இலங்கை அருகே மற்றொரு இரான் போர்க்கப்பலில் பிரச்னை - என்ன நடக்கிறது?

ஐஆர்ஐஎஸ் புஷெர், இரான், அமெரிக்கா, இலங்கை

பட மூலாதாரம், Supplied

படக்குறிப்பு, இரானியக் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷெரில் இருந்த 204 பேர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது
    • எழுதியவர், கெல்லி என்ஜி மற்றும் பிபிசி சிங்கள சேவை
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இலங்கை தனது கடற்கரைப் பகுதியில் இரானிய கடற்படைக் கப்பல் ஒன்றைக் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இரானிய போர்க்கப்பல் ஒன்று அதே கடல் பகுதியில் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்டு, குறைந்தது 87 பேர் உயிரிழந்ததற்கு ஒரு நாள் கழித்து, இலங்கை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஐஆர்ஐஎஸ் புஷெர் (IRIS Bushehr) என்ற அந்த இரானிய கப்பல், அதன் இயந்திரங்களில் ஒன்று பழுதடைந்ததால் இலங்கையின் துறைமுகங்களில் ஒன்றில் நிறுத்த புதன்கிழமை (மார்ச் 4) அனுமதி கோரியிருந்தது.

பல மணி நேர விவாதத்திற்குப் பிறகு வடகிழக்கு துறைமுகம் ஒன்றில் கப்பலை நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி அளித்தது, "மனிதநேயத்தைப் பாதுகாக்க நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம்" என்று இலங்கை அதிபர் அநுரகுமார தெரிவித்தார்.

அந்தக் கப்பலில் இருந்த சுமார் 204 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை, பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளது.

'எந்தப் பக்கமும் சாயப் போவதில்லை'- இலங்கை

இரானுக்கு எதிராக அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் நீடிக்கும் நிலையில், எந்தப் பக்கமும் சாயப்போவதில்லை என்று கூறி தங்களது நடுநிலைமையை இலங்கை வலியுறுத்தியுள்ளது.

"எங்களது நிலைப்பாடு என்பது எங்களது மனிதாபிமான விழுமியங்களை வெளிப்படுத்தும் அதேவேளையில் எங்களது நடுநிலைமையைப் பாதுகாப்பதாகும்" என்று இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்க ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"சர்வதேச உடன்படிக்கைகளுக்கான எங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும், எங்களது நாட்டின் நற்பெயர் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையிலும், மனித உயிர்களைப் பாதுகாக்கும் வகையிலும் இதில் இலங்கை தலையிட்டது" என்று அவர் வியாழக்கிழமை கூறினார்.

ஐஆர்ஐஎஸ் புஷெர், இரான், அமெரிக்கா, இலங்கை

பட மூலாதாரம், @IN_HQENC

படக்குறிப்பு, ஐஆர்ஐஎஸ் தேனா

இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 44 கடல் மைல் (81 கி.மீ) தொலைவில் ஐஆர்ஐஎஸ் தேனா (Iris Dena) கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று புதன்கிழமை தாக்குதல் நடத்தி மூழ்கடித்ததைத் தொடர்ந்து இலங்கை அதிபரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

சுமார் 180 பணியாளர்களைக் கொண்டிருந்த அந்த இரானியப் போர்க்கப்பல், சமீபத்தில் இந்தியா நடத்திய சர்வதேச கடற்படைக் கண்காட்சி 2026-இல் பங்கேற்றது.

ஐரிஸ் தேனா மூழ்கடிக்கப்பட்ட சம்பவம், மத்திய கிழக்கு மோதலின் ஒரு தீவிரப் போக்கைக் குறிக்கிறது.

இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இதனை 'கடலில் நடந்த ஒரு கொடூரம்' என்று விவரித்ததுடன், இந்தத் தாக்குதலுக்காக அமெரிக்கா 'நிச்சயம் வருந்தும்' என்றும் கூறினார்.

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், இது அமெரிக்காவின் ராணுவ வலிமைக்கு ஓர் உதாரணம் என்று பாராட்டியதுடன், "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு டார்பிடோ மூலம் எதிரிக் கப்பல் மூழ்கடிக்கப்படுவது இதுவே முதல் முறை" என்றும் கூறினார்.

1945-க்குப் பிறகு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று எதிரிக் கப்பலை இந்த வழியில் மூழ்கடிப்பது இதுவே முதல் முறை என்றாலும், பிரிட்டனும் பாகிஸ்தானும் அதற்குப் பிறகு டார்பிடோக்களைப் பயன்படுத்தி கப்பல்களை மூழ்கடித்துள்ளன.

ஐஆர்ஐஎஸ் புஷெர், இரான், அமெரிக்கா, இலங்கை
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இலங்கையின் அணிசேரா கொள்கை

கடந்த வார இறுதியில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து அழிக்கப்பட்ட சுமார் 20 இரானிய கடற்படைக் கப்பல்களில் ஐஆர்ஐஎஸ் தேனாவும் ஒன்றாகும்.

வியாழக்கிழமை, இரானின் ஐஆர்ஐஎஸ் புஷெர் போர்க்கப்பல் இயந்திரக் கோளாறு இருப்பதாகக் கூறி துறைமுகத்திற்குள் வர இலங்கையிடம் அனுமதி கோரியது.

அந்தக் கப்பல் நாட்டின் முக்கிய வணிகத் துறைமுகமான கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இருந்தபோதிலும், இறுதியில் திரிகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்பட திஸாநாயக்க அனுமதி அளித்தார். அந்தக் கப்பல் கொழும்பில் நிறுத்தப்பட்டிருந்தால், நாட்டின் கடல்சார் தொழில் 'பாதிப்புக்குள்ளாகும்' அபாயம் இருந்ததாகவும் அவர் கூறினார்.

ஐஆர்ஐஎஸ் புஷெர், இரான், அமெரிக்கா, இலங்கை

பட மூலாதாரம், PMD SRI LANKA

இரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷெரில் இருந்த 204 பேர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பிபிசி சிங்களத்திடம் தெரிவித்துள்ளது.

பிபிசி சிங்களத்திடம் பேசிய அதன் ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத், "அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர்களை வெலிசறையில் உள்ள கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லும் பணி தொடங்கியுள்ளதாகத்" தெரிவித்தார்.

இந்தக் கப்பலில் 208 பேர் இருந்ததாக இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

வியாழக்கிழமை நிலவரப்படி, இலங்கை கடற்படை காணாமல் போன ஐஆர்ஐஎஸ் தேனா கப்பலின் பணியாளர்களைத் தனது கடல் பகுதியில் தொடர்ந்து தேடி வருகிறது.

ஐஆர்ஐஎஸ் தேனாவிலிருந்து உயிர் தப்பிய 32 பேர் தற்போது இலங்கையின் காலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கை சுதந்திரத்திற்குப் பிறகு நீண்டகாலமாக அணிசேராக் கொள்கையைப் பேணி வருகிறது.

இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் இலங்கை வலுவான பொருளாதார மற்றும் ராஜிய உறவுகளைக் கொண்டுள்ளது.

இலங்கை இரானிடமிருந்து 250 மில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெயை வாங்கியிருந்ததுடன், அதற்கான தொகையை மாதந்தோறும் தேயிலை ஏற்றுமதி மூலம் திருப்பிச் செலுத்தி வருகிறது. மறுபுறம், அமெரிக்கா இலங்கையின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான முதன்மை ஏற்றுமதிச் சந்தையாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு