இலங்கை: ‘எதிர்காலத்தில் உணவு நெருக்கடி மேலும் தீவிரமாகும்’ – இந்தியா, சீனாவிடம் உதவி கோரும் ரணில்

(இன்றைய (ஏப்ரல் 19) இலங்கை நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.)

உணவு நெருக்கடியை தீர்க்க இந்தியா, சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ரணில்

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள உணவு நெருக்கடியை தீர்க்க நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பலமிக்க 5 நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தமிழன் பத்திரிகை செய்தி பிரசுரித்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் ரணில் விக்ரமசிங்க இந்த பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் இதனைவிட கடுமையான உணவு நெருக்கடியை இலங்கை எதிர்நோக்க நேரிடும் என அந்நாடுகளிடம் முன்னாள் பிரதமர் விளக்கியுள்ளார்.

இந்த பிரச்னையில் இலங்கைக்கு எப்படி உதவுவது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அந்நாடுகள், முன்னாள் பிரதமரிடம் கூறியுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு இணக்கப்பாட்டு வந்தால், இலங்கைக்கு உதவுவது இலகுவாக இருக்கும் என இந்த ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள், முன்னாள் பிரதமரிடம் அறிவித்துள்ளன.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை கொண்டுவர தீர்மானம்

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை ரத்து செய்து, 21வது திருத்தத்தை கொண்டு வருவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையான மவ்பிம செய்தி பிரசுரித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (18) மாலை அவசரமாக கூடிய கட்சித் தலைவர்கள், இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

19வது திருத்தத்தில் உள்ள பாதிப்புக்களை ஏற்படுத்தும் சரத்துக்களை நீக்கி, பாதிப்புக்கள் இல்லாத புதிய சரத்துக்களுடன் 21வது திருத்தத்தை கொண்டு வர கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தி, 21வது திருத்தத்திற்கு தேவையான திருத்த யோசனைகளை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் மீண்டும் எதிர்வரும் புதன் அல்லது வியாழக்கிழமை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் 21வது திருத்தத்தை கொண்டு வர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலேயே கட்சித் தலைவர்கள் கூடி கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

நாளை முதல் கடை அடைப்பு

நாடு முழுவதும் நாளை (20) முதல் ஹர்த்தால் (கடை அடைப்பு)அனுஷ்டிப்பதற்கு 300ற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளதாக லங்கா தீப செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாளை (20) முதல் எதிர்வரும் 28ம் தேதி வரை நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புக்கள் ஒன்றியம் சார்பில் ரவி குமுதேஷ் இதனைக் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :