அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வரும் நரம்பு நோய் – ஆய்வில் தகவல்

    • எழுதியவர், ஜேம்ஸ் கலேகர்
    • பதவி, உடல்நலம் மற்றும் அறிவியல் செய்தியாளர்

தொடர்ச்சியாக அதிக ஆற்றல் கொண்டு உடற்பயிற்சி செய்வது, மரபணு ரீதியாக பலவீனமாக இருக்கூடியவர்களில் `மோட்டார் நியூரான்` நோயை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் இந்த ஆய்வால் யாரும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிடக் கூடாது என இந்த ஆய்வை மேற்கொண்ட ஷெஃபீல்ட் பல்கலைக்கழக குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த ஆய்வு, ஆபத்தில் உள்ளவர்களை கண்டறிந்து தக்க அறிவுரைகளை வழங்க உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

300 பேரில் ஒருவருக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நோயால் மூளையிலிருந்து தசைகளுக்கு செய்தி கொண்டு செல்லும் மோட்டார் நியூரான்கள் பழுதடைவதால் நடப்பது, அசைவது மற்றும் மூச்சுவிடும் திறன் பாதிக்கப்படும். அதேபோல ஒருவரின் ஆயுளையும் குறைத்துவிடும்.

இதனால் யார் பாதிக்கப்படுவார்கள் எதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதை புரிந்து கொள்வது கடினம். மரபணு ஆபத்துகளுடன் பிறந்தவர்களும் மற்றும் பிற சூழலியல் காரணங்களும் இந்த நோய்க்கான காரணிகளாக அமைகிறது.

உடற்பயிற்சிக்கும் நோய்க்கும் எப்போதும் தொடர்புகள் உண்டு. ஆனால் இது எதேச்சையாக பேசப்படுகிறதா, இல்லை உண்மையான காரணங்கள் உள்ளனவா என்பதுதான் நீண்ட காலமாக நடைபெறும் விவாதம். இந்த நோய் குறித்து இத்தாலிய கால்பந்து வீரர்களிடம் நடத்திய சோதனையில் அவர்களுக்கு வழக்கத்தை காட்டிலும் ஆறுமடங்கு அதிகமான ஆபத்து இருப்பது தெரியவந்தது.

ரக்பி வீரர் ராப் பரோ, கால்பந்து வீரர் ஸ்டீஃபென் டர்பி, ரக்பி கூட்டமைப்பை சேர்ந்த டூடி வெர் ஆகியோர் இந்த நோய் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர்.

இது எல்லாம் வைத்து உடற்பயிற்சி, மோட்டார் நியூரான் நோய்கான காரணமாக உள்ளது என நாங்கள் தெரிவித்தோம், என்கிறார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஜோனத்தன் கூப்பர் நாக்.

புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் பலர் இந்த மோட்டார் நியுரான் நோயால் பாதிக்கப்படுவது எதேச்னையான விஷயமல்ல.

5 லட்சம் பேரின் மரபணு மாதிரிகளை சேகரித்துள்ள பிரிட்டன் பயோபேங்க் திட்ட தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர்.

அதில் தீவிர உடற்பயிற்சி செய்யத்தூண்டும் டிஎன்ஏ கொண்டவர்களுக்கு இந்த நோய் வரும் ஆபத்து அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு இபயோமெடிசன் என்னும் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

இதில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்

உடற்பயிற்சி செய்யும்போது, மோட்டார் நியூரான் நோயை அதிகரிக்கும் மரபணுக்கள் தங்கள் செயல்பாட்டை மாற்றுகிறது.

மோட்டார் நியூரான் நோயுடன் தொடர்புடைய திரிபை கொண்டவர்கள், தீவிரமாக உடற்பயிற்சி செய்தால் இளம் வயதிலேயே இந்த நோய்க்கு ஆளாகின்றனர்.

இதில் தீவிரமாக உடற்பயிற்சி என்பது ஒரு வாரத்தில் 2-3 நாட்களுக்கும் மேலாக 15-30 நிமிடங்களுக்கு மேல் உடற்பயிற்சி செய்வது. ஆனால் இவ்வாறு உடற்பயிற்சி செய்யும் அனைவருக்கும் இந்த நோய் வருவதில்லை.

"யாரெல்லாம் ஆபத்தில் உள்ளார்கள், யாரெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கும் அளவிற்கு ஆய்வு செல்லவில்லை" என கூப்பர் நாக் தெரிவிக்கிறார்.

"அனைவரும் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டால் அது நன்மையைக் காட்டிலும் கெடுதலையே உண்டாக்கும்" என்கிறார் அவர்.

இந்த ஆய்வு மேலும் விரிவடையும் என தான் நம்புவதாக அவர் தெரிவிக்கிறார்.

"மரபணு ரீதியாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளவர்களில் அதீத உடல் பயிற்சி மற்றும் மோட்டார் நியூரான் நோய்க்கு உண்டான தொடர்பு குறித்த படிப்பினையை இந்த ஆய்வு கொடுத்துள்ளது" என்கிறார் ஷெஃபீல்டில் உள்ள நியூரோ சயின்ஸ் இன்ஸ்டியூட்டின் இயக்குநர் பேராசிரிய பமீலா ஷா.

இதுதொடர்பான மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

"மோட்டார் நியூரான் நோய்க்கான மரபியல் மற்றும் புறக்காரணிகள் தனித்தனியாக ஆராயப்பட்டன ஆனால் தற்போது இந்த ஆய்வு இந்த இரண்டையும் சேர்த்து நடத்தப்பட்டுள்ளது ஒரு புதிய பாதைக்கு வித்திடுகிறது." என மோட்டார் நியூரான் கூட்டமைப்பை சேர்ந்த மருத்துவர் ப்ரியன் டிக்கி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :