இலங்கை ஜனாதிபதி தேர்தல்: 'குறைவான வன்முறை, அதிகமான ஊடக விதிமீறல்'

sri lanka presidential election

பட மூலாதாரம், Paula Bronstein

இலங்கை வரலாற்றில் தேர்தல் வன்முறைகள் குறைவாக பதிவான தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வரை 'பெப்ரல்' (People's Action For Free and Fair Elections - PAFFREL) அமைப்பினால் நடத்தப்பட்ட கணிப்பின்படி, இந்த தேர்தல் காலப் பகுதியில் தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புப்பட்டு உயிரிழப்பு ஒன்று கூட பதிவாகவில்லை.

அத்துடன், பெரிய வன்முறைகள் மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் 68 சம்பவங்களே பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பு கூறுகின்றது.

கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தேர்தல் காலப் பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரொஹண ஹெட்டியாராட்ச்சி தெரிவிக்கின்றார்.

இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் சட்ட மீறல்கள் இடம்பெற்றமை தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார்.

இதன்படி, இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் ஊடக நிறுவனங்களே அதிகளவில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது மிகவும் கவலைக்குரிய விடயம் என அவர் கூறினார்.

sri lanka presidential election 2019

பட மூலாதாரம், ROHANA HETTIARACHCHI FACEBOOK

படக்குறிப்பு, ரொஹண ஹெட்டியாராட்ச்சி

அதுமட்டுமன்றி, பௌத்த சமயத் தலைவர்கள் அரசியலில் ஈடுபட்டு, சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் ரொஹண ஹெட்டியாராட்ச்சி குறிப்பிட்டார்.

அரச சொத்துகள் பயன்படுத்தியமையும் இந்த முறை குறைவாகவே காணப்படுகின்றது என அவர் கூறுகின்றார்.

பிரசார நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ள பின்னணியில், சமூக ஊடகங்களின் ஊடாக தொடர்ந்தும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயம் தொடர்பில் தாம் தொடர்ச்சியாக அவதானித்து, அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடாக சமூக ஊடக நிறுவனங்களுக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரொஹண ஹெட்டியாராட்ச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் ஊடகங்களின் பிரசாரம்

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஊடக நிறுவனங்கள் போட்டி தன்மையுடன் செயற்பட்டமையை வரலாற்றில் ஒருபோதும் காணவில்லை என இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார்.

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஊடக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக ஒளிபரப்பு / ஒலிபரப்பு ஊடகங்களே தேர்தல் விதிமுறைகளை பாரிய அளவில் மீறியுள்ளமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அரசாங்கத்தின் கீழ் செயற்படுகின்ற ருபவாஹிணி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆகியனவும், தனியார் ஊடக நிறுவனங்களும் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதன்படி, தேர்தல் விதிமுறைகளை மீறிய ஊடக நிறுவனங்களுக்கு எதிராகவும், அதன் அதிகாரிகளுக்கு எதிராகவும் தேர்தலில் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய குறிப்பிடுகின்றார்.

ஊடக நிறுவனங்களினால் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்ட காலம் பாரபட்சமாக காணப்பட்டதாகவும் மஹிந்த தேசபிரிய சுட்டிக்காட்டினார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :