ஷிவானி கடாரியா: கோடைக்கால பயிற்சி வகுப்பில் இருந்து கோடைக்கால ஒலிம்பிக்ஸ் வரை முன்னேறிய நீச்சல் வீராங்கனை

இந்தியாவின் ஷிவானி கடாரியா, 2016ஆம் ஆண்டு ஒரு முக்கிய சாதனையை படைத்தார். 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒலிம்பிக்கில் பெண்களுக்கான நீச்சல் போட்டியில் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
தற்போது தாய்லாந்து நாட்டின் ஃபுகேட்டில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் ஷிவானி, நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார்.
2016 தெற்காசிய போட்டிகளில் தங்கப்பதக்கமும், பெண்களுக்கான 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நிகழ்வில் தேசிய அளவில் சாதனையும் படைத்த ஷிவானி, தான் வளர்ந்த ஹரியாணாவின் குருகிராம் பகுதியில் ஒரு கோடைக்காலப் பயிற்சி முகாமில் தனது பயணத்தை தொடங்கினார்.
ஷிவானிக்கு 6 வயதாக இருக்கும்போதே அவரது தந்தை ஷிவானியை நீச்சல் பயிற்சி வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வார். ஆனால் நீச்சலையே தனது தொழிலாகவோ, ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடப் போவதாகவோ ஆரம்ப காலத்தில் நினைத்துக் கூட பார்த்ததில்லை என்கிறார் ஷிவானி கடாரியா.
நீச்சலில் தீவிர ஆர்வம்
குருகிராம் பகுதியில் தனது வீட்டின் அருகே உள்ள பாபா கங் நாத் நீச்சல் பயிற்சி மையத்தில் நடந்த கோடைக்கால பயிற்சி வகுப்புகளை ஒரு பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டிருந்தார் ஷிவானி. பின்னர் உள்ளூர் போட்டிகள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். இதுவே அவர் மீதான அவரது நம்பிக்கையை அதிகப்படுத்த உதவியது.
தொடர்ந்து நீச்சலில் தீவிர ஆர்வம் காட்டிய ஷிவானி, மாநில மற்றும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்.
தொழில்முறை வளர்ச்சியில் தனது குடும்பத்தாரின் பங்களிப்பு அதிகம் உள்ளதாக கூறுகிறார் ஷிவானி.
பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் ஷிவானியின் பெற்றோர் அவருக்கு ஆதரவளித்தனர். மேலும் ஷிவானியின் சகோதரரும் அவருடன் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டார். சகோதரருடன் இருந்த கடுமையான போட்டி ஷிவானியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.

ஒரு கட்டத்தில் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெறத் தொடங்கிய ஷிவானி, இளம் வயதுடையோருக்கான போட்டிகளில் பல்வேறு சாதனைகளை முறியடிக்கத் தொடங்கினார். ஆரம்பக்கட்டத்திலேயே ஜூனியர் நிலைப் போட்டிகளில் கிடைத்த வெற்றிகள், எதிர்காலத்தில் சீனியிர் நிலையில் விளையாட தகுதிப்படுத்திக்கொள்ள ஷிவானிக்கு உதவியது.
தொடர்ந்து முன்னேற்றம்
விளையாட்டுகளில் வெற்றிகரமாக சாதிப்பது என்பது எளிதானதல்ல. இதற்கு சவால்களை எதிர்கொள்ள தியாகமும், அர்ப்பணிப்பும், பொறுமையும் அவசியம். குருகிராமில் பயிற்சி எடுத்துக் கொள்ளும்போது அவர் சந்தித்த பல தடைகளுக்கு பிறகே இதனை ஷிவானி உணர்ந்து கொண்டார்.
முன்பெல்லாம், ஹரியாணா மாநிலத்தில் சூடேற்றப்பட்ட நீச்சல் குள வசதி இல்லை. அதனால் குளிர்காலத்தில் பயிற்சி எடுக்க முடியாமல் போனது. இந்த இடைவெளியால் ஏற்கனவே போட்ட கடின உழைப்பு வீண்போகும் நிலை ஏற்பட்டது.
இதனால் 2013ஆம் ஆண்டு தனது சொந்த ஊரை விட்டு பெங்களூரூக்கு குடிபெயர்ந்தார் ஷிவானி. அங்கு ஆண்டுதோறும் சிறந்த பயிற்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இந்த முடிவை எடுத்தார்.

அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. அந்த ஆண்டே ஆசிய ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆறாம் இடத்தை பிடித்தார். இதுவே மனரீதியாக அவரை சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்திக் கொள்ள உதவியது.
2014ஆம் ஆண்டு யூத் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் விளையாடினார் ஷிவானி. பின்னர் 2016ம் ஆண்டு குவஹாத்தியில் நடைபெற்ற 2016 தெற்காசிய போட்டிகளில் தங்கம் வென்றார்.
இந்த வெற்றியே அவருக்கு 2016 ரியோவில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக்கில் இடம் பிடிக்க வேண்டும் என்ற இலக்குக்கு உந்துசக்தியாக இருந்தது.
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றது பெரிய படிப்பினையாகவும், எதிர்கால சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொள்ள சிறந்த அனுபவமமாகவும் அமைந்ததாக ஷிவானி கடாரியா தெரிவிக்கிறார்.
2017ல் ஷிவானி, ஹரியாணா அரசாங்கத்தின் பீம் விருது பெற்றார். எதிர்காலத்தில் இந்தியாவுக்கு மேலும் பல பதக்கங்களைப் பெற்றுத் தர முடியும் என்றும், ஒருநாள் அர்ஜுனா விருது வெல்லமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இந்தியா முழுக்க விளையாட்டு பயிற்சிக்கான வசதிகள் அதிகரித்துள்ளதாக கூறும் ஷிவானி, நாட்டில் இன்னும் அதிக பெண் பயிற்சியாளர்கள் வேண்டும் என்று கூறுகிறார். இது இன்னும் பல உலகத்தரம் வாய்ந்த பெண் விளையாட்டு போட்டியாளர்கள் உருவாக்க உதவும் என்று அவர் தெரிவிக்கிறார்.
(ஷிவானி கட்டாரியாவுக்கு பிபிசி மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் மூலமாக இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












