சங்ககால கொற்கைத் துறைமுகத்தை அடையாளம் காண ஆய்வு: மு.க. ஸ்டாலின்

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டில் ஏழு இடங்களில் அகழாய்வும் சங்க கால கொற்கைத் துறைமுகத்தை அடையாளம் காண்பதற்கான முன்கள ஆய்வும் நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
"அண்மைக் காலத்தில் கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையைப் புதிய காலக்கணிப்பு மூலம் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது.
கீழடி அகழாய்வு மற்ற அகழாய்வுகளுக்கு முன்னோடி அகழாய்வாகத் திகழ்கிறது. இதுவரை கங்கைச் சமவெளியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்த "நகரமயமாக்கம்'' தமிழ்நாட்டில் இல்லையென்றும், பிராமி எழுத்து மௌரியர் தோற்றுவித்தது என்றும் கருதுகோள்கள் இருந்தன. அத்தகைய கருதுகோள்களுக்கு அறிவியல்பூர்வமாக விடையளித்துள்ளது கீழடி அகழாய்வு. தமிழ்நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது.
சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு. ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து எனக் கண்டறியப்பட்டுள்ளது.
"தண் பொருநை'' என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்ய முடிகிறது என்பதை கடந்த 8-9-2021 அன்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது 2022ஆம் ஆண்டில் கீழ்க்காணும் ஏழு இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படவுள்ளன.
1. கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் (கொந்தகை, அகரம், மணலூர்), சிவகங்கை மாவட்டம் - எட்டாம் கட்டம்
2. சிவகளை, தூத்துக்குடி மாவட்டம் - மூன்றாம் கட்டம்
3. கங்கைகொண்டசோழபுரம், அரியலூர் மாவட்டம்- இரண்டாம் கட்டம்
4. மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம்- இரண்டாம் கட்டம்
5. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் - முதல் கட்டம்
6. துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்- முதல் கட்டம்
7. பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம்- முதல் கட்டம்
மேலும், தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரத்திற்கு எதிரில் கடற்கரையோரத்தில் முன்கள புலஆய்வு மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினைக் கண்டறிய கடலோரங்களில் ஆய்வினை மேற்கொள்ள இந்தியக் கடலாய்வு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இந்த அகழாய்வுப் பணிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இதற்காக வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 5 கோடி ரூபாய் நிதியில் அகழாய்வுகள், களஆய்வுகள் மற்றும் சங்க காலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன" என்று முதலமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தற்போது அகழாய்வு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள கீழடி, சிவகளை, கங்கைகொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை ஆகியவற்றில் ஏற்கனவே அகழாய்வுகள் நடந்துள்ள நிலையில், அவற்றின் அடுத்தகட்ட அகழ்வுகள் அங்கு நடைபெறவுள்ள. மீதமுள்ள துலுக்கர்பட்டி, வெம்பக்கோட்டை, பெரும்பாலை ஆகிய இடங்களில் புதிதாக அகழாய்வுப் பணிகள் துவங்கவிருக்கின்றன.

பட மூலாதாரம், KERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH
துலுக்கர்பட்டியின் விளாங்காடு வாழ்வியல் மேடு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூருக்கு தென்கிழக்கில் 6 கி.மீ தொலையில் நம்பி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது துலுக்கர்பட்டி. இவ்வூரிலிருந்து கண்ணநல்லூர் செல்லும் சாலையில் 2.5. கி.மீ தொலைவில் ஒரு வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இந்தப் பகுதி விளாங்காடு என்றழைக்கப்படுகிறது. இரும்பு மற்றும் தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த இந்த வாழ்வியல் மேடானது 2.5 மீ உயரத்தில் 12 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது.

இங்கே சிவப்பு வண்ணம், கருப்பு - சிவப்பு வண்ணம், கருப்பு வண்ணம், வெண்புள்ளி இட்ட கருப்பு-சிவப்பு வண்ண மட்கல ஓடுகளும் குறியீடுகள் கொண்ட மட்கல ஓடுகளும் ஈமத்தாழிகளும் கிடைத்து வருகின்றன. இந்தப் மேட்டில் கிடைக்கப்பெற்றுள்ள அரிய தொல்பொருட்களைக் கருத்தில் கொண்டு தொல்லியல் ஆய்வுகளை நடத்த மாநில தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது.
இத்தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்ற முறை, தொல்பொருட்களின் தன்மை ஆகியவற்றை கண்டறிவதற்காக இந்த அகழாய்வு நடத்தப்படவுள்ளது. நம்பி ஆற்றின் கரையில் இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவதும் இவ்வகழாய்வின் ஒரு நோக்கமாகும். இத்தொல்லியல் தளமானது சிவகளை, ஆதிச்சநல்லூர் தொல்லியல் களங்களின் சமகாலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
வெம்பக்கோட்டையின் நுண் கற்கால தொல்லியல் மேடு
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து தெற்கே 15 கி.மீ. தொலைவில் வைப்பாறு ஆற்றின் இடது கரையில் வெம்பக்கோட்டை என்ற ஊர் அமைந்துள்ளது. 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பகுதி மேட்டுக்காடு என்றும் உச்சிமேடு என்றும் அழைக்கப்படுகிறது. இங்கே நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இந்தத் தொல்லியல் மேட்டில் வெளிப்பட்டு வருகின்றன. இத்தொல்லியல் மேடு தற்போதைய நிலப்பரப்பில் இருந்து 2 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு இரும்புக் கால மட்கல ஓடுகள் மிகுதியாக சிதறிக்கிடக்கின்றன. மேலும், இம்மேட்டில் நுண்கற்கருவிகள், பல்வேறு வகையான மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள், காதணிகள், சுடுமண்ணால் ஆன வட்டுகள், இரும்புக் கசடுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
காலவாரியாக அதிக எண்ணிக்கையில் நுண்கற்கருவிகளை சேகரிப்பதே தற்போது மேற் கொள்ளப்படவுள்ள அகழாய்வின் நோக்கமாகும்.

கொங்கு நாட்டின் வட எல்லையான பெரும்பாலை
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் - மேலச்சேரி சாலையில் பென்னாகரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் பாலாறு ஆற்றின் இடது கரையில் அமைந்திருக்கிறது. பெரும்பாலை. வரலாற்று முக்கியத்துவமுள்ள இந்த ஊர் கொங்கு நாட்டின் வடவெல்லையாக இருந்ததாகக் கருதப்படுகிறது.

பட மூலாதாரம், KERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH
இங்குள்ள தொல்லியல் மேடு தற்போதைய நிலவியல் அமைப்பிலிருந்து 3 முதல் 4 மீட்டர் உயரத்தில் 75 ஏக்கர் நிலப் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. இம்மேட்டில் கருப்பு-சிவப்பு நிற மட்கல ஓடுகள், கருப்பு நிற மட்கல ஓடுகள், சிவப்பு பூச்சுப்பெற்ற மட்கல ஓடுகள், சிவப்பு நிற மட்கல ஓடுகள் ஆகியவை கிடைக்கின்றன.
இங்குள்ள செம்மனூர் சிவன் கோயில் எதிரே ஈமக்காடுப் பகுதி ஒன்று காணப்படுகிறது. அண்மையில் ஈமக்காட்டுப் பகுதியின் நடுவே கால்வாய் வெட்டியபோது உயரமான வயல்வெளியில் 50க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் கண்டறியப்பட்டன.
இந்தப் பகுதியில் கிடைத்துள்ள தொல்பொருட்கள் மூலம் தொடக்க வரலாற்றுக் காலத்தைப் பற்றிய சிறந்த நுண்ணறிவை பெறமுடியுமென நம்பப்படுகிறது. இந்தத் தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்றம், தொல்பொருட்களின் தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அகழாய்வு நடத்தப்படும். மேலும் பாலாற்றின் ஆற்றங்கரைகளில் இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவதும் அகழாய்வின் நோக்கமென மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
பிற செய்திகள்:
- உ.பி தேர்தலில் களமிறங்கும் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட உன்னாவ் பெண்ணின் தாய்
- இந்திய ராணுவத்தினருக்கு டிஜிட்டல் பிரின்டிங் சீருடை அறிமுகம் - 10 முக்கிய தகவல்கள்
- நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தை: நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பிரசவம்
- ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் சம்பவத்துக்கு எது காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













