ரஷ்யா: மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதலில் 93 பேர் பலி, 11 பேர் கைது; முன்பே எச்சரித்த அமெரிக்கா - என்ன நடந்தது?

மாஸ்கோ தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாஸ்கோவில் "பெரிய கூட்டங்களை" குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவை எச்சரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
    • எழுதியவர், பால் கிர்பி & ஆண்ட்ரே ரோடன்-பால்,
    • பதவி, பிபிசி நியூஸ்

மாஸ்கோவின் எல்லையில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில், குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிபிசி சரிபார்த்த வீடியோ காட்சிகளின்படி, வடமேற்கு புறநகர் கிராஸ்னோகோர்ஸ்கில், குறைந்தது நான்கு பேர் உடல் முழுவதும் மறைத்தவாறு உடை அணிந்துகொண்டு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குரோகஸ் சிட்டி ஹால் வளாகத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருந்தது. அப்போது அரங்கிற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது தீவிரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் கட்டடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்தது மட்டுமின்றி, மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதில் பலியானவர்களில் குழந்தைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்த "பயங்கரவாத தாக்குதலை" கடுமையாக கண்டனம் செய்துள்ளது.

இணையத்தில் பரவிவரும் சரிபார்க்கப்படாத அறிக்கையின்படி, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஐஎஸ் தீவிரவாதக் குழு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் குறித்து முன்பே எச்சரித்த அமெரிக்கா

மாஸ்கோ தாக்குதல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, மாஸ்கோ இசை அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதல்

இதுகுறித்து பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தி முகமையிடம் பேசியுள்ள அமெரிக்க அதிகாரிகள், ஐஎஸ் அமைப்பு ரஷ்யாவை தாக்க உள்ளது என உளவுத் தகவல் கிடைத்ததாகக் கூறினர்.

மேலும், மாஸ்கோவில் "பெரிய கூட்டங்களை" குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவை எச்சரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிப்பதற்காக சம்பவ இடத்தில் சிறப்புப் பிரிவுகள் செயல்பட்டு வருவதாக ரஷ்யாவின் தேசிய காவல் அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய உயர் அதிகாரிகளும் கிராஸ்னோகோர்ஸ்க்கு சென்றுள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, "தீவிரவாதிகள் மாஸ்கோவில் பெரிய கூட்டங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் திட்டங்களைக் கொண்டுள்ளனர்," என்ற தகவல் குறித்து கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள அமெரிக்க குடிமக்கள் பெரிய கூட்டங்களைத் தவிர்க்குமாறும் அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை செய்தது.

பின்னர் வெள்ளிக்கிழமை மாலை தனது அறிவிப்பைப் புதுப்பித்து வெளியிட்ட அமெரிக்கா, தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் இருப்பதைத் தவிர்க்குமாறு தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

மாஸ்கோ தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இசைக்குழு மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார்.

குரோகஸ் சிட்டி ஹால் வளாகத்தில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிக்காக 6,000க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் குவிந்தனர். இந்நிலையில் இசைக்குழு மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார். அதேநேரம் இசைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தற்போது வரை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நேரடியாக மக்களிடம் பேசவில்லை. ஆனால், அவரது அலுவலகத்தைச் சேர்ந்த மற்றுமொரு அதிகாரி, பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து நலம்பெறத் தனது ஆறுதல்களைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது நுழைவுவாயில் ஒன்றில் பணியில் இருந்த காவலர் ஒருவர், எப்படி இந்த வன்முறை கும்பல் ஆயுதங்களோடு அரங்கிற்குள் நுழைந்தது என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

"அங்கு மூன்று பாதுகாவலர்கள் இருந்தனர். தாக்குதல் மேற்கொண்டவர்களைப் பார்த்தவுடன் அவர்கள் ஒரு விளம்பரப் பலகையின் பின்னால் ஒளிந்து கொண்டனர்," என்று அவர் ரஷ்ய டெலிகிராம் சேனலான பாசாவிடம் கூறியுள்ளார்.

மேலும் "தாக்குதல் மேற்கொண்ட அந்த நபர்கள் எங்களிடமிருந்து 10 மீ [30 அடி] தொலைவில் நின்றுகொண்டு, தரைத் தளத்தில் இருந்தவர்களை நோக்கி கண்முன் தெரியாமல் சுடத் தொடங்கினர்," என்று தெரிவித்துள்ளார் அவர்.

அரங்கின் உள்ளே இருந்த பெண் ஒருவர், தானும் மற்ற பார்வையாளர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதை உணர்ந்தவுடன், மேடையை நோக்கி ஓடியதாக ரஷ்ய தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார் .

"அங்கிருந்த ஸ்டாலில் ஒரு நபரை ஆயுதத்துடன் பார்த்தேன். அங்கு துப்பாக்கிச் சூடு நடந்தது. நான் ஒலிபெருக்கியின் பின்னால் மறைந்தவாறு செல்ல முயன்றேன்," என்று அவர் கூறியுள்ளார்.

மாஸ்கோ தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாக்குதலின்போது, அந்த வளாகத்தில் குழந்தைகளும் இளைஞர்களும் இருந்ததாக நேரில் கண்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்டடத்தின் இரண்டு மேல்தளங்களில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் முகப்புப் பகுதி தீயில் சிக்கிக்கொண்டது. இதன் விளைவாக எழுந்த புகை வானத்தில் பரவத் தொடங்கியது.

தாக்குதல் நடத்தியவர்கள் வீசிய ஒருவகை நெருப்பு உண்டாக்கும் கருவியின் விளைவாகவே தீ பற்றியதாகத் தெரிய வந்துள்ளது.

இசைநிகழ்ச்சி அரங்கில் பால்கனியில் இருந்த விட்டலி தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதைப் பார்த்துள்ளார். இதுகுறித்து விவரித்த அவர், "அவர்கள் சில பெட்ரோல் குண்டுகளை வீசினர், அனைத்தும் எரிய ஆரம்பித்தன. நாங்கள் வெளியேறும் வழியை நோக்கி ஓடத் தொடங்கினோம்,” என்றார்.

தாக்குதலின்போது, அந்த வளாகத்தில் நடைபெற்ற பால்ரூம் நடனப் போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்களும் இருந்ததாக நேரில் கண்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரங்கில் இருந்தவர்களில் சிலர் மேடையில் இருந்து பார்க்கிங் பகுதிக்கு தப்பிச் செல்ல முடிந்தது. மற்றவர்கள் மேல்பகுதிக்குச் சென்றனர். மேலும் 100 பேர் கட்டடத்தின் அடித்தளத்தின் வழியாக தப்பிச் சென்றதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

டஜன் கணக்கான அவசர ஊர்திக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

மாஸ்கோ தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, இந்தச் சம்பவத்தை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும், இதுவொரு கொடூரமான குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தையொட்டி தலைநகரில் நடைபெற இருந்த அனைத்து பொது நிகழ்வுகளையும் ரத்து செய்துள்ள மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான், "பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்காக நான் வருந்துகிறேன்," என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அடுத்த சில மணிநேரங்களில் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உட்பட பல பிராந்தியங்களும் நடக்கவிருந்த பொதுநிகழ்வுகளை ரத்து செய்துள்ளன.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, இந்தச் சம்பவத்தை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும், இதுவொரு கொடூரமான குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா யுக்ரேன் மீது இரண்டு ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று யுக்ரேன் கூறியுள்ளது.

"யுக்ரேனுக்கு நடந்துள்ளது என்னவாகினும், அதற்கான முடிவு போர்க்களத்தில் மட்டுமே தீர்மானிக்கப்படும்" என்று யுக்ரேன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.

ஆறு நாட்களுக்கு முன்புதான் ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாதிமிர் புதின் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் உண்மையான எதிர்க்கட்சிகள் எதுவும் இல்லை, தேர்தல் சுதந்திரமானதோ அல்லது நியாயமானதோ அல்ல என்று மேற்கத்திய நாடுகள் கண்டனம் செய்துள்ளன.

யுக்ரேனிய ராணுவ புலனாய்வு செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரி யூசோவ் இந்தத் தாக்குதல் எந்த ஆதாரமும் இல்லாமல், "புதினின் சிறப்பு சேவைகளால் வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்ட செயல்" என்று கூறியுள்ளார்.

மாஸ்கோ தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் மாஸ்கோவில் மக்களை நோக்கி நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாகும்.

இது 2002இல் தலைநகரில் நடத்தப்பட்ட தியேட்டர் தாக்குதலை நினைவுபடுத்தியுள்ளது. அந்தச் சமபவத்தில் 40 செச்சென் போராளிகள் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 900க்கும் மேற்பட்ட மக்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர்.

இறுதியில் அந்த தியேட்டர் அரங்கிற்குள் நுழைந்த ரஷ்ய பாதுகாப்புப் படை தூக்க வாயுவை உள்ளே செலுத்தியது. இந்தச் சம்பவத்தில் 130 பணயக் கைதிகள் இருந்தனர்.

தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, துப்பாக்கிச் சூடு காட்சிகள் "பயங்கரமானதாகவும் பார்ப்பதற்கு கடினமாகவும் இருந்தன" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் "இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே எங்களது சிந்தனை இருக்கும்," என்று அவர் கூறியுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)