ரக்பி வீரர் மரணத்தில் தனது மகனுக்கு தொடர்பு இல்லை என்கிறார் மஹிந்த
இலங்கையின் தேசிய ரக்பி விளையாட்டு வீரரின் மர்மமான மரணத்தில் தனது இரண்டாவது மகனான யோஷிதவுக்கு தொடர்பு எதுவும் கிடையாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

2012இல் காரில் சடமாக மீட்கப்பட்ட வசீம் தாஜுதீன் என்னும் அந்த வீரர், தமது குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்று ராஜபக்ஷவின் மூத்த மகனான நாமல் ராஜபக்ஷ கூறிய இரு தினங்களின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்த மறுப்பு வந்திருக்கிறது.
இந்த மரணம் தொடர்பாக புதிய விசாரணையை ஆரம்பிக்குமாறு நீதிபதி ஒருவர் உத்தரவிட்டதை அடுத்து, அவரது சடலம் திங்களன்று மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளது.
கார் விபத்திலேயே அவர் இறந்ததாக முன்னதாக போலிஸார் கூறிவந்தனர்.
ஒரு பெண் தோழி விவகாரத்தில் யோசித்த ராஜபக்ஷவுக்கும் தாஜுதீனுக்கும் இடையே முரண்பாடு இருந்ததாக பரவலாக கூறப்பட்டு வந்திருக்கும் நிலையில், ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் தாஜுதீனை கொன்றதாக தம்மிடம் ஆதாரம் இருப்பதாக இலங்கையின் புதிய அரசாங்கம் கூறியுள்ளது.








