தமிழ்நாட்டில் மின் தடைக்கு யார் காரணம்? மோதும் கட்சிகள் - அதிர வைக்கும் பின்னணி

பட மூலாதாரம், SENTHIL BALAJI FB
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
`தமிழ்நாட்டில் அடிக்கடி ஏற்படும் மின் தடை பிரச்னைக்கு இந்த கட்சிதான் காரணம் என ஆளும் தி.மு.க அரசும் அ.தி.மு.கவும் பரஸ்பரம் குற்றம்சுமத்தி வருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் `ஒப்பந்ததாரர்கள் மோதல் உள்பட பல்வேறு காரணங்கள் பின்னணியில் உள்ளன' என்கின்றன மின் ஊழியர் சங்கங்கள். என்ன நடக்கிறது தமிழ்நாடு மின் வாரியத்தில்?
சென்னை அண்ணா சாலையில் மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரம் மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ` மின் பராமரிப்புப் பணிகளை கடந்த ஆட்சியில் ஒன்பது மாதங்களாக மேற்கொள்ளவில்லை. இதனால் தற்போது மின் தடங்கல் ஏற்படுகிறது. தற்போது பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதனை 10 நாள்களுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
மேலும், `மின்சார வாரியத்துக்கு ரூ. 1,33,671 கோடி கடன் உள்ளது. கடந்த ஆட்சியில் மின் வாரியத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் விவகாரங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும். கடந்த ஆட்சியில் தமிழகத்தை மின் மிகை மாநிலம் என அழைத்தார்கள். ஆனால், தமிழ்நாடு மின் மிகை மாநிலம் அல்ல. நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்தால்தான் அது மின் மிகை மாநிலம்,' என்றார்.
செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுத்த குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் மின்துறை அமைச்சருமான தங்கமணி, `நாங்கள் முறையாக பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டோம். அதனால்தான் கடந்த மே 2 ஆம் தேதி வரையில் மின்சார விநியோகம் சீராக இருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்த 10 நாள்களுக்குள் மின் விநியோகத்தை சீரமைப்போம் என்றனர்.
ஆனால், ஒரு மாதம் கடந்தும் மின் உற்பத்திப் பணிகளை மேற்கொள்ளாததால் தமிழ்நாடு முழுவதும் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. தனது துறையை செந்தில் பாலாஜி முறையாகக் கவனிக்காததால்தான் இந்தத் தடை ஏற்படுகிறது,' என்றார்.
மின்வாரியத்தில் என்ன நடக்கிறது?
`` தற்போது நடப்பது மின்வெட்டு அல்ல மின் தடை தான். போதிய அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லையென்றால் அது மின்வெட்டாக பார்க்கப்படும். கடந்த மூன்றாண்டுகளாக மின்வாரியத்தில் பராமரிப்புப் பணிகள் நடக்கவில்லை. அதேபோல், தளவாடங்களையும் போதிய அளவில் கொள்முதல் செய்யவில்லை. மின்சார உற்பத்தியையும் அ.தி.மு.க அரசு மேற்கொள்ளவில்லை. அவர்கள் ஆட்சிக்காலத்தில் உற்பத்தி செய்ததாகச் சொல்லப்படுகின்றவை எல்லாம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்கள்தான்," என்கிறார் மத்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் (சி.ஐ.டி.யு) தலைவர் ஜெய்சங்கர்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் சில புள்ளி விவரங்களையும் பட்டியலிட்டார். ``தமிழ்நாட்டின் மின்சார தேவையை சமாளிப்பதற்காக 3,200 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்வது என அ.தி.மு.க அரசு முடிவெடுத்தது. இதனையடுத்து, கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து 2028 வரையில் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது தொடர்பாக ஓர் ஒப்பந்தம் போட்டுள்ளனர். அவ்வாறு தனியாரிடம் கொள்முதல் செய்துவிட்டு `மின் மிகை மாநிலம்' எனக் கூறி வந்தனர்.
ஆனால், எந்தக் காலத்திலும் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்ததில்லை. தமிழ்நாட்டின் மொத்த தேவை என்பது 16,500 மெகா வாட் மின்சாரம் ஆகும். இதில், சென்னை மாநகருக்கு 3,600 மெகாவாட் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் 3 கோடியே 10 ஆயிரம் நுகர்வோர்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாமல், ஓர் ஆண்டுக்கு புதிதாக 750 மெகாவாட் மின்சாரத்தை நாம் கட்டாயமாக உற்பத்தி செய்தாக வேண்டும். 16,500 மெகாவாட்டுடன் 750 சேர்த்து 17,250 என்ற கணக்கில் ஆண்டுதோறும் புதிதாக உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். நகர்ப்புற விரிவாக்கம், தொழிற்சாலைகள் பெருக்கம், தொழில்நுட்ப பூங்கா, புதிய வீடுகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு இதனைச் செய்ய வேண்டும்.
கிடப்பில் உப்பூர் அனல்மின் நிலையம்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
அதேநேரம், உடன்குடி அனல்மின் நிலைய திட்டம், எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம் போன்றவை நிலுவையில் உள்ளன. உப்பூர் அனல்மின் நிலைய திட்டத்தை இழுத்து மூட உள்ளனர். அங்கு 3,500 கோடி ரூபாயை முதலீடும் செய்துள்ளனர். சுற்றுச்சூழல் உள்பட பல்வேறு பிரச்னைகள் காரணமாக, அதனை கைவிட வேண்டும் என மின்வாரிய கூட்டத்தில் வைத்து முந்தைய வாரியத் தலைவர் பங்கஜ்குமார் பன்சால் ஒப்புதலையும் பெற்றுவிட்டார். `இந்தத் திட்டத்தைக் கைவிடக் கூடாது' எனப் புதிய வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானியிடம் கூறியுள்ளோம்," என்கிறார்.
மேலும், ``தற்போது ஜூன் முதல் செப்டம்பர் வரையில் காற்றாலையில் இருந்து நமக்கு மின்சாரம் வரும். தற்போது காற்றாலைகள் 8,500 மெகாவாட் திறனுள்ளதாக உள்ளன. இதில் இருந்து 2,800 முதல் 3,000 மெகாவாட் மின்சாரம் உறுதியாகக் கிடைத்து வருகிறது. அது இந்த 4 மாதங்களுக்கு மட்டும்தான். அதன்பிறகு 400 மெகாவாட் கிடைப்பதே பெரிய விஷயமாகப் பார்க்கப்படும். காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்கும் இந்தநேரத்தில் மின்தடை உள்ளது என்று கூறுவதே தவறானது" என்கிறார்.
வடசென்னையில் என்ன சிக்கல்?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
`சென்னையில் மின் தடை ஏற்படுவதற்கு என்ன காரணம்?' என்றோம்.
``வடசென்னை அனல்மின் நிலையத்தில் நடக்கும் பிரச்னைகள்தான். அங்கு இரண்டு யூனிட்டுகளிலும் தலா 600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். ஆனால், கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ஜூன் முதல் வாரம் வரையில் ஒரு யூனிட் கூட இயங்கவில்லை. இதற்குக் காரணம், நிலக்கரியை எரித்துக் கிடைக்கும் சாம்பலை கொட்டும் பணியை தனியார் நிறுவனம் ஒன்று செய்து வந்தது. அந்த வேலையை வேறு ஒரு நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டனர்.
இதற்காக முந்தைய நிறுவனத்துக்கு மாதம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து வந்தனர். புதிய நிறுவனத்துக்கு மாதம் 85 லட்ச ரூபாய்க்கு வேலையை கொடுத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மோதலில் யூனிட்டை இயக்க முடியாமல் செய்துவிட்டனர். இதனால் சென்னைக்குக் கிடைக்க வேண்டிய 500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக 21 ஆம் தேதி மின்வாரிய தலைவரிடம் புகார் மனுவையும் கொடுத்துள்ளோம். இந்த மின் தடைக்கு அரசாங்கம் காரணமல்ல, தனி நபர்கள்தான் காரணம். இது வெளியுலகின் கவனத்துக்கு வரவில்லை.
மாற்று வழிகள் என்ன?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து (நெய்வேலி, கல்பாக்கம் உள்பட) 6,800 மெகாவாட் மின்சாரம் நமக்கு வருகிறது. இதுதவிர, மின்சாரத்தை தனியாரிடம் இருந்து பெறாமல் தமிழக அரசே உற்பத்தி செய்ய வேண்டும். மத்திய நிதித்துறை அமைச்சகம், 25 ஆண்டுகளாக இயங்கி வரும் அனல் மின் நிலையங்களை மூட வேண்டும் எனக் கூறியுள்ளது. அதாவது நிலக்கரி அடிப்படையில் இயங்கும் நிலையங்களை மூடிவிட்டு சூழலியல் பாதுகாப்புக்கு ஏற்றபடி தயாரிக்க வேண்டும் என்ற முடிவில் இந்திய அரசு உள்ளது.
நாமும் நிலக்கரிக்கு மாற்றாக சோலார் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். சோலார் பேனல்களை ஒருமுறை பொருத்திவிட்டால் 25 ஆண்டுகளுக்கு பேட்டரிகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை. இதற்காக சோலார் பூங்காக்களை அரசு உருவாக்க வேண்டும்.
பசுமை வழிகளில் மின்சாரம் தயாரிப்பதற்கு ஏராளமான புதிய வழிகள் உள்ளன. அதனைச் சரியாக செய்தாலே மின்சார உற்பத்தியில் தன்னிறைவை அடையலாம். மேலும், வணிக நிறுவனங்கள், ஐ.டி பூங்காக்களில் சோலார் பேனல் பொருத்துமாறு அரசு வலியுறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் மின் செலவில் 10 சதவிகிதத்தை மிச்சப்படுத்தலாம். இதன்மூலம் மின்வாரியத்துக்கான சுமையும் குறையும்" என்கிறார்.
கலங்கும் கோவை தொழில் நிறுவனங்கள்

பட மூலாதாரம், Getty Images
``கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு காரணமாக சிறு, குறு தொழில்கள் அனைத்தும் முடங்கிவிட்டன. இதன் காரணமாக மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கேட்டு வருகிறோம். இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் எந்தப் பதிலும் கூறவில்லை. அதுமட்டுமல்லாமல், கோவை உள்பட 11 மாவட்டங்களில் ஊரடங்கு நீடிக்கிறது. ஊரடங்குக்கு முன்பு கட்ட வேண்டிய வேண்டிய மின்கட்டணத்துக்கு கால அவகாசம் கொடுங்கள் எனக் கேட்டுள்ளோம். அதற்கும் பதில் வரவில்லை. ஆனால், மின் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் அபராதத் தொகையுடன் சேர்த்து செலுத்தச் சொல்கின்றனர்," என்கிறார் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (TACT) கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ்.
தொடர்ந்து பிபிசி தமிழுக்காக பேசியவர், ``சிறு குறு தொழில்களைப் பாதுகாக்க தனிக் குழு அமைக்கப்படும் என அரசு சொல்கிறது. ஆனால், மின்வாரியத்தில் எங்கள் பிரச்னைகளை அதிகாரிகள் காது கொடுத்துக் கேட்பதில்லை. அபாராதத்துடன் செலுத்துவது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், `கம்ப்யூட்டரில் ஆட்டோமேடிக்காக அபராதம் போடுகிறது. எங்களால் எதுவும் செய்ய முடியாது' எனப் பதில் அளிக்கின்றனர். இந்தக் கொடுமையில் இருந்து எப்படித் தப்பிப்பது எனத் தெரியவில்லை. வருமானம் இல்லாததால் எங்களால் வாடகையும் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக திறனுள்ள தொழிலாளர்களையும் இழக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. அனைத்து வகைகளிலும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம். இதில் உள்ள ஒரே ஆறுதலான விஷயம், ஊரடங்கு நீடிப்பதால் மின் கணக்கீட்டுக்கு யாரும் வருவதில்லை. இதன் காரணமாக மின்சாரத்தை துண்டிக்கும் வேலைகளை மின் ஊழியர்கள் செய்வதில்லை" என்கிறார்.
மின் வாரிய தலைவர் சொல்வது என்ன?

பட மூலாதாரம், RAJESH LAKHONI FB
`மின் தடை பிரச்னை எப்போது சரிசெய்யப்படும்?' என தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மான கழகத்தின் தலைவரான ராஜேஷ் லக்கானியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``மின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததால் ஏற்பட்டால் தொழில்நுட்பக் கோளாறுதான் இது. அதை தற்போது சரிசெய்து வருகிறோம். இன்னும் பத்து நாள்களில் இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டுவிடும். அடுத்ததாக பட்ஜெட் வரவுள்ளது. அதில் கொள்கை முடிவுகளில் சிலவற்றைத் தெளிவாகக் கூற உள்ளோம்," என்கிறார்.
`வட சென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்ததாரர்களுக்கிடையே மோதல் என்கிறார்களே?' என்றோம்.
``இது தொடர்பாக ஒரு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்னிடம் புகார் கொடுத்துள்ளனர். முந்தைய ஒப்பந்ததாரர் சரியாகச் செய்யவில்லை, கூடுதல் பில்களைக் கொடுத்துள்ளதாகவும் சொல்கின்றனர். அதனை தணிக்கைத் துறையில் கொடுத்து சரிபார்க்கச் சொல்லியிருக்கிறோம். முந்தைய காலங்களில் பணி செய்தவரின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளோம். புது ஒப்பந்ததாரரும் சரிவர வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டையும் சிலர் முன்வைத்துள்ளனர். இதனை விசாரிக்குமாறு கூறியுள்ளோம்," என்கிறார்.
கோவை மாவட்டத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் குறித்துக் கேட்டபோது, ``மின்சார வாரியத்தில் பில் கட்டுவதற்கு மூன்று முறைகள் உள்ளன. கடந்த ஆண்டில் கட்டிய அதே மாதத்துக்கான பணத்தை தற்போது செலுத்தலாம். ஒருவேளை அது அதிகமாக இருந்தால் சென்ற மாதத்தின் பணத்தைக் கட்டலாம். அதைவிடக் குறைவாக வேண்டும் என்றால் மீட்டர் ரீடிங்கின் புகைப்படத்தை அனுப்பி, அதற்கான தொகையை செலுத்தலாம். கொரோனா காலம் என்பதால் மீட்டர் ரீடிங் எடுக்காமல் இருக்கிறோம். சிஸ்டத்தில் பில் மாறிவிட்டால் அபராதம் வருவதற்கு வாய்ப்பில்லை. அதுதொடர்பாகவும் விசாரிக்கிறேன்," என்றார்.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு என்னென்ன உணவுகளைச் சாப்பிடக் கூடாது?
- இந்தியாவில் வரவிருக்கும் புதிய கொரோனா தடுப்பூசிகள் - பட்டியல் இதோ
- பேய் பிடித்தல் என்பது உண்மையா? - மருத்துவ உலகம் சொல்வது என்ன?
- கமலின் எதிர்கால அரசியல்: தனி அறை விசாரணைகளின் பின்னணி தகவல்கள்
- ஆப்பிரிக்க வைரத்தை தேடி அலைந்த மக்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்
- சிறுவனுக்கு பேய் பிடித்ததாக கூறி அடித்து கொன்ற தாய் உட்பட 3 பெண்கள்
- கொரோனா தடுப்பூசியால் வயிற்றில் ரத்தம் உறையுமா? இரு சம்பவங்கள் எழுப்பும் கேள்வியும் பதிலும்
- தமிழ்நாடு ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
- நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு: தமிழ்நாடு பாஜகவினர் கடுமையாக விமர்சிப்பது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












