பிஎஃப்ஐ ரெய்டு: 95 இடங்கள், 45 கைதுகள் - ஒரே நாளில் நடந்த என்ஐஏ சோதனை

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குத் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ சோதனை நடத்தியது. என்ஐஏ வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே நாளில் என்ஐஏ, இந்திய அமலாக்கத்துறை, மத்திய ரிசர்வ் காவல் படையினர், மாநில காவல்துறையினர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இது குறித்து என்ஐஏ காவல் கண்காணிப்பாளர் ஜெயராய் கூறுகையில், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மேற்கு வங்கம், பிகார் ,மணிப்பூர் ஆகிய 15 மாநிலங்களில் 93 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியதாக தெரிவித்தார். பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்து, பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்ததாக தொடரப்பட்ட 5 வழக்குகள் தொடர்பாக பிஎஃப்ஐ மூத்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

தங்களுடைய உறுப்பினர்களுக்கு ஆயுத பயிற்சி அளிப்பது மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளில் சேர உறுப்பினர்களை தீவிரப்படுத்துவது போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோரை இலக்கு வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

தெலங்கானாவின் நிஜாமாபாத் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் 25 பிஎஃப் உறுப்பினர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பயிற்சி அளிப்பதற்காக முகாம்களை ஏற்பாடு செய்வதை மாநில காவல்துறை கண்டறிந்தனர். அதன் பின்னர். மதம் போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களில் அவர்கள் ஈடுபட்டதாக என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த பிஎஃப்ஐ மற்றும் அதன் இணை அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களால் ஏராளமான கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கல்லூரிப் பேராசிரியரின் கையை வெட்டுதல், பிற மதங்களை ஆதரிக்கும் அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களைக் கொலை செய்தல், முக்கிய நபர்கள் மற்றும் இடங்களை குறிவைத்து வெடிபொருட்கள் சேகரிப்பு, இஸ்லாமிய அரசை நிறுவும் நோக்குடன் செயல்படும் குழுவினருக்கு ஆதரவு மற்றும் பொதுச் சொத்துக்களை அழித்தல் போன்ற விவகாரங்களில் பிஎஃப்ஐக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.

இன்று காலை நடத்தப்பட்ட சோதனையில், ஆவணங்கள், பணம், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் ஏராளமான டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 45 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. கேரளாவில் இருந்து 19 பேரும், தமிழகத்தில் 11 பேரும், கர்நாடகாவில் இருந்து 7 பேரும், ஆந்திராவில் 4 பேரும், ராஜஸ்தானில் 2 பேரும், உ.பி மற்றும் தெலங்கானாவில் இருந்து தலா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம். மொஹம்மத் அலி ஜின்னா, மொஹம்மத் யூசுஃப், ஏ.எஸ். இஸ்மாயில் ஆகியோரும், மற்றொரு வழக்கில் சையத் ஷாக், வழக்கறிஞர் காலித் மொஹம்மத், ஏ.எம். இத்ரிஸ், மொஹ்ம்மத் அபுதாஹிர், எஸ். காஜா மொஹிரின், எஸ். யாசர் அராஃபத், பரகதுல்லா, ஃபயாஸ் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் 12 என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

சென்னை புரசைவாக்கத்தில் இருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் தமிழ்நாடு தலைமை அலுவலகத்தில் காலை 3.30 மணி முதல் 8.45 மணி வரை சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

"12 அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர். அலுவலகத்தில் இருந்து ஹார்ட் டிஸ்க், சஞ்சிகைகள் போன்றவற்றை எடுத்துச் சென்றனர்" என அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல்லில் 3 மணி நேரம் சோதனை

திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்சி அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் 3 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் பேகம்பூர் முகமதியாபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான 3 வதுமாடி கட்டிடத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கட்சி செயல்பட்டு வருகிறது இந்த கட்சி அலுவலகத்தில் இன்று 22.09.22 அதிகாலை 3:30 மணி அளவில் NIA அதிகாரிகள் 10 பேர் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

பட மூலாதாரம், ANI

இதனால் கட்சி அலுவலகம் உள்ள முகமதிய புரத்தில் சாலையின் இரு பக்கமும் தடுப்புகளை ஏற்படுத்தி துப்பாக்கி ஏந்திய அதிவேக அதிரடிபடை மற்றும் திண்டுக்கல் காவல்துறையினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தடுப்புகளை மீறி கட்சி அலுவலகம் செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அப்பொழுது என்.ஐ.ஏ.வுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மூன்று மணி நேரம் சோதனை முடிந்து என்ஐஏ அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து கீழே இறங்கி வந்த போது பதற்றமான சூழ்நிலை நிலவியது.சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் தெரியவந்திருக்கிறது.

ராமநாதபுரம் வாலிநோக்கத்தில் சோதனை

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள வாலிநோக்கம் கிராமத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் பரக்கத்துல்லா வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை 4 மணியில் இருந்து சுமார் 7 மணி வரை முன்று மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

பின்னர் எஸ்டிபிஐ கட்சி மேற்கு மாவட்டத் தலைவர் பரக்கத்துல்லாவை விசாரணைக்காக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை அழைத்து சென்றனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

பட மூலாதாரம், ANI

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பரகத்துல்லாவை அழைத்துச் சென்ற பிறகு வாலிநோக்கம் கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் செய்ய சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வாகனங்கள் செல்ல முற்பட்டனர்; அவர்களை காவலர்கள் தடுத்தி நிறுத்தினர்.

கோவையில் போராட்டம்

கோவை கரும்புக்கடை பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தேசிய செயற் குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

காலை 5.30 மணி முதல் இஸ்மாயில் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஏற்கெனவே கோவை உக்கடம் பகுதியில் உள்ள எஸ்டிபிஐ அலுவலகத்தில் கடந்த 13 -ஆம் தேதி வருமான வரித்துறை, அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

சோதனை முடிவில் அதிகாரிகள் இஸ்மாயிலை விசாரணைக்காக தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து ஒப்பனக்கார வீதியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் வீடுகளில் அதிகாலை 4 மணி முதல் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை மேற்கொண்டனர். கோரிப்பாளையம், நெல்பேட்டை சுங்க பள்ளி வாசல், வில்லாபுரம், யாகப்பா நகர் ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்றது.

அமித்ஷா ஆலோசனை

நாட்டின் பல பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய உள்துறை செயலர், தேசிய புலனாய்வு அமைப்பின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிஃஎப்ஐ என்பது என்ன?

கேரளாவில் இயங்கி வந்த தேசிய வளர்ச்சி முன்னணி(என்.டி.எஃப்), தமிழ்நாட்டின் மனித நீதிப் பாசறை, கர்நாடகாவைச் சேர்ந்த ஃபோரம் ஃபார் டிக்னிட்டி ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து 2007-ஆம் ஆண்டுபாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உருவாக்கப்பட்டது.

வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு குற்றங்களில் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு பேராசிரியரை தலையை அறுத்து படுகொலை செய்தது, தமிழ்நாட்டில் ராமலிங்கம் படுகொலை உள்ளிட்டவை இந்த அமைப்பின் மீது கூறப்பட்ட முக்கியக் குற்றச்சாட்டுகள்.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு பணம் வரும் வழிகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: