கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு இரண்டரை கோடி ரூபாய் பகிர்ந்தளித்த இலங்கையர்

இலங்கை ரூபாய்

பட மூலாதாரம், MANJULA PERERA'S Facebook

படக்குறிப்பு, இலங்கை ரூபாய் நோட்டுகள்

இலங்கையில் கோவிட் தொற்றின் தாக்கம் தற்போது வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், கடந்த 20ம் தேதி முதல் எதிர்வரும் 30ம் தேதி வரை நாட்டில் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், பெருமளவிலான மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வருமானத்தை இழந்து, வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அரசாங்கம் தற்போது 2,000 ரூபா வழங்கி வருகிறது.

இந்த நிலையில், தனியொரு நபர், தனது சொந்த நிதியில் ஒருவருக்கு தலா 1,000 ரூபா வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.

இதன்படி, இந்த திட்டத்தின் முதற்கட்டமாக, இரண்டரை கோடி ரூபாவை இதற்காக ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறுகிறார் அவர்.

கொழும்பு புறநகர் பகுதியான களனி பகுதியைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா இந்த நிதிக் கொடையை வழங்குகிறார்.

இலங்கை ரூபாய்

பட மூலாதாரம், MANJULA PERERA'S Facebook

படக்குறிப்பு, இலங்கை ரூபாய்

வருமானத்தை இழந்து, வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள் பலருக்கு தலா 1,000 ரூபா வீதம் மஞ்சுள பெரேரா வழங்கியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், மஞ்சுள பெரேராவை தொடர்புக் கொண்டு வினவியது.

கொரோனா பரவல் ஆரம்பித்த காலம் முதல் தான் மக்களுக்கு சேவையாற்றி வருவதாக அவர் கூறினார்.

ஆரம்ப கட்டத்தில் மூன்று கொள்கலன்களின் அரிசி மூடைகளை கொண்டு வந்து, மக்களுக்கு பகிர்ந்தளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

மஞ்சுள பெரேரா

பட மூலாதாரம், MANJULA PERERA'S Facebook

படக்குறிப்பு, மஞ்சுள பெரேரா

அதுமாத்திரமன்றி, லீசிங் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்களுக்கு லீசிங் பணத்தை செலுத்தியுள்ளதாகவும், உலர் உணவுப் பொருட்களை மக்களுக்கு விநியோகித்துள்ளதாகவும் மஞ்சுள பெரேரா தெரிவிக்கின்றார்.

எதிர்வரும் காலங்களிலும் தான் இவ்வாறான உதவிகளை செய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறுகிறார்.

மஞ்சுள பெரேரா இலங்கையிலுள்ள ஒரு தொழிலதிபர் என்பதுடன், அவர் அரசியல் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :