You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ள நடிகை பாயல் கோஷ்
பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக பாயல் கோஷ் என்ற நடிகை குற்றஞ்சாட்டியுள்ளார்.
நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோதியை தனது ட்விட்டர் பதிவில் டேக் செய்து, இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இதன்மூலம் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ட்வீட் பதிவை ரீட்வீட் செய்துள்ள நடிகை கங்கனா ரனாவத், அதில் #மீ டூ ஹாஷ்டேகை சேர்த்துள்ளார்.
மேலும் அனுராக் கஷ்யப் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
பாயல் கோஷின் ட்வீட் பதிவிற்கு பதிலளித்து, இது தொடர்பாக விரிவான புகார் ஒன்றை அனுப்புமாறு கோரியுள்ளார் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா.
அதற்கு பதிலளித்த பாயல் கோஷ், புகார் தெரிவிப்பதாக தெரிவித்தார்.
பாயல் கோஷ் 2017ஆம் ஆண்டில் ’பட்டேல் கி பஞ்சாபி ஷாதி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் மேலும் சில தெலுகு படங்களிலும் நடித்துள்ளார்.
பாயல் கோஷின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து நான்கு ட்வீட்டுகளை பதிவிட்டுள்ளார் அனுராக் கஷ்யப்.
மேலும் தனது வழக்கறிஞர் மூலம் அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
"இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், மீ டூ போன்ற சமூக இயக்கங்கள் ஒருவரை தவறாக சித்தரிப்பதற்கு பயன்படுத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது," என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அனுராக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக நேற்று, தனது ட்வீட்டுகளை ஹிந்தியில் பதிவிட்டுள்ள அனுராக் கஷ்யப், "என்னை பேசவிடாமல் செய்ய நீண்ட காலமாக முயற்சித்து வருகிறீர்கள். என்னை அமைதியாக்கும் முயற்சியில் நீங்கள் தொடர்ந்து பொய் பேசி வருகிறீர்கள். அதில் பிறரையும் சேர்த்துக் கொண்டீர்கள். எனது மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை," என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், "என் மீது குற்றம் சுமத்துவதற்காக எனது நடிகர்கள் குறித்து பேசினீர்கள், பச்சன் குடும்பத்தாரை குறித்து பேசியது அடுத்தகட்டம். நான் இருமுறை திருமணம் செய்து கொண்டேன். அது குற்றம் என்றால், நான் அவர்களை மிகவும் நேசித்தேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனது முதல் மனைவி அல்லது இரண்டாவது மனைவி, காதலி, நடிகைகள், எனது குழு, என யாரிடமும் பொதுவெளி அல்லது தனியாக இருக்கும்போதும் நான் இவ்வாறு நடந்து கொண்டது இல்லை," என தெரிவித்துள்ளார்.
அனுராக் தனது இந்த ட்வீட்டில் யாரின் பெயரையும் குறிப்பிட்டு கூறவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: