மானாமதுரை: பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டியதா போலீஸ்? என்ன நடந்தது?

மானாமதுரை, பள்ளியில் சர்ச்சை
படக்குறிப்பு, பள்ளி முன்பு போலீசார்
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மானாமதுரை அருகே பள்ளியில் மாணவர்களை கண்டிப்பதற்காக, ஆசிரியர்கள் காவல்துறையினரை பள்ளிக்குள் வரவழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளிக்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை கம்பால் தாக்கியதுடன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனை காவல்துறை மறுத்துள்ளது. அந்த பள்ளியில் என்ன நடந்தது?

சம்பவத்தன்று என்ன நடந்தது?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த வாரம் மாணவர்கள் மோதிக் கொண்டதில் ஒரு மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, பள்ளி நுழைவு வாயிலில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், கடந்த புதன்கிழமை மாலை இடைவேளை நேரத்தில் 11ம் வகுப்பு படிக்கும் ஐந்து மாணவர்கள் விசில் அடித்து கூச்சல் போட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே, ஆசிரியர்கள் அழைப்பின் பேரில் பள்ளிக்குள் நுழைந்த காவல்துறையினர் மாணவர்களை தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மாணவர் கூறியது என்ன?

போலீசார் தங்களை தாக்கியதுடன், துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டவும் செய்தனர் என்று 11ஆம் வகுப்பு மாணவர் புகார் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், “புதன்கிழமை மாலை இடைவேளை நேரத்தில் வகுப்பில் இருந்து வெளியே வந்த போது, முன்னால் சென்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை நாங்கள் (ஐந்து பேர்) விசில் அடித்து சத்தமாக கூப்பிட்டோம். அதை கவனித்துக் கொண்டிருந்த இரண்டு ஆசிரியர்கள் எங்களை அழைத்து அருகில் வைத்துக் கொண்டு பள்ளி வெளியே நின்ற போலீஸை செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்தனர்.

சற்று நேரத்தில் பள்ளிக்குள் வந்த போலீஸ் முதலில் என்னுடன் இருந்த இருவரை ஆசிரியர் ஓய்வு அறைக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் என்னையும் என்னுடன் இருந்த மற்றொரு மாணவரையும், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரையும் அறைக்குள் அழைத்துச் சென்று கட்டை மற்றும் கம்பியால் அடித்தனர்” என்றார்.

மாலை 3.30 மணிக்கு அழைத்துச் சென்ற மாணவர்களை 5.30 மணி வரை அறையில் அடைத்து வைத்து, 3 ஆசிரியர்கள் முன்னிலையில் காவல்துறையினர் தனித்தனியாக அடித்ததாக அந்த மாணவர் கூறினார்.

மாணவரின் உடலில் உள்ள தழும்பு
படக்குறிப்பு, காவல்துறையினர் அடித்ததில் ஏற்பட்ட தழும்பு இது என்று பிபிசியிடம் பேசிய மாணவர் கூறினார்.

தன் தலையிலும், மற்றொரு மாணவர் தலையிலும் போலீஸ் ஒருவர் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக அந்த மாணவர் குற்றம்சாட்டினார்.

“இனிமேல் கூச்சலிட மாட்டோம், விசில் அடிக்க மாட்டோம், ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிந்து நடப்போம் என எங்களிடம் போலீஸ் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டனர்." என்று அவர் கூறினார்.

மாணவரின் பெற்றோர் புகார்

பிபிசி தமிழிடம் பேசிய ஒரு மாணவரின் தந்தை, “புதன்கிழமை மாலை மானாமதுரை காவல் நிலைய காவலர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் மகன் பள்ளியில் விசில் அடித்து கூச்சல் எழுப்பியதாக பள்ளி தரப்பில் இருந்து புகார் கொடுத்துள்ளனர். அது தொடர்பாக நாளை காலை மானாமதுரை காவல் நிலையம் வர வேண்டும். காவல் நிலையம் வருவதற்கு முன் பள்ளிக்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியரை பார்த்துவிட்டு வர வேண்டும் என தெரிவித்தார்” என்றார்.

ஆனால், வியாழக்கிழமை காலை பள்ளி தலைமை ஆசிரியரை சந்திக்க சென்ற போது தலைமை ஆசிரியர் தன்னிடம் பேச மறுத்து அறையின் கதவை அடைத்துக் கொண்டதாக அவர் கூறுகிறார்.

வகுப்பின் கரும்பலகையில் எழுதும் மாணவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

"அப்போது பள்ளிக்கு வந்த காவல் ஆய்வாளர் என் மகன் விசில் அடித்து கூச்சலிட்டு ஆசிரியர்களுடன் பிரச்னை செய்ததால் முந்தைய தினம் போலீஸ் விசாரித்ததாக கூறினார்" என்கிறார் அவர்.

“மாணவர்களை காயம் ஏற்படும் அளவுக்கு அடிப்பதற்கு காவல்துறைக்கு யார் அனுமதி அளித்தது என்று போலீசிடம் கேட்டதற்கு அவ்வாறு காவல்துறையினர் அடிக்கவில்லை என்று கூறியதாக மாணவரின் தந்தை தெரிவித்தார்.

" 'போலீஸ் அடிக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் அடித்தார்களா' என்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டதற்கு 'இதை பெரிதுப்படுத்த வேண்டாம். மாணவர்கள் தொடர்ந்து எங்கள் பள்ளியில் படிக்கட்டும், பிரச்னை ஒன்றும் இல்லை' என எழுதி கொடுக்குமாறு கூறினார்” என்று மாணவரின் தந்தை தெரிவித்தார்.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்க போவதாக மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

காவல்துறை விளக்கம்

மாணவர்களும் அவர்களது பெற்றோரும், போலீசார் மீது வைக்கும் குற்றச்சாட்டு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு ஆய்வாளரை தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் சார்பில் விளக்கம் கேட்டோம், “பள்ளியின் நுழைவு வாயிலில் நின்றிருந்த ஆசிரியர்கள் பள்ளி அருகில் ரோந்து பணியில் இருந்த முதல்நிலைக் காவலர் அய்யனார், ஆயுதப்படை காவலர் லிங்கப்பிரபு ஆகியோரை அழைத்து 11ம் வகுப்பு மாணவர்கள் ஒருவொருக்கொருவர் உள்ளே பிரச்னை செய்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். அம்மாணவர்களை கண்டிக்குமாறு கூறியதன் அடிப்படையில் காவலர்கள் பள்ளியின் உள்ளே சென்று கண்டித்து இருக்கின்றனர்.

ஆசிரியர்கள் அழைத்ததால் பள்ளிக்குள் போலீசார் சென்று மாணவர்களை எச்சரித்தனர். துப்பாக்கியை காட்டி மிரட்டவோ பயமுறுத்தவோ இல்லை, பள்ளி மாணவர்களை போலீஸ் ஏன் துப்பாக்கியை காட்டி மிரட்ட வேண்டும்” என அவர் பதிலளித்தார்.

மாவட்ட கல்வி அலுவலர் விளக்கம்

மாணவர்களின் குற்றச்சாட்டு குறித்து ஆசிரியர்கள் தரப்பிலும் பள்ளி நிர்வாகத்திலும் பதில் தர மறுத்துவிட்டனர்.

பள்ளி வளாகத்திற்குள் சென்று போலீசார் மாணவர்களை தாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் (உயர்நிலை பள்ளி) வடிவேலிடம் பிபிசி தமிழ் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.

அவர் கூறுகையில், "போலீசார் மாணவர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகனை அழைத்து விளக்கம் கேட்கப்பட்டது.

பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பள்ளி அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் விசில் அடித்துக் கூச்சலிட்டதால் யாரும் அழைக்காமலேயே போலீசார் பள்ளிக்குள் வந்து மாணவர்களை கண்டித்துவிட்டு சென்றதாகவும், இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோரை அழைத்து சுமூகமாக பேசி பிரச்னையை சரி செய்ததாகவும் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நான் பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய உள்ளேன். ஆசிரியர்கள் அழைத்ததன் பேரில் பள்ளிக்குள் போலீசார் வந்ததாக உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை தயார் செய்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளேன்" என்று கூறினார்.

சிறார் நீதி சட்டம் என்ன சொல்கிறது?

இதுகுறித்து குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “சிறார் நீதிச் சட்டம் குழந்தைகளை இரண்டு வகையாக பிரிக்கிறது. முதலில் அன்பும் அரவணைப்பும் தேவைப்படும் குழந்தைகள். மற்றொன்று சட்டத்திற்கு புறம்பான செயல் செய்வதாக கருதப்படும் குழந்தைகள்.

குழந்தைகளை குற்றவாளியாக கருதாமல், நல்ல வழியில் மடைமாற்றம் செய்வதற்காகவே கூர்நோக்கு இல்லம் உள்ளது. குழந்தைகளை அங்கு வைத்து கவுன்சிலிங் கொடுத்து அவர்களை நல் வழிக்குக் கொண்டு வரவேண்டும்” என அவர் கூறினார்.

சிறார் தவறு செய்தால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லக் கூடாது, காவலர்கள் சீருடையில் சிறார்களை விசாரிக்கக் கூடாது, சிறார் நீதி குழுமம் அதிகாரிகளிடம் மட்டுமே புகார் அளிக்க முடியும் என்று சிறார் நீதி சட்டம் கூறுவதாக தேவநேயன் தெரிவித்தார்.

குழந்தைகள் உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன்
படக்குறிப்பு, குழந்தைகள் உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன்

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் குழு அல்லது 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தான் பள்ளி நிர்வாகம் மாணவர்கள் மீது புகார் அளித்திருக்க வேண்டும் என அவர் கூறுகிறார்.

“அப்படி புகார் அளித்திருந்தால் குழந்தைகள் நல குழு அல்லது மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களை அழைத்து பிரச்னையை விசாரித்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் அதற்கு மாறாக பள்ளி ஆசிரியர்கள் போலீசாரை அழைத்ததால் ஆசிரியர்கள் சிறார் நீதி சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

இவ்வாறான தவறான நடவடிக்கைகளால் பள்ளிக்கு வரும் சிறார்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும். எனவே, உடனடியாக இப்பிரச்னை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)