சோழர் கால மருத்துவமனையில் 950 ஆண்டுக்கு முன்பே 'அறுவை சிகிச்சை' - கல்வெட்டு பகிரும் வரலாறு

- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள தற்போதைய காலகட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் பல உள்ளன. சாதாரண தலைவலி முதல் இதயம் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரை மருத்துவத்துறை வெகுவாக முன்னேறிவிட்டது. நகர்ப்புறங்களில் பல மருத்துவமனைகள் 24 மணிநேரமும் இயங்குகின்றன.
இந்நிலையில் வரலாறு குறித்துப் பேசும்போது 'ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற மருத்துவமனைகள் இருந்தனவா? மக்கள் நோய்வாய்ப்பட்டபோது என்ன செய்தார்கள்?' என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. அதற்கு விடையாகவே, காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் பகுதியில் உள்ள ஆதுலர் சாலை இருக்கிறது.
சோழர் ஆட்சியில் 950 ஆண்டுகளுக்கு முன்பே அந்த இடத்தில் மருத்துவமனை செயல்பட்டு வந்திருப்பதாக இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும் துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், அந்த மருத்துவமனை பற்றிய முழு விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஆதுலர் சாலை என்பதன் பொருள் என்ன?
"ஆதுலர் சாலையை ஆதுலர் + சாலை என்று பிரித்துப் பொருள் கொண்டால் ஆதுலர் என்பதற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சாலை என்பதற்கு மருத்துவ நிலையம் என்றும் பொருள்படும். அதாவது, உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ நிலையம் என்றும் கூறலாம்," என்றார் அவர்.
"வைத்திய சாலையை நிர்வாகம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும், அங்கே பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கும் வைத்திய விருத்தி, வைத்திய பாகம், வைத்திய போகம், வைத்தியக் காணி, ஆதுலர் சாலைபுரம் போன்ற பெயர்களில் நிலதானம் கொடுக்கப்பட்டுள்ளன," என்றும் விளக்கினார்.
மூன்று நதிகள் சந்திக்கும் இடம்

திருமுக்கூடலில் செயல்பட்டு வந்த ஆதுலர் சாலை குறித்து அவர் தொடர்ந்து விவரித்தார்.
"காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் பாலாற்றின் கரையில் உள்ளது திருமுக்கூடல். பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் கலக்கும் இடம் என்பதால் இந்த ஊர் திருமுக்கூடல் எனப் பெயர் பெற்றது."
"இங்குள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் 950 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் ஆட்சியில் ஆதுலர் சாலை என்று அழைக்கப்படும் மருத்துவமனை செயல்பட்டுள்ளது."
"கோவில் முதல் பிரகாரத்தின் கிழக்குப் பக்கச் சுவரில் ராஜகேசரி வீரராஜேந்திர சோழனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1068) பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஆதுலர் சாலையைப் பற்றி விரிவாகத் தெரிவிப்பதாக" வஞ்சியூர். க.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மருத்துவமனை எவ்வாறு செயல்பட்டது?

அந்தக் கல்வெட்டின்படி, ராஜேந்திர சோழர் மாவலிவானராசன் என்ற இருக்கை சிம்மாசனத்தில் இருந்துகொண்டு 'வீரசோழன்' என்ற மருத்துவமனையை உருவாக்கி அதை நிர்வாகம் செய்வதற்கு உத்தரவையும் பிறப்பித்துளதாகக் கூறுகிறார் பன்னீர்செல்வம்.
கல்வெட்டின் அடிப்படையில் அந்த ஆதுலர் சாலை செயல்பட்ட விதம் குறித்து அவர் விளக்கினார். அதன்படி, "இந்த மருத்துவமனையில் திருக்கோவில்களில் பணியாற்றியவர்களுக்கும் வேத பாடங்களைப் பயில்கின்ற மாணவர்களுக்கும் வைத்தியம் பார்க்கப்பட்டுள்ளது."
"இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 15 படுக்கைகள் இருந்துள்ளன. இதில் மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், மூலிகை மருந்துகளைத் தயார் செய்கின்ற மருந்தாளுநர்கள் இரண்டு பேர், செவிலியர் இருவர், பொதுப் பணியாளர் ஒருவர் ஆகிய 7 பேர் பணி செய்துள்ளனர்."
அதுமட்டுமின்றி, அறுவை சிகிச்சை மருத்துவம் சல்லியக்கிரியை என்ற பெயரில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், மனித உடலில் ஏற்படும் பெரிய காயங்களை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தியதாகவும் விளக்குகிறார் பன்னீர்செல்வம்.
மருந்தாளுநர்கள் ஓராண்டு காலத்திற்கு நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை இருப்பு வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் அவற்றின் அளவுகளை சரிபார்த்தும் கணக்கிட்டும் வந்துள்ளனர்.
ஏறக்குறைய தற்பொழுது செயல்படும் மருத்துவமனை போலவே இந்த சோழர் கால மருத்துவமனையும் செயல்பட்டு வந்ததை கல்வெட்டு தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன" என்று அவர் கூறினார்.

20 வகை மருந்துகள்
வீரசோழன் மருத்துவமனையில் நாடி பாா்த்து சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவர் மற்றும் உதவியாளா்கள் பணிபுரிந்த விபரமும் அவா்களின் ஊதிய விவரம் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட உணவு வகை குறித்தும் கல்வெட்டு தெரிவிக்கிறது.
கோவிலின் ஒரு பகுதியான “ஜனநாத மண்டபம்” என்ற இடத்தில் மருத்துவனை செயல்பட்டு வந்திருப்பதாக வஞ்சியூர். க.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட கீழ்க்கண்ட மருந்துகளின் பெயா்கள் இந்த கோயில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
1.பிரம்மயம் கடும்பூரி
2.வாஸாரிதகி
3.கோமூத்திர கரிதகை
4.தஸமூல ஹரிதகி
5.பல்லாதக ஹரிதகி
6.கண்டிரம்
7.பலாகேரண்ட தைலம்
8.பஞ்சாக தைலம்
9.லசுநாகயேரண்ட தைலம்
10.உத்தம கரிநாடி தைலம்
11.ஸுக்ல ஸிகிரிதம்
12.பில்வாதி கிரிதம்
13.மண்டுகரவடிகம்
14.த்ரவத்தி
15.விமலை
16.ஸுநோரி
17.தாம்ராதி
18.வஜ்ரகல்பம்
19.கல்யாணலவனம்
20.புராணகிரிதம்
"இந்த மருந்துகளில் ஒன்றிரண்டு நீங்கலாக மீதமுள்ள அனைத்தும் தற்காலத்திலும் பயன்பாட்டில் உள்ளன. இம்மருந்துகளைப் பற்றிய விரிவான குறிப்புகளும் அவை தீா்க்கும் நோய் பற்றிய விபரங்களும் “சரஹா் சம்ஹிதை” என்னும் ஆயுா்வேத நூலில் காணப்படுகின்றது" என்று கூறினார்.

"சோழர் ஆட்சியில் பல இடங்களில் மருத்துவமனைகள்"
இதுபோல், சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோழர்கள் மிகச் சிறப்பாக ஆதுலர் சாலை என்று அழைக்கப்படக் கூடிய மருத்துவமனைகளை நடத்தி வருந்திருப்பதாக அவர் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகே கோயில் தேவராயன் பேட்டையில் உள்ள மத்தியபுரீஸ்வரர் திருக்கோவிலிலும், நன்னிலம் அருகே திருப்புகலூரில் உள்ள அக்னிபுரீஸ்வரர் திருக்கோவிலிலும் ஆதுலர் சாலை செயல்பட்டு வந்திருப்பதாக கல்வெட்டு ஆதாரங்களை சுட்டிக்காட்டி முனைவர் வஞ்சியூர். க.பன்னீர்செல்வம் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.












