நம்பர் லாட்டரி சூதாட்டம்: சென்னை புறநகரில் வாட்ஸ்அப், ஜிபே மூலம் ரகசியமாக நடப்பது எப்படி?

சென்னை புறநகரில் லாட்டரி சூதாட்டம்
    • எழுதியவர், லிங்கேஷ்குமார்.வே
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழநாட்டில் 2003 ஆம் ஆண்டே லாட்டரி சீட்டு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு விட்ட போதிலும், நம்பர் லாட்டரி சூதாட்டம் விற்பனை இன்றளவும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில், சென்னை புறநகர் பகுதிகளில் நம்பர் லாட்டரி சூதாட்டம் நடப்பதாக அடுத்தடுத்து புகார்கள் வருகின்றன. அதுகுறித்து நேரடியாக தெரிந்து கொள்ள பிபிசி தமிழ் சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்ட போது அதிர வைக்கும் தகவல்கள் கிடைத்தன.

லாட்டரி சூதாட்டம் நடத்தும கும்பல் செயல்படுவது எப்படி? நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பணப் பரிமாற்றம் நடப்பது எப்படி? அந்த கும்பலிடம் ஏழை கூலித் தொழிலாளர்கள் சிக்கி ஏமாறுவது எப்படி?

லாட்டரி சூதாட்டம் எப்படி செயல்படுகிறது?

நமது கள ஆய்வில் கண்ட காட்சிகள் அதிர்ச்சி தருபவையாக இருந்தன. சென்னையின் புறநகர் பகுதிகளில் பரபரப்பு இல்லாத பகுதிகளில் சிறிய கடையோ, வீடோ எடுக்கும் இந்த கும்பல் முதலில் வாடிக்கையாளர்களை சேர்க்கிறது. தினக்கூலி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் நம்பர் லாட்டரி சூதாட்டம் மீது இருக்கும் மோகத்தால் இங்கு தேடி வந்து சேர்கின்றனர். வாடிக்கையாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க, இவர்களுக்காக வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்பட்டுகிறது.

இந்த குழுவில் மூன்று அல்லது ஐந்து எண்களை கொண்ட பட்டியல் ஒன்றை வெளியிடுகின்றனர். இதில் ஒரு எண்ணையோ அல்லது பல எண்களையோ பணம் கொடுத்து வாங்க வேண்டும். தாங்கள் வாங்கும் எண்ணுக்கு பரிசு விழுந்தால் அதை ஆயிரம் மடங்கு பரிசு வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறி இந்த மோசடி நடைபெறுகிறது.

கேரளா, பூடான், அசாம் என பல்வேறு மாநிலங்களின் லாட்டரி விற்பனையை மையமாக கொண்டு தமிழ்நாட்டில் செயல்படுகிறது இந்த நம்பர் லாட்டரி சூதாட்டம். எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் நடத்தப்பட்டு வந்த இந்த காட்டன் சூதாட்டம், இப்போது ஊருக்கு ஊர் பெருகி வருவதை காணமுடிகிறது. சிலர் சில ஆயிரங்களை சம்பாதித்துவிட்டு பல லட்ச ரூபாய்களை இழக்கின்றனர். 70 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நம்பர் லாட்டரிக்கு பரிசு விழுந்தால் 100 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பரிசாக கிடைக்கும் என்று அறிவிக்கப்படுகிறது.

சென்னை புறநகரில் நம்பர் சூதாட்டம்
படக்குறிப்பு, ரகசியமாக செயல்படும் சூதாட்ட கும்பல்
சென்னை புறநகரில் லாட்டரி சூதாட்டம்

பாதிக்கப்படும் சாமானிய மக்கள்

தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய ஆவடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகர் ஒருவர், தனது நண்பர் மூலமாக இந்த நம்பர் லாட்டரி சூதாட்டத்தில் சிக்கியதாகவும், முதலில் இந்த சூதாட்டத்தில் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் பரிசு விழுந்தத நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் நான்கு லட்ச ரூபாய் வரை பணத்தை இழந்திருப்பதாகவும் கூறினார். தான் ஈட்டிய வருவாயில் பெரும்பகுதியை இந்த நம்பர் சூதாட்டத்தில் இழந்து விட்டதாகவும், ஒரு கட்டத்தில் குடும்ப செலவுக்கே பணம் இல்லாமல் தற்போது கடனாளியாக நிற்பதாகவும், இருப்பினும் நம்பர் லாட்டரி மீதான மோகம் குறையாததால் கடன் வாங்கியாவது தினமும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தன்னை போல தினமும் கிடைக்கும் சொற்ப வருவாயை இந்த நம்பர் லாட்டரி சூதாட்டத்தில் இழந்து ஆயிரக்கணக்கானோர் தவித்து வரும் நிலையில், இதனை முற்றிலும் ஒழிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை புறநகரில் நம்பர் சூதாட்டம்
சென்னை புறநகரில் நம்பர் சூதாட்டம்

சூதாட்டத்திற்கு உதவும் நவீன தொழில்நுட்பம்...

வாடிக்கையாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்குகிறது இந்த சூதாட்ட கும்பல். ஒரு பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வாடிக்கையாளர்களாக சேர்ந்துவிடும் நிலையில், அவர்கள் அனைவரும் நேரில் வந்து எண்களை தேர்வு செய்வதோ, பணத்தை செலுத்துவதோ முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் இவர்களுக்கு என்று வாட்ஸ் ஆப்பில் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதில் வாடிக்கையாளர்கள் இணைக்கப்படுகின்றனர்.

அதன் பின்னர் தினமும் வாடிக்கையாளர்களுக்கு நான்கு இலக்க எண் உதாரணமாக 1234 என ஒரு பட்டியல் வெளியிடப்படும். அதில் ஏதேனும் ஒரு எண்ணை தேர்தெடுத்து பதிவு செய்ய வேண்டும். 20 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை பணம் செலுத்த வேண்டும். ஒருவர் அவரின் வசதிக்கு ஏற்ப எத்தனை எண்களை வேண்டுமானாலும் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். பணத்தை நேரடியாக வந்து செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. பேடிஎம், ஜிபே மூலமாக பணத்தை செலுத்துகிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும் எண் சரியாக இருந்து பரிசு விழுந்தால், 70 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு பகுதியிலும் சுமார் 5 ஆயிரம் பேர் வரை தினமும் இந்த சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

சென்னை புறநகரில் நம்பர் சூதாட்டம்
சென்னை புறநகரில் நம்பர் சூதாட்டம்

வெற்றி முடிவுகள், பரிசு பணம் வழங்கப்படுவது எப்படி?

இந்த கும்பலிடம் சிக்குவது, தினக்கூலி தொழிலாளர்கள், ஆடோ ஓட்டுனர்கள் என தினமும் உழைத்து வேர்வை சிந்தி சம்பாதிக்கும் தொழிலாளர்களே அதிகம். கேரளா, அசாம் போன்ற மாநிலங்களில் வெளியிடப்படும் லாட்டரி சீட்டுகளுக்கும் தமிழ்நாட்டில் நடைபெறும் நம்பர் லாட்டரி சூதாட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. என்றாலும் கேரளா, அசாம் மாநிலங்களில் வெளியிடப்படும் லாட்டரி சீட்டுகளின் நம்பர்களை அடிப்படையாக கொண்டே தமிழ்நாட்டில் நம்பர் லாட்டரி சூதாட்டம் நடைபெறுகிறது.

அதாவது கேரளா, அசாம் மாநிலத்தில் எந்த லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுகிறதோ, அதே எண்ணை தேர்தெடுப்பவர்களுக்கே தமிழ்நாட்டிலும் பரிசு வழங்கப்படும். பரிசு தொகை விழுந்தால் அன்று மாலை அல்லது மறுநாள் காலை பரிசு தொகை வழங்கப்படுகிறது. இதையும் நேரில் சென்று வாங்க வேண்டியதில்லை. ஜிபே, போன் பே, பேடிஎம் மூலமாக பணம் வந்து சேர்ந்து விடும். ஒவ்வொரு பகுதியிலும் நாள் ஒன்றுக்கு 20 லட்ச ரூபாய் வரை வசூலாகிறது.

சென்னை புறநகரில் நம்பர் சூதாட்டம்

காட்டன் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நம்பர் லாட்டரி சூதாட்டம் குறித்து சமூக செயல்பாட்டாளரும், பத்து ரூபாய் இயக்கத்தில் மாநிலச்செயலாளர் பாஸ்கரிடம் பேசினோம். அவர் பேசுகையில், "10 ரூபாய் செலுத்தினால் 1000 ரூபாய் கிடைக்கும் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டுகிறது என்ற ஆசைவார்த்தை கூறி வியர்வை சிந்தி உழைக்கும் மக்களை சுரண்டுகிறது இந்த கும்பல். குறிப்பாக பெட்டிக்கடை மற்றும் சிறு வீடுகளை வாடகைக்கு எடுத்து இந்த காட்டன் சூதாட்டம் நடத்தப்படுகிறது. சிலர் வீடுகளுக்குள் அலுவலகம் அமைத்து சூதாட்டத்தை நடத்துகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 3ம் நம்பர் காட்டன் தான் மாஸ் காட்டுகிறது. நம்பர் எழுதிய சின்ன சின்ன டோக்கன்களை பணம் கொடுத்து வாங்க வேண்டும். பிறகு ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை அறிவிக்கப்படும் முடிகள் இதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக மொபைல்ஆப் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் வெளியிடப்படுகிறது.

சென்னை புறநகரில் நம்பர் சூதாட்டம்
படக்குறிப்பு, பாஸ்கர், மாநிலச்செயலாளர், பத்து ரூபாய் இயக்கம்

வெற்றி பெறுபவர்களுக்கு குறைவான பணமே கொடுக்கப்படுகிறது. ஆனால், ஒரு மணிநேரத்திற்கு 15 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பெரும் முதலாளிகள் இந்த சூதாட்டத்தின் மூலம் பெருவதாக கூறப்படுகிறது. மிட்டர் வட்டிக்கு கடன் வாங்கி காட்டன் சூதாட்டத்தில் விளையாடிய பல பேர் வீடு, பொருட்களை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். கடனாளியான சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகள் இருப்பதாகவும், இதில், பல கோடி ரூபாய் புரளுவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் காட்டான் ஜாக்பாட் என்ற பெயரில் சென்னை புறநகர் பகுதிகளான திருவள்ளூர்,ஆவடி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் நடத்தி வரும் சூதாட்டத்தை காவல்துறையினரும் கண்டுகொள்ளவில்லை.ஆகையால் இதுபோன்ற ஏழை மக்களின் வாழ்க்கையை சூதாடும் காட்டன் சூதாட்டத்தை தமிழக அரசு காவல்துறை மூலம் இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்." என்று தெரிவித்தார்.

ஆவடி காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை புறநகர் பகுதியான திருவேற்காடு, நசரத்பேட்டை போன்ற இடங்களில் நம்பர் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன் காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். திருவேற்காடு பள்ளிக்குப்பம் சாலையில் நம்பர் லாட்டரி சூதாட்டம் நடைபெறுவதாக செய்தி வெளியான நிலையில் அங்கு சென்ற காவல்துறையினர் 2 பேரை கைது செய்தனர். ஆனாலும் இடத்தை மட்டும் மாற்றிக் கொள்ளும் சூதாட்ட கும்பல், சூதாட்ட தொழிலை மட்டும் விடுவதாக இல்லை.

சென்னை புறநகரில் நம்பர் சூதாட்டம்
படக்குறிப்பு, சங்கர், ஆவடி காவல் ஆணையர்

இந்த நிலையில் ஆவடி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் நம்பர் லாட்டரி சூதாட்டம் குறித்து ஆவடி மாநகராட்சி காவல் ஆணையராக புதிதாக பதவியேற்று இருக்கும் சங்கர் ஐ.பி.எஸ். அவர்களிடம் கேட்டபோது, ஏற்கெனவே தான் சேலம் மாநகர காவல் ஆணையராக இருந்த போது, அப்பகுதிகளில் இதுபோன்ற புகார்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளார். அதேபோல ஆவடி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நம்பர் லாட்டரியை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாக கூறிய ஆணையர் சங்கர், தேவை ஏற்பட்டால் தனிப்படை அமைத்து நம்பர் லாட்டரி சூதாட்டத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: