You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இளையராஜா எம்.பி பதவிப் பிரமாணம் எடுத்தபோது என்ன செய்தார்?
இளையராஜா எனும் நான் என்று தொடங்கி கடவுளின் பெயரால் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறேன் என்று கூறி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.
குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் இருந்தபோது இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, ஆந்திராவைச் சேர்ந்த கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த வீரேந்திர ஹெக்கடே ஆகியோரை மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக முன்மொழிந்தார்.
இதில் இளையராஜா நீங்கலாக மற்ற மூவரும் நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியபோது எம்.பி ஆக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இளையராஜா அமெரிக்காவில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்ததால் அவர் முதல் நாள் நிகழ்வில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள வரவில்லை.
இந்த நிலையில், குடியரசு தலைவராக திரெளபதி முர்மூ இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையொட்டி இரு அவை உறுப்பினர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் முடிவில் உணவு இடைவேளைக்குப் பிறகு மாநிலங்களவையும் மக்களவையும் பிற்பகல் 2 மணிக்கு கூடியது. அப்போது இரு அவைகளிலும் விலைவாசி பிரச்னையை எழுப்ப எதிர்கட்சிகள் ஆயத்தமாகின.
நாடாளுமன்ற விதிகளின்படி புதிய உறுப்பினராக ஒருவர் பதவியேற்கும்போது அவைக்குள் எவ்வித கூச்சலோ குழப்பமோ இருக்கக் கூடாது.
அந்த வகையில், மாநிலங்களவை பிற்பகல் 2 மணிக்கு அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங் தலைமையில் கூடியபோது எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதற்காக அவையின் மையப் பகுதியை நோக்கி வர முற்பட்டனர்.
அமைதி காத்த எதிர்கட்சிகள்
ஆனால், 'புதிய உறுப்பினர் பதவியேற்பு நடைமுறை' என மாநிலங்களவை துணைத் தலைவர் அறிவித்ததும் எதிர்கட்சி எம்.பிக்கள் அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர்.
இதையடுத்து இளையராஜாவை பதவியேற்க வரும்படி மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் அழைப்பு விடுத்தார். அப்போது கையில் தமிழில் எழுதப்பட்ட காகிதத்துடன் வந்த இளையராஜா, தமது பதவிப்பிரமாணத்தை தமிழ் மொழியில் எடுத்துக் கொண்டார்.
"மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் இளையராஜா எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பெற்றதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றிருப்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் 'கடவுளின்' பெயரால் ஆணையிட்டுக் கூறுகிறேன்," என்று இளையராஜா பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் நடைமுறைப்படி பதவியேற்பு ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டபோது உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.
தமிழ் திரையுலகத்தை தனது இசையால் அரை நூற்றாண்டு காலம் ஆண்ட இளையராஜா, 1000 படங்களுக்கு மேல் ஸ்கோர் செய்து 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
தற்போது 79 வயதாகும் இளையராஜாவுக்கு 2010ஆம் ஆண்டு பதம் பூஷண் விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்தது. அதன்பிறகு 2018ஆம் ஆண்டு பத்மவிபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்ட நிலையில், இசைத்துரையில் அவர் ஆற்றி வரும் சேவையை கெளரவிக்கும் விதமாக கலைத்துறையில் இருந்து அவரை நியமன எம்.பி.யாக குடியரசு தலைவர் நியமித்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்