்லூரிகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தாலிபான்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் மலாலா அளித்த நேர்காணல் ஒன்றில், தனது சொந்த ஊரான ஸ்வாட்டை 'பூமியின் சொர்கம்' என்று குறிப்பிட்டு, தான் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்