You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியா: தினமும் ஐந்து மணி நேரம் போரை நிறுத்த ரஷியா ஆணை
சிரியாவின் கிழக்கு கூட்டாவின் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில் தினமும் ஐந்து மணிநேரம், தாக்குதலை நிறுத்தி வைக்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆணையிட்டுள்ளார்.
இது செவ்வாய்கிழமை முதல் தொடங்கும்; மேலும், பொதுமக்கள் வெளியேறுவதற்கான "மனிதாபிமான பாதைகள்" உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டமாஸ்கஸிற்கு அருகில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில் 393,000 பொதுமக்கள் சிக்கியுள்ளனர். அந்த பகுதி, ரஷியாவின் ஆதரவோடு அரசு படைகளால் தீவிர தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
எட்டு நாட்களில் 560 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
ரஷியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொயகு இந்த "மனிதாபிமான போர் நிறுத்தம்" குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் இந்த போர் நிறுத்தம், உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் 2 மணி வரை தினமும் தொடரும் என அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்:
மக்கள் தப்பி செல்வதற்கான பாதைகளை அமைக்க சிரியா செம்பிறைச் சங்கம் உதவும் எனவும் மக்களுக்கு இது குறித்த தகவல்கள் துண்டுச் சீட்டுகள் மூலமாகவும், குறுஞ்செய்தி மற்றும் வீடியோக்கள் மூலமாகவும் செய்திகள் அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக "எவ்வித தாமதமுமின்றி" 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை உடனடியாக அமல்படுத்தி, அதனை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால் சண்டையிட்டு வரும் அனைத்து தரப்பினரும் ஐ.நாவின் போர் நிறுத்த தீர்மானத்தை எவ்வாறு அமல்படுத்துவது என்பதை ஒப்புக் கொண்டதால்தான் தீர்மானம் நிறைவேற்றப்படும் என ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லவ்ரோஃப் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :