'இந்தியா ரஷ்யாவிடம் 30 நாள் கச்சா எண்ணெய் வாங்கலாம்' - அமெரிக்கா கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா '30 நாள் விலக்கு' வழங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தை பராமரிக்க, அமெரிக்க கருவூலத் துறை இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க 30 நாள் விலக்கு அளித்துள்ளதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கூடுதலாக 25 சதவீத வரியை விதித்ததால், இந்தியா மீதான அமெரிக்காவின் மொத்த வரி 50 சதவீதமாக உயர்ந்திருந்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதியளித்துள்ளது. இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைக்காவிட்டால், இந்தியா மீதான வரி 18% இலிருந்து 25% ஆக உயர்த்தப்படும் எனறு டிரம்ப் அச்சுறுத்தியிருந்தார், இது யுக்ரேனுக்கு எதிராகப் போர் தொடுக்கும் ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும், நாட்டின் 140 கோடி மக்களின் எரிசக்தி தேவைகள் மற்றும் பாதுகாப்பு தன்னுடைய முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்று இந்தியா கூறியிருந்தது.
ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்து சுத்திகரிக்கும் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பின்னர் பல நாடுகளுக்கு பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா கூறியது என்ன?
இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு '30 நாள் எண்ணெய் கொள்முதல்' விலக்கை அறிவித்த அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தனது எக்ஸ் பக்கத்தில், "அதிபர் டிரம்பின் எரிசக்தி கொள்கையால் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது."
"உலக சந்தைக்கு தொடர்ந்து எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, அமெரிக்க கருவூலத் துறை இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதிக்கும் 'தற்காலிக 30 நாள் விலக்கை' அளிக்கிறது."
"இது மிகக் குறுகிய காலத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, எனவே இது ரஷ்ய அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி நன்மையை வழங்காது, ஏனெனில் இது ஏற்கனவே கடலில் சிக்கித் தவிக்கும் எண்ணெயை உள்ளடக்கிய எண்ணெய் ஒப்பந்தங்களை மட்டுமே அனுமதிக்கிறது."
"இந்தியா அமெரிக்காவின் ஒரு முக்கியமான பங்காளியாகும், அமெரிக்க எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரிக்கும் என்று நாங்கள் முழுமையாக எதிர்பார்க்கிறோம்."
"உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு இடையூறு செய்வதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் இரானின் முயற்சியால் உருவான அழுத்தத்தைக் குறைக்க இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது."
இரான் போர் ஏற்கனவே உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடந்து வரும் தாக்குதல்களும், ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி அதிகரித்து வரும் பதற்றங்களும் சர்வதேச எண்ணெய் சந்தையை சீர்குலைத்துள்ளன.
இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக இரான் அறிவித்தது, எந்தக் கப்பலையும் அவ்வழியாகச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று இரான் எச்சரித்தது.
இது உலகின் மிக முக்கியமான கடல் பாதையாகும். உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் 20 சதவீதம் இதன் வழியாகவே செல்கிறது.
இந்தியா தனது எண்ணெய் விநியோகத்தில் 40 சதவீதத்தை ஹோர்முஸ் ஜலசந்தியிலிருந்து பூர்த்தி செய்கிறது.

பட மூலாதாரம், ANDREW CABALLERO-REYNOLDS/AFP via Getty Image
இந்தியாவில் எண்ணெய் பற்றாக்குறை வருமா?
பிபிசி செய்தியாளர் சவுதிக் பிஸ்வாஸின் கூற்றுப்படி, இந்தியாவில் தற்போது எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றாக்குறை இல்லை, ஆனால் ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி நடந்து வரும் மோதல், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மிகவும் குறுகிய கடல் பாதையை எவ்வாறு சார்ந்துள்ளது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்திய நாட்களில் இந்தப் பகுதியில் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாகவும், அவ்வழியாக செல்லும் கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்றும் இரான் எச்சரித்துள்ளது.
இந்தியாவிற்கு இந்த ஆபத்து மிகப்பெரியது, ஏனெனில் இந்தியா தன் கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 25 முதல் 27 லட்சம் பீப்பாய்கள் இந்த வழித்தடம் வழியாகவே தினசரி வருகின்றன.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் இராக், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்தில் இருந்து வருகிறது.
முதலீட்டு நிறுவனமான ஜெஃப்ரிஸின் கூற்றுப்படி, கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு $10 அதிகரித்தால், இந்தியாவில் பணவீக்கம் சுமார் 0.2 முதல் 0.25 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்.
கடல்சார் புலனாய்வு நிறுவனமான கெப்ளரைச் சேர்ந்த ஆய்வாளர் சுமித் ரிட்டோலியா பிபிசி செய்தியாளர் சௌதிக் பிஸ்வாஸிடம் பேசுகையில், "இந்தியாவில் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் சுமார் 100 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உள்ளது. இதில் சுமார் 80 சதவீதம் பயன்படுத்தப்படலாம், இது சுமார் 30 முதல் 35 நாட்களுக்கு தேவைகளைப் பூர்த்தி செய்யும்." என்றார்.
கூடுதலாக, டீசல் மற்றும் விமான எரிபொருள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராகவும் இந்தியா உள்ளது. எனவே, தேவைப்பட்டால், உள்நாட்டு விநியோகத்தைப் பராமரிக்க இந்தியா இந்த ஏற்றுமதிகளைக் குறைக்கலாம்.
தற்போதைய சூழ்நிலையைச் சமாளிக்க போதுமான அளவுக்கு எண்ணெய் இருப்பு இருப்பதாக இந்திய அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது.
நிபுணர்களின் கருத்தும் அரசாங்கத்தின் அறிக்கையுடன் ஒத்துப்போகிறது. பொதுவாகத் தற்போதைய போர் ரஷ்யா-யுக்ரேன் போரைப் போல நீண்ட காலம் நீடிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல நிபுணர்கள் 15 நாட்களுக்கு மேல் சண்டை தொடர்ந்தால், அது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் கூறியுள்ளனர்.
74 நாளுக்கு போதுமான எண்ணெய் இருப்பு: இந்திய அரசு

பட மூலாதாரம், Dhiraj Singh/Bloomberg via Getty
ஜனவரியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மாநிலங்களவையில் கூறுகையில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சேமிப்பு வசதிகளில் வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய், உள்நாட்டுத் தேவையை 74 நாட்களுக்குப் பூர்த்தி செய்யப் போதுமானது என்றார்.
கச்சா எண்ணெய் இருப்பு 25 நாட்கள் வரை போதுமானது, அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பெட்ரோலியப் பொருட்களின் இருப்பு அடுத்த 25 நாட்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய போதுமானது என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது. இது குறுகிய கால விநியோக அதிர்ச்சிகளைச் சமாளிக்க வைக்கப்பட்டுள்ள உத்தி ரீதியான இருப்பிலிருந்து வேறுபட்டது.
இரான் டிரோன் தாக்குதலுக்குப் பிந்தைய எதிர்பாராத சூழ்நிலைகளை சுட்டிக்காட்டி இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தி வைக்கப் போவதாக சர்வதேச சந்தையில் அதன் மிகப்பெரிய விநியோகஸ்தரான கத்தார் கூறியுள்ளது.
இந்தியா தனது சுமார் 2.7 கோடி டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதியில் 40 சதவீதத்தை கத்தாரிலிருந்து வாங்குகிறது. எரிவாயு இறக்குமதி செய்யும் நிறுவனமான பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட் சப்ளையில் உள்ள இடையூறுகள் குறித்து தனது வாடிக்கையாளர்களான கெயில் இந்தியா மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












