சந்திரயான்-3: நிலாவைப் பற்றி நீங்கள் அறியாத 10 சிறப்புகள்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.
இஸ்ரோவின் இந்த சாதனை முயற்சியைத் தான் உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டுள்ளனர்.
சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டதன் மூலம் நிலவின் மீதான மக்களின் ஆர்வம் அதிகரித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.
கடந்த சில நாட்களாக இணையத்தில் நிலா தொடர்பான தேடல்கள் அதிகரித்துவருகின்றன. சந்திரன் தொடர்பான உங்களுக்குத் தெரியாத பத்து விஷயங்களை இங்கே சொல்கிறோம்.

பட மூலாதாரம், Getty Images
1. நிலா வட்டமாக இல்லை
பௌர்ணமி நாளில், சந்திரன் சரியாக முழு வட்டமாகத் தோன்றும்.
ஆனால் உண்மையில் சந்திரன் ஒரு செயற்கைக்கோளைப் போல் பந்து போன்ற வட்டமானது அல்ல. அது தட்டையான உருவ அமைப்பைப் பெற்றுள்ளது.
ஆனால், நீங்கள் சந்திரனைப் பார்க்கும்போது, அதன் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடியும்.
இத்துடன், சந்திரனின் எடை அதன் வடிவியல் மையத்தில் குவிந்திருக்கவில்லை.
நிலாவின் மொத்த எடையும் அதன் வடிவியல் மையத்திலிருந்து 1.2 மைல் தொலைவில் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
2. நிலாவை ஒருபோதும் நீங்கள் முழுமையாகக் காணமுடியாது
பொதுவாக நீங்கள் சந்திரனைப் பார்த்தால், அதிகபட்சமாக அதன் மொத்த உருவத்தில் 59 சதவீதத்தை மட்டுமே உங்களால் பார்க்க முடியும்.
பூமியிலிருந்து பார்க்கும் போது நிலாவின் 41 சதவீதம் பரப்பு கண்களுக்குத் தெரியாது.
நீங்கள் விண்வெளிக்குச் சென்று அங்கிருந்து நிலாவின் 41 சதவீத நிலப்பரப்பில் இறங்கி நின்று பார்த்தால் உங்களால் பூமியைப் பார்க்க முடியாது.

பட மூலாதாரம், Getty Images
3. நீல நிலாவுக்கும் (Blue Moon) எரிமலை வெடிப்புக்கும் இடையிலான தொடர்பு
1883 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் கிரகடோவா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக அதனுடன் நீல நிலாவைத் தொடர்புபடுத்தும் வழக்கம் நடைமுறைக்கு வந்ததாக நம்பப்படுகிறது.
அந்த எரிமலை வெடிப்பு பூமியின் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான எரிமலை வெடிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
உலக அளவில் கிடைத்துள்ள தகவல்களின்படி, அந்த எரிமலை வெடிப்பின்போது எழுந்த சத்தம் மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள பெர்த் நகர் வரை கேட்டது.
அதைத் தொடர்ந்து வளிமண்டலத்தில் அதிக அளவில் சாம்பல் பரவியது. சாம்பல் நிறைந்த இரவுகளில் சந்திரன் நீல நிறத்தில் தோன்றியது. இதற்குப் பிறகுதான், எரிமலை வெடிப்பையும், நீல நிலவையும் தொடர்புபடுத்தும் பழக்கம் ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
4. நிலவில் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் ரகசிய திட்டம்
பனிப்போரின் உச்சகட்டத்தில் நிலவில் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திட்டத்தை அமெரிக்கா தீவிரமாகப் பரிசீலித்த ஒரு காலம் இருந்தது.
அதன் நோக்கம் சோவியத் யூனியனை ஒரு அழுத்தத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் அமெரிக்க இராணுவத்தின் சக்தியைப் பற்றி பறைசாற்றுவதே ஆகும்.
இந்த ரகசிய திட்டத்தை 'நிலாவுக்கு மேற்கொள்ளப்படும் பயணங்கள் பற்றிய ஆய்வு' என்ற நோக்கில் 'Project A119' என்ற பெயரில் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
5. நிலவில் ஏன் ஆழமான குழிகள் ஏற்படுத்தப்பட்டன
ஒரு பாம்பு சூரியனை விழுங்குவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்று தென்கிழக்கு ஆசியாவில் ஒரு பழங்கால நம்பிக்கை உள்ளது.
சீனாவிலும் இதே போல் ஒரு பழக்கம் இருந்த நிலையில், கிரகணம் ஏற்படும் போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன மக்கள் முடிந்தவரை சத்தம் போடுவதை வழக்கமாகக்கொண்டுள்ளனர்.
இதே போல் நிலவில் உள்ள குழிகளில் ஒரு தவளை அமர்ந்திருகிறது என்றும் பழங்கால சீனர்கள் நம்பினர்.
ஆனால் நிலவில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள், அதாவது ஆழமான குழிகள், நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கோள்கள் மோதியதால் உருவானவை என்பது தான் உண்மை.

பட மூலாதாரம், SPACE FRONTIERS / STRINGER
6. பூமியின் வேகத்தைக் குறைக்கும் நிலா
நிலா பூமிக்கு மிக அருகில் இருந்தால், அது அண்மைநிலை (Perigee) என்று அழைக்கப்படுகிறது.
இந்த நேரத்தில், கடல் அலையின் வேகம் வழக்கத்தை விட கணிசமாக அதிகரிக்கிறது.
அப்போது, சந்திரன் பூமியின் சுழற்சி சக்தியையும் குறைக்கிறது. இதன் காரணமாக பூமி சுற்றும் கால அளவு ஒவ்வொரு நூற்றாண்டிலும் 1.5 மில்லி விநாடிகள் குறைகிறது.

பட மூலாதாரம், Getty Images
7. நிலாவிலிருந்து எவ்வளவு வெளிச்சம் கிடைக்கிறது?
சூரியன் முழு நிலவை விட 14 மடங்கு பிரகாசமாக இருக்கிறது.
ஒரு பௌர்ணமியில் தோன்றும் ஒளியில் இருந்து சூரியனின் ஒளிக்கு சமமான ஒளியை நீங்கள் விரும்பினால், உங்களுக்கு 3,98,110 நிலவுகள் தேவைப்படும்.
சந்திர கிரகணம் ஏற்பட்டு, நிலா பூமியின் நிழலில் நுழையும் போது, அதன் மேற்பரப்பு வெப்பநிலை 500 பாரன்ஹீட் வரை குறைகிறது.
மேலும், இந்த கிரகணம் 90 நிமிடங்களுக்கும் குறைவான காலத்திற்கு மட்டுமே நீடிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
8. லியோனார்டோ டாவின்சி நிலாவைப் பற்றி என்ன கண்டுபிடித்தார்?
சில நேரங்களில் நிலா ஒரு வளையம் போல் தெரிகிறது. இதை அர்த்தசந்திரா அல்லது பால்சந்திரா என்றும் அழைக்கிறோம்.
அத்தகைய சூழ்நிலையில், சந்திரனின் மையத்தில் சூரியன் பிரகாசிப்பது போன்ற ஒன்றைக் காண்கிறோம்.
சந்திரனின் மற்ற பகுதிகள் மங்கலான பின்னணியில் மட்டுமே தெரியும். இதை வைத்துக்கொண்டு நாம் நிலவு சுருங்குவதாக நினைக்கிறோம்.
ஆனால், நிலா சுருங்கவில்லை என்பது மட்டுமின்றி விரிவடைவதும் இல்லை என்றும், அதன் ஒரு பகுதி மட்டுமே நம் பார்வையில் இருந்து மறைகிறது என்றும் உலகில் முதன்முதலாக லியோனார்டோ டா வின்சி கண்டுபிடித்தார்.

பட மூலாதாரம், Getty Images
9. சந்திரனில் உள்ள பள்ளத்தின் பெயர்கள் எதனடிப்படையில் சூட்டப்படுகின்றன?
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவில் உள்ள பள்ளங்களுக்கு மட்டுமல்லாமல் விண்வெளியில் தெரியும் எந்த ஒரு பொருளுக்கும் பெயர் வைக்கும் பணியையும் மேற்கொண்டுவருகிறது.
சந்திரனில் உள்ள பள்ளங்களுக்கு பிரபல விஞ்ஞானிகள், கலைஞர்கள் அல்லது ஆய்வாளர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன.
அப்பல்லோ பள்ளம் மற்றும் மேயர் மாஸ்கோவின்ஸின் அருகிலுள்ள பள்ளங்களுக்கு அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
மேயர் மாஸ்கோவின்ஸ் என்பது சந்திரனின் கடல் பகுதி என்று அழைக்கப்படுகிறது.
சந்திரனைப் பற்றி மனிதர்களுக்குத் தெரியாத மேலும் பல விஷயங்கள் உள்ளன.
அரிசோனாவின் லோவெல் அப்சர்வேட்டரி ஆஃப் ஃபிளாக்ஸ்டாஃப் (Lowell Observatory of Flagstaff) 1988 ஆம் ஆண்டில் சந்திரனைப் பற்றி ஒரு ஆய்வு நடத்தியது.
இதில் பங்கேற்ற 13 சதவீதம் பேர் நிலவு பாலாடைக்கட்டியால் ஆனது என கருதுவதாக தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
10. நிலாவின் மர்மம் நிறைந்த தென்துருவம்
சந்திரயான்-3 செயற்கைக்கோள் சென்றடைய முயற்சிக்கும் நிலவின் தென் துருவப் பகுதி மிகவும் வியப்பை ஏற்படுத்தும் பகுதியாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கூற்றின்படி, இந்த பகுதியில் பல ஆழமான குழிகளும் மலைகளும் உள்ளன என்றும், அவற்றைத் தாண்டி, சூரிய ஒளி பல பில்லியன் ஆண்டுகளாக அந்த நிலப்பரப்புகளை அடையவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
- சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












