இலங்கை ஜனாதிபதி தேர்தல்: “பிரபாகரனுக்கு பின், கோட்டாபயவிற்கே நாட்டை கட்டியெழுப்பும் ஆளுமை உள்ளது” - ரிஷி செந்தில்

வேலுப்பிள்ளை பிரபாகரன்

பட மூலாதாரம், Str

    • எழுதியவர், ரன்ஜன் அருண் பிரசாத்
    • பதவி, கொழும்பில் இருந்து, பிபிசி தமிழுக்காக

நாட்டை நிர்வகிக்கக்கூடிய ஆளுமையை தமிழர்கள் முதன் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் பார்த்ததாகவும், அதற்கு பின்னர் அதை கோட்டாபய ராஜபக்ஷவிடமே பார்ப்பதாகவும் மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெவ்வேறான நிலைப்பாடுகளை கொண்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் சஜித் பிரேமதாஸ ஆகிய முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருக்கும் தாங்கள் ஆதரவு தெரிவிப்பதற்காக காரணத்தை தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

கோட்டபாய

பட மூலாதாரம், Getty Images

அனைத்து கட்சிகளும் தமது நிலைப்பாட்டை முன்னதாகவே அறிவித்திருந்த பின்னணியில், தமிழர்களின் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலுக்கு 10 நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே தமது நிலைப்பாட்டை வெளியிட்டது.

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ளது.

தபால் மூல வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை அறிவித்தது.

குறிப்பாக, ஜனாதிபதி தேர்தலுக்காக 35 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், பிரதான இரண்டு வேட்பாளர்களிடம்தான் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

மலையக தமிழர்களுக்கும் தனியான தேசிய இன அங்கீகாரம் தேவை என குரல் எழுப்பப்பட்டது.
படக்குறிப்பு, மலையக தமிழர்களுக்கும் தனியான தேசிய இன அங்கீகாரம் தேவை என குரல் எழுப்பப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித் பிரேமதாஸ ஆகியோர்தான் இந்த இரண்டு முக்கிய வேட்பாளர்கள்.

இந்த நிலையில், பெரும்பாலான தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் சஜித் பிரேமதாஸவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளன.

குறிப்பாக, தமிழர்களின் பிரதான கட்சியாக திகழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன சஜித் பிரேமதாஸவிற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளன.

இந்த நிலையில், இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நிபந்தனையுடனான ஆதரவை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேஷன், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பலரும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவை தெரிவிக்கின்றனர்.

சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க காரணம்?

சஜித் பிரேமதாஸ

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, சஜித் பிரேமதாஸ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில்

பிரதான வேட்பாளர்கள் இருவரும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளின்படி, சஜித் பிரேமதாஸவின் தேர்தல் அறிக்கையை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதென புளோட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கின்றார்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரை சூழவுள்ள தரப்பினரை தம்மால் நம்ப முடியாத நிலைமையும் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாஸவிற்கே முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கன் சித்தார்த்தன் கூறினார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி

சுமேந்திரன்

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரிடம் நிபந்தனை அல்லது உடன்படிக்கைகளை மேற்கொண்டு ஆதரவு வழங்குகின்றமை போலியான விடயம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார்.

மாறாக, தாம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிடம் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியாக ஒருவர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நிபந்தனைகள் அல்லது உடன்படிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில், அவருக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தை முன்னிலைப்படுத்தியே தாம் தமிழ் மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தமது கோரிக்கைகளை வெற்றிக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார்.

தேர்தல் பிரசாரம்

ஜனநாயக போராளிகள் கட்சி

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுடனான ஜனநாயக போராளிகள் கட்சி, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது என்று அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி பிபிசி தமிழிடம் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி நிலைமை நீடிக்கவும், சர்வதேசத்துடன் இணைந்து செயற்படக்கூடியதுமான ஆளுமை சஜித் பிரேமதாஸவிற்கு மாத்திரமே காணப்படுவதாக க.துளசி தெரிவிக்கின்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

முஸ்லிம்களின் பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் சஜித் பிரேமதாஸவிற்கே ஆதரவை வழங்குகின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவியேற்கும் பட்சத்தில் முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக இந்த இரண்டு கட்சிகளும் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க காரணம்?

மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில் ராஜ்

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில் ராஜ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுத்திட்டத்தை வழங்குவதாக முன்வைக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து, தாம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 32 கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.

இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகளான சம்பளம், கல்வி, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷ சாதகமான பதிலொன்றை பெற்றுக் கொடுத்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கின்றது.

ஈ.பி.டி.பியின் நிலைப்பாடு

ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வல்லமை கோட்டாபய ராஜபக்ஷவிடமே காணப்படுவதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு அதிகளவிலான உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டதாகவும், இந்த முறை கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கும் வரும் பட்சத்தில், தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பதற்கு தானே பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழர்களுக்காக தீர்வை வழங்கக்கூடிய ஒரே வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமே எனவும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

மலையக தேசிய முன்னணியின் நிலைப்பாடு

மலையக தமிழர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மலையக தமிழர்கள் (கோப்பப்படம்)

நாட்டை நிர்வகிக்கக்கூடிய ஆளுமையை தமிழர்கள் முதன் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் அவதானித்ததாகவும், அதன் பின்னர் நாட்டை நிர்வகிக்கக்கூடிய ஆளுமையை தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவிடமே அவதானிப்பதாகவும் மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில் ராஜ் தெரிவிக்கின்றார்.

அத்துடன், சர்வதேச நாடுகளுக்கு இணையாக நாட்டை கட்டியெழுப்பும் ஆளுமை கோட்டாபய ராஜபக்ஷவிடம் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அரசியல் அனுபவங்கள் இல்லாமையினால், நிர்வாக அதிகாரி என்ற விதத்தில் புதிய சிந்தனைகளுடனும், பாரம்பரிய அரசியல் முறைமைக்கு அப்பாற் சென்றும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான இயலுமை அவரிடமே காணப்படுவதாக ரிஷி செந்தில்ராஜ் குறிப்பிடுகின்றார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் நிலைப்பாடு

விநாயகமூர்த்தி முரளிதரன்
படக்குறிப்பு, விநாயகமூர்த்தி முரளிதரன்

இலங்கையின் பாதுகாப்பு தற்போது அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி நகர்ந்துக்கொண்டுள்ளதாகவும், அதனை பாதுகாக்கும் இயலுமை கோட்டாபய ராஜபக்ஷ வசம் காணப்படுவதாகவும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியுமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவிக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து பொருளாதார ரீதியில் நாடு பின்நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாகவும், அதனை மீள கட்டியெழுப்புவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இயலுமை உள்ளதாகவும் கருணா அம்மான் பிபிசி தமிழிடம் கூறினார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரசாரம் செய்து வருகின்றது.

பௌத்த மயமாக்கல், சமஷ்டிக்கு (கூட்டாட்சி) இணக்கம் தெரிவிக்காமை உள்ளிட்ட காரணங்களை முன்னிலைப்படுத்தியே தாம் தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்ததாக தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பு தெரிவித்துள்ள பின்னணியில், தாம் எவரையும் ஆதரிக்க விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைமை தொடருமானால், தமிழர் தேசம் அழிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், அதற்கு தாம் ஒப்புதல் வழங்க முடியாது எனவும் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :