கருப்புக் குடிநீர்: காஜல் அகர்வால் முதல் ஸ்ருதி ஹாசன் வரை குடிக்கும் தண்ணீரின் சிறப்பு என்ன?

- எழுதியவர், ராஜேஷ் பெதகாடி
- பதவி, பிபிசி தெலுங்கு
காஜல் அகர்வால் மும்பை விமான நிலையத்தில் கையில் ஒரு புட்டி கருப்பு நிறக் குடிநீரோடு இருக்கும் வீடியோ சமீபத்தில் வெளியானது.
செய்தியாளர்கள் அந்தத் தண்ணீரில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது எனக் கேட்டபோது சிரித்துக்கொண்டே, "இது நல்ல குடிநீர். இதை ஒருமுறை குடித்துப் பாருங்கள், உங்களுக்கு மிகவும் பிடிக்கும்," என்று பதிலளித்தார். அதை எவ்வளவு காலமாகக் குடிக்கிறார் எனக் கேட்டதற்கு, "நீண்ட நாட்களாக" என்று பதிலளித்தார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் கூட, சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடகத்தில் தானும் கருப்புக் குடிநீரைப் பருகுவதாகத் தெரிவித்தார்.
ஒரு குவளை கருப்புக் குடிநீரோடு அவர் பதிவிட்ட வீடியோவில், "கருப்புக் குடிநீர் குறித்துக் கேள்விப்பட்டபோது புதிதாகத்தான் இருந்தது. உண்மையில் இது கருப்புக் குடிநீர் இல்லை, 'கார நீர்' (Alkaline water). சாதாரண நல்ல குடிநீரைப் போலவே அதன் சுவை இருக்கும்," என்று கூறியிருந்தார்.
இவர்களைப் போலவே, மலாய்கா அரோரா, ஊர்வசி ரௌதேலா போன்ற பல பிரபலங்கள் கருப்புக் குடிநீர் பருகுவதாக செய்திகள் வெளியாகின.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு
கருப்புக் குடிநீர் என்றால் என்ன?
கார நீர் அல்லது கார அயனியாக்கம் செய்யப்பட்ட குடிநீர் கருப்புக் குடிநீர் என்றழைக்கப்படுகிறது.
பொதுவாக உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது அதிகம் வியர்த்துக் கொட்டிய பிறகு உடலுக்கு மின்பகு பொருட்களை (electrolytes) வழங்குவது போன்ற பயன்கள் இந்தக் குடிநீர் மூலம் கிடைப்பதாக எவிடென்ஸ் பேஸ்ட் காம்ப்ளிமென்டரி அண்ட் ஆல்டெர்னேடிவ் மெடிசன் (இபிசிஏஎம்) எனும் ஆய்விதழ் கூறுகிறது..


எலிகள் மீதான முந்தைய ஆய்வுகள் கார நீர் உடல் எடையைச் சரியாகப் பராமரிக்க உதவுவதைத் தெரிந்துகொண்டதாக எவிடென்ஸ் பெஸ்ட் காம்ப்ளிமென்டரி அண்ட் ஆல்டெர்னேடிவ் மெடிசன் கூறியது. மேலும் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக விளக்கியது.
மறுபுறம், சில நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில், இந்தத் தண்ணீரின் பிஎச் அளவு (அமிலம் மற்றும் காரத்தைக் குறிப்பிடும் அளவீடு) ஏழுக்கும் மேல் இருப்பது, தோலின் வயதான தோற்றத்தையும் குறைக்கிறது. இருப்பினும் இபிசிஏஎம் ஆய்வாளர்கள் இதை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் தங்கள் ஆய்வில் கிடைக்கவில்லை என்றனர்.
கருப்பு நீரில் உள்ள மூலப்பொருட்கள் என்ன?
நம் உடலின் 70% பகுதி, திரவத்தைக் கொண்டுள்ளது. எனவே, உடலின் அனைத்து பாகங்களும் முழு திறனொடு செயல்படுவதற்குப் போதுமான அளவுக்கு சீராக தண்ணீரை உட்கொள்வது அவசியம்.
மனித உடலிலுள்ள நச்சுத் துகள்களை வெளியேற்றுவதற்கு நீர் உதவுகிறது. மறுபுறம், உடலின் வெப்பநிலையை பராபரிப்பதும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு தாதுக்களைக் கொண்டு செல்வதும் உடலிலுள்ள திரவத்தின் பொறுப்பு. உணவுச் செரிமானத்திலும் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கருப்புக் குடிநீரை விற்பனை செய்யும் நிறுவனங்கள், மேற்கூறிய செயல்முறைகளின் சிறந்த செயல்பாட்டிற்காக கருப்புக் குடிநீரை உற்பத்தி செய்ய 70க்கும் மேற்பட்ட கனிமங்களைச் சேர்ப்பதாகக் கூறுகின்றன. கருப்புக் குடிநீரில் வெளிமம் (மேக்னீசியம்) போன்ற கனிமங்கள் உள்ளன. இருப்பினும், கனிமங்களின் விகிதம் இதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடுகிறது.
மொத்தத்தில், கருப்புக் குடிநீர் உயிரியல் செயல்முறைகளின் வழியாக செரிமானத்தை மேம்படுத்துவது, அமிலத்தன்மையைக் குறைப்பது, நோய் எதிர்ப்பாற்றலை வளர்ப்பது போன்றவற்றைச் செய்கிறது.

பட மூலாதாரம், Evocus
வழக்கமான குடிநீருக்கும் கருப்புக் குடிநீருக்கும் என்ன வேறுபாடு?
"நாம் தினமும் உட்கொள்ளும் குடிநீரில் சில தாதுக்கள் குறைந்த அளவில் உள்ளன. இந்தத் தாதுக்கள் நம் உடலுக்கு மிகவும் அவசியமானவை. சில நேரங்களில் இந்தத் தாதுக்களின் குறைபாடு நோய்களை எற்படுத்தவும் கூடும்," என்றார் உணவியல் வல்லுநர் மருதுதுவர் ரூத் ஜெயசீலா.
"ஆர்.ஓ தண்ணீரில் பிஎச் அளவு குறைவாக உள்ளது. அதில் அமிலங்களின் அளவு அதிகமாக உள்ளது. அதனால், ஆர்.ஒ தண்ணீரைச் செயலாக்குவது சில நேரங்களில் உடலுக்குச் சிக்கலாகிறது. இதன்விளைவாக, சில நேரங்களில் வைட்டமின்களும் ஊட்டச்சத்து ஊக்கிகளைத் தனித்தனி எடுத்துக்கொள்ள வேண்டும். கருப்புக் குடிநீர் அப்படிப்பட்டவர்களுக்கு ஓரளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் இவற்றைவிட இயற்கையான மாற்றுகள் எப்போது சிறப்பாகச் செயல்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வே ண்டும்," என்று மருத்துவர் ஜெயசீலா கூறினார்.
திரவ உணவின் அமில மற்றும் கார அளவுகள் அவற்றின் பிஎச். அளவீடு மூலம் அறியப்படுகிறது. அவை 0 முதல் 14 வரை அளவிடப்படுகிறது. பிஎச் அளவு 1-ஆக இருந்தால், தண்ணீரில் அதிகளவு அமிலங்கள் உள்ளன என்று அர்த்தம். பிஎச் 7-க்குக் கீழே இருந்தால் அமிலம் என்றும் பி.எச் அளவு 7-க்கு மேலே இருந்தால் காரம் என்றும் கூறப்படுகிறது. பிஎச் அளவு 13 ஆக இருந்தால், திரவத்தில் கார அளவு மிக அதிக விகிதத்தில் இருப்பதாக அர்த்தம்.
பொதுவாக, நாம் குடிக்கும் நீரில் பிஎச் அளவு 6 முதல் 7 வரை தான் இருக்கும். ஆனால், கார நீரின் பிஎச் அளவு 7-ஐ விட அதிகமாக இருக்கும். அதாவது வழக்கமான குடிநீருடன் ஒப்பிடுகையில் கருப்புக் குடிநீர் காரத்தன்மை அதிகம் கொண்டது.
இருப்பினும், அதிக பிஎச் உள்ளதால் கார நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்குமெனச் சொல்ல முடியாது. அது நீரிலுள்ள கனிமங்களைப் பொறுத்தது. அதோடு அவை பல்வேறு உடல் பாகங்களை எவ்வாறு சென்றடைகின்றன என்பதைப் பார்ப்பதும் முக்கியம்," என்று மருத்துவர் ஜெயசீலா கூறினார்.

பட மூலாதாரம், Evocus
யாருக்குப் பயனளிக்கும்?
சில உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கார நீர் உதவுவதாக ஆராய்ச்சி கூறுகிறது.
சான்றாக, பெப்சின் என்ற நொதி நம் வயிற்றிலுள்ள அமிலத்தன்மைக்குப் பொறுப்பாகிறது. அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தால் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 8.8-க்கும் அதிகமான பிஎச் அளவுடைய காரத்தன்மை கொண்ட மினரல் வாட்டர் இந்த நொதியை நடுநிலையில் வைக்க உதவுகிறது.
இதேபோல், 2018ஆம் ஆண்டில் ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டதாரி பள்ளியுடன் தொடர்புடைய வல்லுநர்களால் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கார மின்னாற்பகுப்பு செய்யப்பட்ட (alkaline electrolyzed water) தண்ணீரைப் பருகுவது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது, மலச் சிக்கலைக் குறைக்கிறது.
வழக்கமான குடிநீருடன் ஒப்பிடும்போது, அதிக பிஎச் உள்ள கார நீரைப் பருகுவது நரம்புகளில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுமென்று அமெரிக்காவின் தாமஸ் ஜெஃபர்சன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், மேற்கூறிய மூன்று ஆய்வுகளின் மாதிரி அளவு குறைவாக இருந்துள்ளதால், இவற்றின் கண்டுபிடிப்புகளை உறுதிசெய்ய பரந்த ஆய்வு அவசியம் என்று ஹெல்த்லைன் என்ற மருத்துவ ஆய்விதழ் இணையதளத்தின் பகுப்பாய்வு கூறியது.

பட மூலாதாரம், Getty Images
பக்க விளைவுகள் ஏற்படுமா?
கருப்புக் குடிநீரால் நீண்ட கால அளவில் பக்கவிளைவுகள் இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
கருப்புக் குடிநீரை அதிகமாகப் பருகுவது குமட்டல், வாந்தி, உடலிலுள்ள திரவங்களின் பிஎச் அளவுகளில் மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தும் என்று துர்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மெரினா மெர்ன் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாதுப்பொருட்களை அதிகமாக உட்கொள்வதும் நல்லதல்ல என்கிறார் உணவியல் நிபுணர் நீதா திலீப்.
"தாதுக்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை. இருப்பினும், தாதுப்பொருட்களை அதிகமாக உட்கொள்வது அவற்றை நச்சுத்தன்மையடையச் செய்யும். அதேநேரம், தாது உட்கொள்வதில் ஏற்படும் குறைபாடும் நோய்களை ஏற்படுத்தும்," என்றார் நீதா திலீப்.
"அதிகப்படியான கால்சியம் ஹைபர்கால்சீமியாவை ஏற்படுத்தும். அதிக இரும்புச்சத்து ஹீமோக்ரோமாடோசிஸுக்கும் வழிவகுக்கும். எனவே, எந்த கனிமத்தையும் தேவையான விகிதத்தில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதிகப்படியான அளவு ஆபத்தானது, " என்கிறார் அவர்.
"பிரபலங்கள் இதை உட்கொள்கிறார்கள் என்பது உண்மைதான். இருப்பினும், அவர்களுக்குச் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட சுகாதார வல்லுநர்கள், உணவியல் வல்லுநர்கள் உள்ளனர். யாரோ ஒருவர் சாப்பிடுவதால் நாமும் சாப்பிடுவோம் என்று அர்த்தமல்ல. ஒவ்வோர் உடலும் வித்தியாசமானது. நாம் எடுத்துக்கொள்வதாக இருந்தால் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்," என்று கூறினார் உணவியல் நிபுணர் நீதா திலீப்.


கருப்புக் குடிநீரின் விலை என்ன?
எவோகஸ் என்பது இந்தியாவில் பரவலாகக் காணப்படும் கருப்புக் குடிநீர் நிறுவனம். மலாய்க்கா அரோரா வைத்திருக்கும் கருப்புக் குடிநீர் புட்டி அந்த நிறுவனத்தைச் சேர்ந்தது தான். 500 மில்லி அளவுடைய 6 புட்டிகளின் தொகுப்பு தற்போது 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒவ்வொரு புட்டி தண்ணீரிலும் 32 மில்லிகிராம் கால்சியம், 21 மில்லிகிராம் வெளிமம், 8 மில்லிகிராம் சோடியம் உள்ளதாக குஜராத்தை சேர்ந்த எவோகஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுபுற, வைத்யா ரிஷி என்றொரு கருப்புக் குடிநீர் நிறுவனம் உள்ளது. இது தமது புட்டிகளை இணையத்தில் விற்பனை செய்கிறது. 500 மில்லி கொண்ட 6 புட்டிகளின் தொகுப்பு 594 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நடைமுறையில், அரை லிட்டர் கருப்புக் குடிநீர் புட்டி 100 ரூபாய் அல்லது அதிலிருந்து சற்று கூடக் குறைய இருக்கலாம்.
நாம் அதைப் பருகலாமா?
கருப்புக் குடிநீரின் சீரான நுகர்வு ஆபத்தானதல்ல என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும் கருப்புக் குடிநீரிலுள்ள தாதுக்களை உட்கொள்ளும் உடல் திறன் மிகவும் முக்கியமானது என்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
"ஒவ்வோர் உடல் அமைப்பும் வித்தியாசமாக இருப்பதால், உங்கள் உடலால் அதிலுள்ள தாதுக்களை உட்கொள்ள முடியாவிட்டால், கருப்புக் குடிநீரை பருகி எந்தப் பயனும் இல்லை," என்கிறார் நீதா திலீப்.
உங்கள் உடலுக்கு தாதுக்களை வழங்க விரும்பினால், இயற்கை முறைகலைப் பின்பற்றுவது நல்லது என்று அவர் பரிந்துரைக்கிறார்.
"நேரடி உணவுகள், உயிரோட்டமுள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். சான்றாக, முளைப் பயிர்கள், புதிய பழங்கள், காய்கறிகளை உண்ணுங்கள். இவற்றிலுள்ள நொதிகளை உடல் எளிதில் எடுத்துக்கொள்ளும்," என்றார்.
மேலும், "நம் முன்னோர்கள் கருப்புக் குடிநீர் போன்றவற்றை உட்கொள்வதை எப்போதாவது பார்த்துள்ளீர்களா? ஆனால், அவர்கள் நம்மைவிட அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். இதைப் புரிந்துகொண்டால், அனைத்துமே இயற்கையானது என்பது புரியும்," என்றார் மருத்துவர் நீதா.
கருப்புக் குடிநிருக்குப் பல இயற்கையான மாற்று வழிகள் உள்ளன என்றார் மருத்துவர் ஜெயசீலா. "லெமன் வாட்டர், கிரீன் டீ, துளசி விதை தண்ணீர், தேங்காய் தண்ணீர், இப்படி பல மாற்றுகள் உள்ளன. முக்கியமாக, தினமும் காலையில் வெள்ளரிக்காய் மற்றும் பழங்களை இரவு முழுவதும் ஊற வைத்த தண்ணீரைக் குடித்து வந்தால், உங்களுக்குத் தேவையான அனைத்து தாதுக்களும் கிடைக்கும்," என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













