நாம் ஏன் மூக்கில் விரல் விட்டு நோண்டுகிறோம்? - ஆய்வு செய்து 'ஐஜி நோபல்' பரிசு பெற்ற இந்தியர்கள்

உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜேசன் கோல்ட்மேன்
    • பதவி, பிபிசிக்காக

மூக்கின் உள்ளே விரல் விட்டு நோண்டும் பழக்கம் நம்மில் பலருக்குமே உண்டு. இந்தப் பழக்கத்தால் சில நேரங்களில் சங்கடங்களை எதிர்கொண்டிருப்போம். சில நேரங்களில் பிறர் இப்படிச் செய்வதைப் பார்த்து முகம் சுழித்தும் இருப்போம்.

ஆனால், நாம் ஏன் இப்படிச் செய்கிறோம் என்று என்றாவது யோசித்திருப்போமா? இந்தக் கேள்வியை இரண்டு இந்தியர்கள் சிந்தித்தார்கள். அதுகுறித்து ஆராய்ச்சியும் செய்து, ‘ஐஜி நோபல்’ பரிசையும் அந்த ஆய்வுக்காக வென்றார்கள்.

“மூக்கை நோண்டுவது அருவருப்பான, ஆரோக்கியமற்ற பழக்கம். இது சுகாதாரக் கேடானது. ஆனாலும் இந்தப் பழக்கம் மக்களிடம் மிகவும் பொதுவான ஒன்று,” என்கிறார் ஜேசன் கோல்ட்மேன்.

பொதுவாக பலரிடமும் இந்தப் பழக்கம் இருந்தாலும்கூட, அதை ஒப்புக்கொள்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே.

நாம் மூக்கில் கையை விடும்போது யாராவது பார்த்துவிட்டால் தர்மசங்கடம்தான். அவமானகரமாகக் கருதுகிறோம், அதேவேளையில் வேறு யாராவது மூக்கில் கைவிட்டு நோண்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர்களைக் கேலி செய்கிறோம்.

மூக்கின் உள்ளே விரலை விடுவது என்பது உண்மையிலேயே தவறான பழக்கமா? அதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?

மூக்கினுள் கையை விடும் இந்தப் பழக்கத்திற்கு Rhinotillexomania என்று பெயர். இந்தப் பழக்கம் தொடர்பாக முதன்முதலாக கடந்த 1995இல் அமெரிக்காவை சேர்ந்த தாம்சன், ஜெஃப்பர்சன் என்ற ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு மேற்கொள்வதற்காக 1000 பேருக்கு அவர்கள் ஈ-மெயில் அனுப்பியிருந்தனர். ஆனால், 254 பேர் மட்டுமே அவர்களுக்குப் பதிலளித்தனர். அதில், 91 சதவீதம் பேர் தங்களுக்கு மூக்கில் விரலை விடும் பழக்கம் இருப்பதாக ஒப்புக்கொண்டனர்.

1.2 சதவீதம் பேர் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தாங்கள் மூக்கில் விரலை விட்டு நோண்டுவதாகத் தெரிவித்தனர். இரண்டு பேர், இந்தப் பழக்கம் தங்களின் தினசரி வாழ்க்கையில் இடையூறு செய்வதாகத் தெரிவித்தனர்.

மேலும், இரண்டு பேர் மூக்கில் விரலை விட்டுப் பிடுங்கும் பழக்கத்தால், வலது மற்றும் இடது நாசியை பிரிக்கும் மெலிதான திசுவில் காயத்தை ஏற்படுத்திக்கொண்டதாகத் தெரிவித்தனர்.

தாம்சன், ஜெஃப்பர்சன் மேற்கொண்ட இந்த ஆய்வை முழுமையானதாக நாம் கருத முடியாது. ஏனெனில் 1000 பேரில் 25 சதவீதம் பேர்தான் இந்த ஆய்வில் பங்கேற்றனர். மூக்கில் கையை விடும் பழக்கத்தில் ஈடுபடும் கூடுதல் நபர்கள் பங்கேற்றிருந்தால் இந்த ஆய்வின் முடிவுகள் மேலும் முழுமை பெற்றதாக இருந்திருக்கும்.

இந்தப் பழக்கம் தவிர்க்க வேண்டிய ஒன்றுதான். ஆனால், நிச்சயமாக பலரும் இந்தப் பழக்கத்தில் ஈடுபடுவது உண்டு.

உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது

5 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூருவில் உள்ள மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களான சித்தரஞ்சன் ஆண்ட்ரேட், பி.எஸ். ஸ்ரீஹரி ஆகியோர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் மூக்கில் விரலை விட்டு நோண்டும் பழக்கம் பெரியவர்களைவிட இளைஞர்களிடம் அதிகமாக இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். எனவே, பெரியவர்களைவிட இளைஞர்களிடம் கூடுதல் ஆய்வை நடத்துவது இந்தப் பழக்கம் குறித்த தெளிவான முடிவுகளைக் கொடுத்திருக்கும்.

இதேபோல், பெங்களூருவில் உள்ள பணக்காரர்கள், நடுத்தர மக்கள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களிடமும் இது தொடர்பாக மற்றோர் ஆய்வு நடத்தப்பட்டது.

200 இளைஞர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு இந்தப் பழக்கம் இருப்பதை ஒப்புக்கொண்டனர். ஒருநாளைக்கு குறைந்தது 4 தடவையாவது இப்பழக்கத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

7.6 சதவீதம் பேர் ஒரு நாளைக்குக் குறைந்தது 20 தடவையாவது இப்பழக்கத்தில் தாங்கள் ஈடுபடுவதாகவும், 20 சதவீதம் பேர் இப்பழக்கம் பெரிய பிரச்னைக்குரியது என்று ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

நாசியில் உள்ள அழுக்கை அகற்றவும், அரிப்பை சரி செய்வதற்கும் இப்பழக்கத்தில் ஈடுபடுவதாகப் பலர் தெரிவித்தனர். 12 சதவீதம் பேர், இந்தப் பழக்கத்தில் ஈடுபடுவது நன்றாக இருப்பதால் அவ்வாறு செய்கிறோம் என்று தெரிவித்தனர்.

உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

9 மாணவர்கள், மூக்கில் விரலை மட்டும் விடாமல் பென்சில் போன்றவற்றையும் விடுவதாகத் தெரிவித்தனர். இந்தப் பழக்கத்தில் எவ்வித சமுதாய இடைவெளியோ, பாலின இடைவெளியோ இல்லை.

குழந்தைகளிடம் இந்தப் பழக்கம் அதிகமாக உள்ளது. இப்பழக்கத்துடன் நகத்தைக் கடிப்பது, முடியைப் பிடுங்குவது போன்ற பழக்கமும் அவர்களுக்கு உள்ளது. பெண்கள் இப்பழக்கத்தை வெறுக்கின்றனர்.

பாதிப்புகள் ஏற்படுமா?

மூக்கில் விரலை விடுவது என்பது ஆபத்தானது அல்ல. ஆனால், சில நேரங்களில் இந்தப் பழக்கம் வேறு சில கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகிறது.

அப்படிபட்ட ஒரு சம்பவம் ஸ்ரீஹரி, சித்தரஞ்சன் ஆகியோரின் கவனத்துக்கும் வந்தது. மூக்கில் அறுவை சிகிச்சை செய்தவருக்கு இந்தப் பழக்கம் உள்ளது.

திரும்பத் திரும்ப மூக்கில் விரல் குத்தியதால் அவருக்கு காயம் ஆறாமல் இருப்பதை அவர்கள் கவனித்தனர். இதேபோல் 53 வயதான ஒரு பெண்மணிக்கு இந்தப் பழக்கத்தால் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டதோடு மட்டும் இல்லாமல் அவரது சைனஸிலும் துளை ஏற்பட்டது.

29 வயதான நபர் ஒருவருக்குத் தனது மூக்கில் உள்ள முடிகளைப் பிடுங்கும் பழக்கம் இருந்தது. இது அவரது நாசியில் காயம் ஏற்பட வழி வகுத்தது.

உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

பாக்டீரியா பாதிப்புகள்

மூக்கில் விரல்களை விடுவதால் எவ்வித நோய்களும் வரப்போவதில்லை. அதே நேரத்தில் இந்தப் பழக்கம் மிகவும் பாதுகாப்பானது என்று கூறிவிட முடியாது.

மூக்கில் விரலை விட்டுப் பிடுங்குவது பாக்ட்டீரியா பாதிப்புக்கு உள்ளாகும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் டச் விஞ்ஞானிகள் 2006இல் மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது. மூக்கில் விரலை விட்டு நோண்டும் பழக்கம் உள்ளவர்களுக்கு எஸ். ஆரியஸ் என்ற பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்.

பிறருக்கு அருவருப்பை ஏற்படுத்தும் இந்தச் செயலை சிலர் ஏன் அடிக்கடி செய்கிறார்கள் என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை. மூக்கில் விரலை விடுவதும் சோம்பேறித்தனத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள் இதற்கான காரணங்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2001ஆம் ஆண்டில், இந்திய ஆராய்ச்சியாளர்களான ஆண்ட்ரேட் மற்றும் ஸ்ரீஹரி ஆகியோருக்கு அவர்களின் ஆராய்ச்சிக்காக lg Nobel பரிசு (முதலில் நம்மை சிரிக்க வைத்து, பிறகு சிந்திக்கவும் வைக்கும் ஆராய்ச்சிகளுக்காக வழங்கப்படும் விருது) வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சில் பேசிய ஆண்ட்ரேட், `அடுத்தவர்களின் விவகாரங்களில் மூக்கை நுழைப்பது சிலரின் பழக்கமாக உள்ளது. மற்றவர்களின் மூக்கில் எனது கவனத்தைச் செலுத்துவதை நான் எனது தொழிலாக மாற்றிக்கொண்டேன்` என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: