You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மண்டேலா பாதையில் பயணிக்க உலகத் தலைவர்களுக்கு இலங்கை அதிபர் சிறிசேன அழைப்பு
நெல்சன் மண்டேலா பாதையில் பயணிக்க, உலகின் அனைத்து தலைவர்களையும் அழைப்பதாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச் சபைக் கூட்டத்தொடரை ஒட்டி நேற்று திங்கள்கிழமை நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் தொடங்கிய நெல்சன் மண்டேலா சமாதான உச்சி மாநாட்டில் உரையாற்றும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
நெல்சன் மண்டேலாவின் 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த சமாதான உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சமாதானம், நல்லிணக்கம், மனிதாபிமானம் பற்றி உலகிற்கு முக்கியமான பல பாடங்களை கற்றுக்கொடுத்த நெல்சன் மண்டேலா என்ற உன்னதமான ஆளுமையை பற்றி இன்று உலகத் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நெல்சன் மண்டேலாவின் உன்னத ஆளுமை குறித்தும், அவர் பயணித்த பாதை குறித்தும் நினைவுகூரக் காரணம், இன்று உலகம் அத்தகையதொரு பாதையில் பயணிக்காமையே ஆகும். அதிகாரத்தை துறத்தல், அதிகாரத்தை மட்டுப்படுத்தல் குறித்து அவரது ஆளுமை பல முன்மாதிரிகளை வழங்கியிருக்கிறது.
உலகில் வாழும் இனங்கள் மத்தியிலும் அரச தலைவர்கள் மத்தியிலும் உலகிற்கு அரசியல் வழிகாட்டிகள் மத்தியிலும், நெல்சன் மண்டேலா அவர்களின் வாழ்க்கையின் குணாதிசயங்கள் எந்தளவுக்கு இருக்கின்றன என்ற கேள்வி எழுகின்றது.
ஆகையால் சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை, மனிதநேயம் மிக்க தலைசிறந்த ஒரு பயணம் ஆகியவை பற்றி இந்த உலகிற்கு எடுத்துரைத்த, அவ்வாறான உன்னதமான தலைவர்களின் சுய சரிதைகளை இன்றைய உலகத் தலைவர்கள் கற்றறிய வேண்டும்'' என்று இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால தெரிவித்தார்.
சமாதானம் பற்றிய பாதையை உலகிற்கு கற்றுக்கொடுத்த உன்னத மானுட ஆளுமையான நெல்சன் மண்டேலா பற்றிய உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தமைக்காக ஐக்கிய நாடுகள் சபைக்கு தனது நன்றியையும் தெரிவித்தார் சிறிசேன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்