தமிழ்நாட்டில் கொரோனா, ஒமிக்ரானை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் - அறிய வேண்டிய 15 தகவல்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், DAILYTHANTHI

படக்குறிப்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

தமிழ்நாட்டில் முன்பைவிட சற்றே அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும் பரவி வரும் ஒமிக்ரான் திரிபை கருத்தில் கொண்டு, மக்கள் நடமாட்டங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அரசு பிறப்பித்துள்ள உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகளில் இருந்து 15 முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

1) சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

2) மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் (எல்கேஜி, யுகேஜி) செயல்பட அனுமதி இல்லை.

3) அனைத்து பள்ளிகளிலும், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

4) அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

5) 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்.

6) வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

7) உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

8) பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Park/ Amusement Park) 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

தமிழ்நாடு கொரோனா

பட மூலாதாரம், @SajSadiqCricket

9) திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

10) இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

11) துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

12) கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுகள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

13) உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

14) பொது போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும்.

15) மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: