மகேந்திர சிங் தோனி: ஓய்வு முடிவை அறிவிக்க என்ன காரணம்? - கடந்த ஓராண்டில் என்னென்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விவேக் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழ்
புகழ்பெற்ற லார்ட்ஸ் மண்ணில் கிரிக்கெட் உலகக்கோப்பையைக் கைப்பற்ற வேண்டுமெனில் அதற்கு முதல்படி இறுதிப்போட்டிக்கு நுழைய வேண்டும் என்பதே.
ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து. இவ்விரண்டில் ஏதாவதொரு அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் என்பது உறுதியாகிவிட்டது.
இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக நுழையப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியைக் காண மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் அன்றைய தினம் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின.
அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தோனி தனது 38வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். ஹர்திக் பாண்ட்யா அப்போது இன்ஸ்ட்டாகிராமில் ஒரு பதிவு எழுதியிருந்தார்.
தோனியுடன் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பது போன்ற ஒரு காணொளியை பதிவிட்டு '' உங்களுடன் செலவிடும் ஒவ்வொரு நாளும் ஏதாவது கற்றுக்கொள்ளவும் மென்மேலும் வளரவும் உதவும் வாய்ப்பாக உள்ளது. என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய ரோல் மாடல்களில் ஒருவர் நீங்கள். அதற்கு நன்றி'' என பதிவிட்டிருந்தார். 15 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் விரும்பப்பட்ட பதிவாக அது இருந்தது.
முதல் டி20 உலகக்கோப்பை(2007), ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி(2013) என மூன்று ஐசிசி கோப்பைகளை தோனி தலைமையில் இந்தியா குறுகிய காலகட்டத்தில் வென்று சர்வதேச அரங்கில் சாதித்தது. 2023-ல் நடக்கும் உலகக்கோப்பையில் நிச்சயம் தோனிக்கு இடமிருக்காது என்பதால், விராட் கோலி 2019 உலகக்கோப்பையை வென்று லார்ட்ஸ் மைதானத்தில் தோனியுடன் வலம் வர வேண்டும் என தங்களது விருப்பங்களை பல்வேறு வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர் இந்திய அணியின் ரசிகர்கள்.
ஆகவே ஜூலை 9 தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமானதொரு நாளாகவே இருந்தது.

பட மூலாதாரம், TWITTER / ICC
நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து நிதானமாக விளையாடியது. ஆட்டத்தின் 45-வது ஓவரில் புவனேஷ்வர் குமார் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார் கோலின் டி கிரந்தோம். அதற்கு அடுத்து ஒன்பது பந்துகள் வீசப்பட்டிருந்த நிலையில் மான்செஸ்டரில் பெய்த மழை அன்றைய ஆட்டத்தையே முழுமையாக பாதித்தது. வலுவான பேட்டிங் படையை வைத்திருந்த இந்திய அணிக்கு எதிராக அப்போது 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது நியூசிலாந்து.
ஜூலை 10 அன்று, முந்தைய நாளில் தடைபட்ட ஓவரிலிருந்து ஆட்டம் துவங்கியது. இறுதிப்போட்டிக்குள் நுழைய இந்தியாவுக்கு 240 ரன்கள் இலக்கு வைத்தது நியூசிலாந்து. முதல் 10 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுத்தது. அப்போது இந்தியா எடுத்திருந்த ரன்கள் வெறும் 24.
அதன்பின்னர் ரிஷப் பந்த் அவுட் ஆக, 23-வது ஓவரில் தோனி களத்தில் நுழைந்தார். அப்போது இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னும் 169 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற நிலை. கைவசம் 5 விக்கெட்டுகள்தான் இருந்தது. ஹர்டிக் பாண்ட்யாவும் தோனியும் இணைந்தனர். 62 பந்துகளை சந்தித்து 32 ரன்கள் எடுத்திருந்த ஹர்டிக்கும் அவுட் ஆனார்.
19 ஓவரில் 146 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பௌலர்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் தோனி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனக்கான சிக்கலான அத்தியாயத்தில் நின்றுகொண்டிருந்தார். ஜடேஜாவின் அபாரமான ஆட்டமும் விக்கெட்டை இழந்து விடாமல் தோனி விளையாடிய மெதுவான இன்னிங்சும் மெல்ல மெல்ல இந்தியாவின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தன.
ஆனால் 48-வது ஓவரில் ஜடேஜா அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஜடேஜா விக்கெட்டை இழந்ததும் 48-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து மீண்டும் பேட்ஸ்மேன் முனைக்கு வந்தார் தோனி.

பட மூலாதாரம், Getty Images
ஃபெர்குசன் வீசிய 49-வது ஓவரின் முதல் பந்தில் தோனி சிக்ஸர் விளாசினார். இரண்டாவது பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை.மூன்றாவது பந்தில் இரண்டு ரன்களை எடுக்க முயன்ற தோனி, கப்டிலின் துல்லியமான த்ரோவில் கிட்டத்தட்ட ஒரு இன்ச் இடைவெளியில் ரன் அவுட் ஆனார். அதோடு இந்திய அணியின் கதையும் முடிந்தது. 72 பந்தில் 50 ரன்கள் எடுத்த தோனி மிகவும் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். 2015 உலகக்கோப்பை அரை இறுதியில் தோனி ரன் அவுட் ஆனார், அதன் பின்னர் 14 பந்துகளில் இந்தியாவின் கனவு தகர்ந்தது. அதே நிலைமை நான்கு ஆண்டுகளில் மான்செஸ்டரிலும் இந்திய அணிக்கு நடந்தது.
இந்தியாவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்துபோன அந்த போட்டிதான் தோனியின் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாகவும் அமைந்துவிட்டது. ஆம் இனி நீங்கள் நீல நிற ஜெர்சியில் இந்தியாவுக்காக தோனி விளையாடுவதை பார்க்கமுடியாது.
கப்டிலின் அந்த துல்லியமான த்ரோவில் தோனி ஆட்டமிழந்து ஆறு மாதமாகியிருந்தது. அப்படியொரு சூழலில்தான் சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்திய அணிக்கான வருடாந்திர ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் தோனி நீக்கப்பட்டார்.
கடந்த நவம்பர் மாதம் ஐஏஎன்எஸ்-க்கு பேட்டி அளித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ''டி20 உலகக் கோப்பையில் தோனி இடம்பெறுவாரா இல்லையா இப்போது உடனடியாக சொல்லமுடியாது. அவர் எப்போது மீண்டும் கிரிக்கெட் விளையாடத் துவங்குகிறார், ஐபிஎல்லில் எப்படி விளையாடவுள்ளார், மற்ற விக்கெட் கீப்பர்கள் எப்படி விளையாடுகிறார்கள், தோனியின் ஃபார்ம் உடன் ஒப்பிடும்போது அவர்களின் ஃபார்ம் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் 'கணக்கில் கொண்டுதான் முடிவு செய்யப்படும்'' என்றார்.

பட மூலாதாரம், Getty Images
''தோனியின் எதிர்காலம் தெளிவாக இருக்கிறது. அணி நிர்வாகம், கிரிக்கெட் வாரியம், தோனி என மூன்று தரப்பும் வெளிப்படையாக பேசி முடிவுகள் எடுத்துள்ளன. தோனி மாதிரி ஒரு மிகப்பெரிய விளையாட்டு வீரர் தொடர்பான விஷயங்களை அறைக்கு வெளியே பொதுவில் பேசமுடியாது,'' என பிசிசிஐ தலைவர் கங்குலி கடந்த ஆண்டு இறுதியில் ஒரு பேட்டியின் போது தெரிவித்திருந்தார்.
''என்ன செய்ய வேண்டும் என்பதை தோனிதான் முடிவு செய்வார். அவரது எதிர்கால திட்டங்கள் குறித்து நான் இன்னமும் அவரிடம் பேசவில்லை. ஆனால் அவர் இது குறித்து விராட் கோலி மற்றும் தேர்வுக்குழுவுடன் நிச்சயம் பேசியிருக்கிறார். அவர் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு மிகச்சிறந்த வீரர்'' என கங்குலி தெரிவித்திருந்தார்.
ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரவி சாஸ்திரி, தோனி குறித்து பேசும்போது ''இந்த வயதில் அவர் இனிமேல் டி20 கிரிக்கெட் மட்டுமே விளையாட விரும்புவார் என நினைக்கிறேன். ஐபிஎல்லில் பங்கேற்க வேண்டும் என்பதால் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்குவார், அப்போது தனது உடல் எப்படி ஒத்துழைக்கிறது என அவர் பரிசோதிக்கக்கூடும். அவர் விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக்கூடும்'' என தெரிவித்திருந்தார். மகேந்திர சிங் தோனி கடைசியாக 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் டி20 போட்டியில் அரை சதம் விளாசினார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 தொடர்கள்தான் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச டி20 தொடர்கள். இவ்விரு தொடர்களிலும் இந்தியா தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
இது தோனி மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறங்கினாலும் சரி இல்லாமல் போனாலும் சரி இந்திய அணி தோனியைச் சார்ந்து இல்லை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக அமைந்துவிட்டது.
அதே சமயம் தோனிக்கு உரிய மரியாதை வழங்கப்படும் என்பதை பிசிசிஐ தெளிவுபடுத்தியது. குறிப்பாக கங்குலி ''நான் இருக்கும்வரை அனைவரும் உரிய முறையில் மதிக்கப்படுவர்'' எனத் தெரிவித்திருந்தார்.
தன்னை விட்டு நகர்ந்துச் செல்ல அணி தயாராக இருக்கும்போது, கிரிக்கெட் உலகில் தன்னை மீண்டும் நிரூபித்து அணிக்குள் வருவாரா அல்லது சர்வதேச கிரிக்கெட் அத்தியாயத்துக்கு ஏற்கனவே முடிவுரை எழுதிவிட்டாரா என கிரிக்கெட் உலகில் கேள்வி எழுந்தது.
கொரோனா காரணமாக கிரிக்கெட் போட்டிகள் தள்ளிபோடப்பட்டுள்ளன. டி20 உலகக்கோப்பையும் தள்ளிபோடப்பட்டுளள்து. அப்போது தோனி ஒருவேளை விளையாடினால் 40 வயதாகியிருக்கும். இந்த சூழலில்தான் இன்று தோனியின் ஓய்வு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பிற செய்திகள்:
- எடப்பாடி பழனிசாமி Vs ஓ. பன்னீர்செல்வம்: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்?
- இலங்கை : மஹிந்த ராஜபக்ஷவுடன் சமரசமாக செல்வேனா? - அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேட்டி
- இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த 'ரகசிய வானொலி நிலையம்'
- இஸ்ரேல் - பாலத்தீனம்: என்ன பிரச்சனை? - 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












