கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு என்ன உணவுகளைச் சாப்பிடக் கூடாது? - நிபுணரின் விளக்கம்

பட மூலாதாரம், EPA
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
கொரோனாவைத் தடுக்கும் வலுவான ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்கிறது அறிவியல் உலகம். ஆயினும் நாள்தோறும் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் எழுந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் இயங்கும் GeneOne Life Science, நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளரான கார் முத்துமணி, இது குறித்து பிபிசி தமிழுக்கு அளித்த விளக்கங்களை இங்கே தருகிறோம்.
கொரோனா வைரஸில் புதிய திரிபுகள் பரவுவதாக செய்திகள் வருகின்றன. ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மீண்டும் தடுப்பூசி போட வேண்டுமா?
ஏற்கெனவே தயாரிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகள் அனைத்தும் முதல் முறையாக பரவிய வைரஸின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டுதான் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸானது தன்னை உருமாற்றிக் கொண்டே இருக்கும். அதனால் புதிய திரிபுகள் உருவாகும்போது தடுப்பூசிகளின் வைரஸைத் தடுக்கும் திறனும் குறையும்.
தடுப்பூசி நிறுவனங்கள் புதிய திரிபுகளுக்கு தடுப்பூசிகளைப் பரிசோதனை செய்திருக்கின்றன. சில தடுப்பூசிகளின் திறன் குறைந்திருக்கிறது. ஆயினும் இதைப் பற்றி மக்கள் கவலைப்படத் தேவையில்லை.
பல தடுப்பூசிகளின் தடுப்பாற்றல் 90 சதவிகிதத்துக்கும் அதிகம். ஆனால் வைரஸை தடுப்பதற்கு 60 சதவிகிதம் இருந்தாலே போதுமானது. அதனால் புதிய திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் தடுப்பாற்றல் சற்று குறைவதால் எந்தப் பாதிப்பும் இல்லை.புதிதாக வேறொரு தடுப்பூசி போட வேண்டிய அவசியமும் இப்போது ஏற்பட்டுவிடவில்லை.
யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது?
அனைவருமே போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. அனைத்து வயதினருக்கும் ஏற்றதா என்பது, பல்வேறு கட்டங்களிலும் பரிசோதனை செய்து அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதிக ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொண்டிருப்பவர்கள், கடுமையான உடல் பாதிப்புகள் இருப்பவர்கள் தங்களது மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
ஒரே வகையான தடுப்பூசி அனைவருக்கும் ஒரே அளவு தடுப்பாற்றலைக் கொடுக்குமா?
இல்லை. தடுப்பூசிகள் மூலம் உருவாகும் தடுப்பாற்றல் என்பது ஒவ்வொரு தனி மனிதரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். ஒரே வீட்டில் உள்ள, ஒரே வயதுடையவர்கள் ஒரே வகையான தடுப்பூசியை ஒரே காலகட்டத்தில் எடுத்துக் கொண்டால் கூட அவர்களில் உடலில் உருவாகும் எதிர்ப்பாற்றல் வெவ்வேறு அளவுகளில் இருக்கக்கூடும்.
நமது உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றல் சாதாரணமான அளவில் இருந்தால், தடுப்பூசி மூலம் அது அதிகரிக்கும். இயற்கையான எதிர்ப்பாற்றல் மிகவும் குறைவாக இருந்தால், தடுப்பூசி மூலம் போதுமான அளவுக்கு அதை அதிகரிக்க முடியாது.
தடுப்பூசி போடுவதற்கு முன்னரும், தடுப்பூசி போட்ட பிறகும் என்னென்ன உணவுகளைச் சாப்பிடக் கூடாது?
அப்படி எதுவும் இல்லை. அறிவியல்பூர்வமாக உணவுக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்படவில்லை. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நேரத்தில நம்முடைய உடலின் நோய்த் தடுப்பு அமைப்பானது எந்த அழுத்தத்துக்கும் உட்படாமல் சாதாரணமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது தடுப்பூசி போட்டால், தடுப்பாற்றல் போதுமான அதிகரிக்கும். இல்லையென்றால் தடுப்பாற்றலின் அளவு குறைவாக இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
நாம் வழக்கமாக உண்ணும் உணவின் மூலம் தடுப்பாற்றலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதே நேரத்தில் தடுப்பாற்றலைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. மதுவால் தடுப்பாற்றலில் பாதிப்பு ஏற்படும் என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், ஓரிரு நாள்களுக்கு அதிக அளவு ஆல்கஹாலை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம்.
தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது ஏன்?
நிர்ணயிக்கப்பட்ட வகையில் ஒருவர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு, குறிப்பிட்ட காலத்தில் எதிர்ப்பாற்றல் உருவாகி விடுகிறது. அதன் பிறகு கொரோனா அவருக்கு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. கொரோனா அவரது உடலுக்குள் நுழையவே முடியாது எனும்போது அவரால் பிறருக்கு பரவுவதற்கும் வாய்ப்பில்லை.

பட மூலாதாரம், Getty Images
ஆயினும் தடுப்பூசி மூலமாக எல்லோருக்கும் ஒரே அளவு எதிர்ப்பாற்றல் உருவாவதில்லை. தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகும் குறைந்த விகிதத்திலான மக்களுக்கு எதிர்ப்பாற்றல் போதுமான அளவுக்கு இருக்காது என்பதால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதற்கு அவர்களது உடலின் இயற்கையான எதிர்ப்பாற்றலில் உள்ள குறைபாடு பெரும்பாலும் காரணமாக இருக்கிறது. சில நேரங்களில் வைரஸில் உருவாகும் புதிய திரிபுகளும் காரணமாக அமைகின்றன.
குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியமா?
அனைத்து வயதினருக்கும் அனைவருக்குமே தடுப்பூசி அவசியம்தான். ஆனால் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படும் அளவு மிகக் குறைவு. 12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிரான எந்தத் தடுப்பூசியும் அங்கீகரிக்கப்படவில்லை. அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பெரியவர்களுக்கு போடும் அளவு மருந்தை குழந்தைகளின் உடலில் செலுத்த முடியுமா, அதனால் ஏதேனும் விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றின் முடிவுகள் வந்த பிறகுதான் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
இதுவரை தயாரிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளில் எது சிறந்தது?
உலகில் இப்போது பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் அனைத்துமே பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. தடுப்பூசிகள் அவற்றின் தடுப்பாற்றலின் அளவில் சற்று மாறுபடக்கூடும். ஆனால் ஒவ்வொரு தடுப்பூசியும் தனித்தன்மை கொண்டிருக்கின்றன. அதனால் இதுதான் சிறந்தது என்று இல்லை.
ஒரு குறிப்பிட்ட வகையான தடுப்பூசியை உலகம் முழுவதும் தயாரிப்பதும் கொண்டு சேர்ப்பதும் இயலாது.
பெருந்தொற்றுக் காலத்தில் கிடைக்கும் தடுப்பூசியை உரிய நேரத்தில் போட்டுக் கொள்வது சிறந்தது. வேறொரு தடுப்பூசி வரும் என்று காத்திருப்பது கொரோனா தொற்றும் அபாயத்தை அதிகரிக்கும்
கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்? எந்த அளவுக்கு பக்கவிளைவு இருந்தால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்?
தடுப்பூசி போட்ட பிறகு 24 மணி நேரத்துக்குள்ளாக பெரும்பாலானோருக்கு காய்ச்சல் வரும். தடுப்பூசி நமது உடலில் செயல்படத் தொடங்கியிருக்கிறது என்று பொருள். அது நல்லதுதான். அதிகபட்சமாக 48 மணி நேரத்துக்குள்ளாக காய்ச்சல் படிப்படியாகக் குறைய வேண்டும். அதையும் தாண்டி உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். அதேபோல் ஊசி போட்ட இடத்தில் அரிப்போ கொப்புளமோ ஏற்பட்டாலும் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

பட மூலாதாரம், Kar Muthumani
இப்போது என்னென்ன வகையான தடுப்பூசிகள் இருக்கின்றன? அவற்றுக்கிடையே என்ன வேறுபாடு.
ஃபைசர், மாடர்னா, கோவிஷீல்டு, கோவேக்சின் போன்ற பல தடுப்பூசிகள் உள்ளன. இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன.
தயாரிப்பிலும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் விதத்திலும் இவை வேறுபடுகின்றன. உதாரணத்துக்கு ஃபைசர் mRNA தொழிலநுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. கோவிஷீல்ட் மனிதக் குரங்குக்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஒரு வைரஸை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. கோவேக்சின் செயலற்ற நிலையில் உள்ள முழு வைரஸையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக தடுப்பு மருந்துகளில் வைரஸின் புரத நீட்சி பயன்படுத்துகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












