You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விடுதலைப்புலிகள் ஒரே இரவில் அதிகபட்சம் எத்தனை படையினரை கொன்றனர்? கருணா சொல்வது உண்மையா? பொன்சேகா பேட்டி
விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியத் தளபதியாக இருந்து அரசாங்க ஆதரவாளராக மாறியவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான், தாம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது ஒரே இரவில் 2000-3000 பேரைக் கொன்றதாக சமீபத்தில் கூறியிருந்தார். அவர் கூறுவதில் உள்ள உண்மை என்ன என்று 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நடத்தி முடித்தவரான இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா விவரித்தார்.
ஆணையிறவு பகுதியில் நடந்த போரில் தாம் இந்த அளவு ராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக கருணா அம்மான் குறிப்பிட்டிருந்தார். இவர் தற்போது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தலைவராகவும் உள்ளார்.
பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டி ஒன்றில் அவர் இது குறித்துப் பேசியுள்ளார் சரத் பொன்சேகா.
இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் ஒரே நேரத்தில் 2000 முதல் 3000 வரையான இராணுவத்தில் கொல்லப்படவில்லை என்கிறார் பொன்சேகா.
1,200 நிராயுதபாணிகளை கொன்ற புலிகள்
முல்லைத்தீவு பகுதியில் நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகள் வசம் சிக்குண்ட 1200 இராணுவத்தினர் ஒரே நேரத்தில் விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டதாக அவர் நினைவூட்டினார்.
இந்த தொகையே இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் ஒரே நேரத்தில் அதிகளவிலான இராணுவத்தினர் உயிரிழந்த நிகழ்வு எனவும் சரத் பொன்சேகா கூறினார்.
அதே போன்று கிழக்கு மாகாணத்தில் 1990ம் ஆண்டு காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் வசம் நிராயுதபாணிகளாக 600 போலீஸ் உத்தியோகத்தர்கள் சிக்குண்டதாகவும், அவர்களையும் விடுதலைப் புலிகள் கொன்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை போலீஸ் வரலாற்றில் ஒரே தருணத்தில் அதிகளவிலான போலீஸார் உயிரிழந்த நிகழ்வு இதுவே என சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.
கருணா அம்மான் சிப்பாய்களை கொன்றதாக கூறும் நிலையில், அவர் அதனை ஒரு பயங்கரவாதியாகவே செய்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அதனால், கருணா அம்மானுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
எனினும், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் கருணா அம்மானை காப்பாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.
ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியில் கருணா அம்மான் எந்தவொரு சூழ்நிலையிலும் தண்டிக்கப்பட மாட்டார் என சரத் பொன்சேகா உறுதியாக குறிப்பிடுகிறார். எனினும், தமது அரசாங்கமொன்று ஆட்சிக்கு வரும் பட்சத்தில், நிச்சயமாக கருணா அம்மான் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார். பிற செய்திகள்:
- சாத்தான்குளம்: சமூக ஊடகங்களில் அத்துமீறல்களை கொண்டாடும் சில போலீஸார் - காவல்துறை கூறுவது என்ன?
- "தமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கை நீட்டிக்கப் பரிந்துரைக்கவில்லை": மருத்துவர் குழு
- சாத்தான்குளம்: சமூக ஊடகங்களில் அத்துமீறல்களை கொண்டாடும் சில போலீஸார் - காவல்துறை கூறுவது என்ன?
- கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு - நான்கு பேர் உயிரிழப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: