'அண்ணாத்த' ரஜினி உருக்கம்: "எஸ்பிபி 45 வருடங்களாக எனது குரலாகவே வாழ்ந்தவர்"

அண்ணாத்த படத்தின் முதல் பாடலில் தனக்காக குரல் கொடுத்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், கடந்த 45 வருடங்களாக தனது குரலாகவே வாழ்ந்தவர் என்று உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இது குறித்து அவர் இன்று இரவு வெளியிட்டுள்ள பதிவில், "45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்," என்று கூறியுள்ளார்.

'சிறுத்த' சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'அண்ணாத்த' படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார்.

'சிறுத்த' சிவா மற்றும் ரஜினிகாந்த் முதல் முறையாக இணையும் படம் 'அண்ணாத்த'. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, மீனா, குஷ்பு என ஏராளமான நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். 'சிறுத்த' சிவாவின் வழக்கமான பாணியில் குடும்ப படமாக, ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த வகையில் படத்தின் பாடல்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

வெளியானது 'அண்ணாத்த' படத்தின் முதல் பாடல்

'அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு, அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன் நடையில, உடையில கொல, கொல மாஸு என்பதா அந்த பாடல் உள்ளது. பாடலாசிரியர் விவேகா இந்த பாடலை எழுதியிருக்கிறார்.

இந்த முதல் பாடல் ஆரம்பிக்கும் போதே மறைந்த பாடகர் 'இசை மேதை எஸ்.பி.பி. ஐயா அவர்களுக்கு எங்கள் இசை வணக்கங்கள்' என்றே பாடல் தொடங்குகிறது.

'ஜில்லா', 'என்றென்றும் புன்னகை', 'வேதாளம்', 'விஸ்வாசம்' உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் விவேகா, ரஜினிக்கான அறிமுக பாடலை எழுதுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

காளை மாடு கண்களோடு, கோவிலில் வண்ணமயமான தோரணங்கள், சொந்த பந்தங்கள், ஊர் மக்கள் சூழ வெள்ளை வேட்டி சட்டையோடு பாடலில் ரஜினி அறிமுகம் என கிராம பின்னணியில் கொண்டாட்டமான திருவிழா பாடலாக இந்த 'அண்ணாத்த' அமைந்திருக்கிறது.

'கூண்டுல புயலுக்கு வேலையில்ல, தாண்டிவா கடமைகள் காத்திருக்கு; தூண்டில திமிங்கலம் மதிப்பதில்ல, துணிஞ்சி வா கடவுளே துணை நமக்கு' என நடிகர் ரஜினியின் அறிமுக பாடலில் வழக்கமாக ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையிலான வரிகள் அமைந்திருக்கின்றன.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், படம் தீபாவளிக்கு வெளியாகும் என்பதையும் உறுதி செய்தது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் வெளியாகும் கடைசி பாடல்

தமிழ் சினிமாவில் ரஜினி, அஜீத், விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு அறிமுக பாடல் என்பது அவர்களின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைய கூடிய ஒன்று. பாடல்கள் வழியே கருத்துகள் சொல்வது, படத்தில் ஏற்றிருக்கும் தங்களது கதாப்பாத்திரம் குறித்து பாடுவது என அறிமுக பாடல்களுக்கென சில எதிர்ப்பார்ப்புகள் எப்போதுமே இருக்கும்.

அதிலும் குறிப்பாக, ரஜினி - எஸ்.பி.பி. இருவரும் இணையும் இந்த வகை அறிமுக பாடல்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

கமல், ரஜினி இருவரும் இணைந்து நடித்த 80-களின் கால கட்டத்தில் எஸ்.பி.பி. பல பாடல்களை பாடியுள்ளார்.

ஆனால், அதற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் கமர்ஷியல் கதாநாயகனாக தனியாக நடிக்க ஆரம்பித்த போது முதலில் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் இயக்குநர் மகேந்திரனின், 'முள்ளும் மலரும்' படத்தில் காளி கதாபாத்திரம். இந்த படத்தில்தான் எஸ்.பி.பி. முதன் முறையாக 'இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்' பாடலை ரஜினிக்காக பாடினார்.

இந்த பாடல் வெற்றி பெறவே, தமிழ் சினிமாவின் செண்டிமெண்ட் படி அடுத்தடுத்த பல படங்களிலும் இந்த இணை தொடர்ந்தது. ரஜினி- எஸ்.பி.பி. இணையின் சிறப்பே பாடல்களில் இருக்கும் அந்த எனர்ஜிதான்.

'அண்ணாமலை' படத்தில் 'வந்தேன்டா பால்காரன்', 'முத்து' படத்தில் 'ஒருவன் ஒருவன் முதலாளி', 'படையப்பா' படத்தில் 'என் பேரு படையப்பா', 'சந்திரமுகி' படத்தில் 'தேவுடா தேவுடா' என ரஜினி படங்களில் எஸ்.பி.பி.யின் அறிமுக பாடல் 2014-ல் வெளியான 'கோச்சடையான்' வரை தொடர்ந்தது. இப்படி பல பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், இசைமையப்பாளர்களும் ரஜினிகாந்த்தின் படங்களுக்கான அறிமுக பாடல்களுக்கு எஸ்.பி.பி-யையே நாடினார்கள்.

அதன் பிறகு ரஜினி இயக்குநர் இரஞ்சித்துடனும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடனும் முதல் முறையாக இணைந்த 'கபாலி' படத்தில் இந்த ட்ரெண்ட் மாறி மீண்டும் 'பேட்ட' படத்தில் 'மரண மாஸ்', ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'தர்பார்' படத்தில் 'சும்மா கிழி' என மீண்டும் ரஜினி- எஸ்.பி.பி. பாடல்கள் தொடர்ந்தது.

அந்த வகையில் தற்போது வெளியாக இருக்கும் 'அண்ணாத்த' படத்தின் அறிமுக பாடலையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடினார். இதுவே அவரது கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தெலுங்கில் கமலுக்கு பின்னணி குரல் கொடுப்பது எஸ்.பி.பி.தான். தெலுங்கில் எப்படி நடிகர் கமல்ஹாசனின் குரலாக எஸ்.பி.பி. மாறினாரோ அதுபோல, தமிழிலும் ரஜினியின் பல படங்களுக்கு அறிமுக பாடல் குரல் என்றால் அது எஸ்.பி.பி.தான்.

கடந்த மாதம் 25ம் தேதி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவரது முதல் நினைவுதினம் வந்தது. இதனை ஒட்டி பாடல் வெளியாகும் என செய்தி வந்த போது படத்தின் இசையைமைப்பாளர் டி. இமான் அவருடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் அதனை மறுத்து இருந்தார்.

'அண்ணாத்த' படத்தின் அறிமுக பாடல் கொண்டாட்டமான ஒன்று. எஸ்.பி.பி.யின் கடைசி பாடல் எனும் போது அவரது நினைவு நாளன்று வெளியிடுவது சரியாக இருக்காது. பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்து தயாரிப்பு தரப்பு விரைவில் அறிவிப்பார்கள் என அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் அண்ணாத்த முதல் பாடல் வெளியானதையடுத்து, எஸ்பிபியின் கடைசி பாடல் பதிவு குறித்த தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட இமான், ரஜினி, எஸ்பிபி இருவருமே எழுபது வயதை கடந்தவர்கள். இருவரிடமே அந்த வயதுக்குரிய வயோதிகத்தை விட குதூகலமும் சக்தியும் இளைஞர்களுக்கு இணையாக இருந்ததை காண முடிந்ததாக தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :