தெலங்கானா ஆளுநர் தமிழிசை Vs மாநில அரசு - மோதலுக்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், PIB
- எழுதியவர், சுரேகா அப்பூரி
- பதவி, பிபிசி தெலுங்கு
தெலங்கானா அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் தற்போது வீதிக்கு வந்திருக்கின்றன. அண்மையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பத்ராசலம் சென்றிருந்த போது, அவரை வரவேற்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இல்லாதது அவரை கொதிப்படையச் செய்தது.
ஆளுநருக்கு நெறிமுறைகளின்படி தரப்பட வேண்டிய மரியாதை குறைபடும்போது மாநில அரசிடம் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. ஆனால் விமர்சனங்களுக்கு தற்போது அரசு அதிகமாக பதில் அளிக்கவில்லை.
ஆளுநருக்கான நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் என்ன சர்ச்சை? ஓர் ஆளுநரை எதற்காக, எப்படி அரசு மதிக்க வேண்டும்? இந்த விவகாரம் எப்படி அரசியலாக மாறியது?
ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கடந்த சில மாதங்களாக மறைமுகமாகப் பேசப்பட்டாலும், ஆளுநர் உரையின்றி மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது, இந்த மோதலை அம்பலப்படுத்தியது. எனினும், கவுசிக் ரெட்டியை சட்ட மேலவையில் நியமிக்க அரசு பரிந்துரைத்ததற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதபோதே இது தொடங்கிவிட்டது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் அக்டோபரில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் தொடர்ச்சிதான் என்றும், ஆளுநரின் உரை தேவையில்லை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் சட்டசபையில் உரையாற்றும் பாரம்பரியம் இல்லாமல் சமீபத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. இதற்கு தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.
விதிகளைக் காரணம்காட்டி உரை ரத்து செய்யப்பட்டதாகவும், இதனால் கடந்த ஓராண்டில் அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பை இழந்ததாகவும் ஆளுநர் விமர்சித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியான ஒரு செய்தியில் மாநில அரசு தனது நிலைப்பாட்டை விளக்கியது. அந்தச் செய்தியில் எந்தப் பெயரும் குறிப்பிடப்படவில்லை.
"ஆளுநரின் பதவிக்காலத்தின் தொடக்க இரண்டு ஆண்டுகளில் அவருடனான உறவுகள் சுமுகமாகவே இருந்தன. இருப்பினும், அதன் பிறகு, அவர் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்துடன் உடன்படவில்லை. கௌசிக் ரெட்டியை ஆளுநரின் ஒதுக்கீட்டின் கீழ் சட்டப் பேரவைக்கு நியமிக்க மாநில அமைச்சரவை பரிந்துரை செய்தது. ஆளுநர் பல நாட்களாக எந்த முடிவும் எடுக்காமல் கோப்பை கிடப்பில் போட்டுவிட்டார்." என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
"இரு அவைகளிலும் பேசும் உரையாக இருந்தாலும் சரி அல்லது ஜனவரி 26ஆம் தேதி கொடியேற்றும்போது ஆற்றும் உரையாக இருந்தாலும் சரி, அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் உரையை மட்டுமே படிக்க முடியும். தன் சொந்த உரையைப் படிக்க முடியாது. அரசியலமைப்பு இதை அனுமதிக்கவில்லை. ஜனவரி 26 அன்று மாநில அரசு எந்த உரையையும் வழங்கவில்லை. இருப்பினும், அவர் தனது சொந்த உரையை வாசித்தார். 2021-22 ஆம் ஆண்டிற்கான ஆளுநரின் பட்ஜெட் உரையின் போது, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத சில பத்திகளைப் படித்தார்" என்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், PMO
ஒரு கட்டத்தில், "நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்" என்று கூறியதோடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சென்று சந்தித்து, நிகழ்வுகளை விளக்கினார் தமிழிசை. அந்தச் சந்திப்புக்குப் பிறகும் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான உறவுகள் பெரிதாக மாறவில்லை. பத்ராசலம் சென்ற ஆளுநரை வரவேற்க மாவட்ட ஆட்சியரோ எஸ்பியோ செல்லவில்லை என்பது இருதரப்புக்கும் இடையே அதிகரித்த பகைமைக்கு சாட்சி.
அரசியல் சட்டத்தில் ஆளுநருக்கான இடம் என்ன?
ஆளுநர் தனி நபர் அல்ல. இது ஒரு அரசியல் சட்டப்பூர்வமான பதவி. "சட்டசபை உறுப்பினர்களாக உங்களுக்கு பல்வேறு பொறுப்புகள் உள்ளன. எனினும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என்ற வகையில் நீங்கள் ஆளுநருக்குப் பொறுப்பு. ஆளுநரின் பெயராலும், ஆளுநராலும், ஆளுநரின் கீழும் அரசு செயல்பட வேண்டும்' என அரசியல் சாசனம் கூறுகிறது. ஆளுநர் என்பவர் இந்தியக் குடியரசுத் தலைவரால் மத்திய அரசின் முகவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
மூத்த வழக்கறிஞர் வெமுலாபதி பட்டாபியிடம், ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டப்படி என்ன மரியாதை கொடுக்க வேண்டும் என்று பிபிசி கேட்டது.
"அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக சட்டமன்றத்தில் நுழையும் போது, அவர்கள் சட்டமன்ற அமைப்பின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள். அவர்கள் தலைமைச் செயலகம் அல்லது அந்தந்த துறை அலுவலகங்களில் முதலமைச்சர் அல்லது அமைச்சர்களாக நுழையும் போது, அவர்கள் நிர்வாகத்தின் ஒரு பகுதியாகிறார்கள். ஆளுநர்தான் தலைவர். ஆளுநராக பதவி வகிக்கும் அரசாங்கத்தில் பணியாற்றும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எப்படி அவருக்கு எதிராக செயல்படுகிறார்கள்? அவர்கள் இங்கு தனி நபர்களாகவோ, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாகவோ இல்லை. இது அரசியலமைப்பு பதவிகள் பற்றியது. ஆளுநரை அவமரியாதை செய்வது, அரசியல் சாசனத்தை அவமதிப்பதாகும். அதே சமயம் ஆளுநரும் கட்சி சார்பற்ற முறையில் செயல்பட வேண்டும். ஆளுநர் பதவி தொடர்பான அனைத்து வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் அமலில் இருக்கும்வரை ஆளுநரை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது." என்றார் அவர்.
ஆளுநரை யார் வரவேற்க வேண்டும்?
தமிழிசை சவுந்தரராஜன் இரண்டு நாட்கள் பத்ராசலத்துக்கு பயணம் மேற்கொண்டார். அவரை வரவேற்பதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி இல்லை. பத்ராத்ரி-கொத்தகுடேம் ஆட்சியர் அனுதீப் துரிசெட்டி, மாவட்ட எஸ்.பி. சுனில் தத் ஆகியோர் இரண்டு நாட்கள் விடுமுறையில் சென்றுவிட்டனர். அவருக்கு ஹெலிகாப்டர் மறுக்கப்பட்டதால், ரயில் மற்றும் காரில் பயணம் செய்தார். ரயில் நிலையத்தில் அவரை கூடுதல் ஆட்சியர் கே.வெங்கடேஸ்வரலு மற்றும் தென் மத்திய ரயில்வே உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ஆளுநரை வரவேற்க மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் செல்லாதது குறித்து மூத்த வழக்கறிஞர் ஜந்தியாலா ரவிசங்கரிடம் பிபிசி கேட்டது.
"நெறிமுறைப்படி முதலமைச்சரும், அமைச்சர்களும் சென்று ஆளுநரை வரவேற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாநிலத்துக்கு வரும் பிரதமரை மாநில தலைமைச் செயலர் அதிகாரப்பூர்வமாக வரவேற்பார். அதேபோல மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் ஆளுநரை வரவேற்க வேண்டும். சர்க்காரியா கமிஷன், வெங்கடாச்சலை கமிஷன், புஞ்சி கமிஷன் போன்றவற்றில் இந்த நடைமுறை தெளிவாக வரையப்பட்டுள்ளது. அதிகாரிகள் கவர்னரை வரவேற்பது போன்றவற்றை கவனிக்க வேண்டும். அவர் தங்குவதையும் அவர்களும் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். ஹெலிகாப்டர் வழங்க வேண்டும் என்பது போல் எங்கும் எழுதப்படவில்லை" அவர் கூறினார்.
"நம்பகமான வட்டாரங்களில் இருந்து எனக்குக் கிடைத்த செய்தியின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியை விடுப்பில் செல்லுமாறு முதல்வர் அலுவலகம் அறிவுறுத்தியிருக்கிறது" என்று பிபிசியிடம் பேசிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திர வதன் கூறினார்.
"இது போன்ற வெளிப்படையான, அப்பட்டமான நெறிமுறை மீறல் ஒன்றுபட்டிருந்த ஆந்திராவில் ஒருபோதும் நடக்கவில்லை. ஐஏஎஸ் அதிகாரிகள் மாநில நிர்வாக அமைப்பில் பணிபுரிந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள DoPT-யின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றனர். எனவே, அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு உண்டு"
இரு தரப்பிலும் அசௌகரியமான சூழல் நிலவுகிறது என அரசியல் ஆய்வாளர் கட்டாரி ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.
"கடந்த காலங்களில் கூட, ஆளுநர் அரசாங்கத்தின் வழக்கமான பணிகளில்தலையிடுவார். அதேபோல், ஆளுநர்கள் மத்திய அரசுக்கு சாதகமாக நடந்து கொண்டனர். ஆனால், இந்த முரண்பாடு ஒருபோதும் இந்த அளவு அப்பட்டமாக இருந்ததில்லை." என்று அவர் கூறினார்.













