`கொரோனா மரணம்' என அறிவிப்பதில் என்ன சிக்கல்? இறப்புச் சான்று விவகாரத்தில் என்ன நடக்கிறது?

கொரோனா

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

`கொரோனாவால் மரணம்' என இறப்புச் சான்றிதழ் கொடுப்பதில் குளறுபடிகள் நடப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். `இதனால் அரசின் இழப்பீட்டுத் தொகை பெறுவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன' எனவும் கூறப்படுகிறது. `கோவிட் மரணம்' எனத் தெரிவிப்பதில் என்ன சிக்கல்?

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, 14ஆம் தேதி முதல் மேற்கண்ட 11 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது.

இறப்புச் சான்றிதழில் குளறுபடி ஏன்?

அதேநேரம், கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடந்த 11ஆம் தேதி இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், `கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 4,002 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை 3,67,081 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதேநேரம், 1,21,311 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்' என தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், `தமிழகத்தில் புதிதாக 14,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 267 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இதுவரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,547 ஆக அதிகரித்துள்ளது' என தெரிவித்துள்ளது.

கொரோனா

பட மூலாதாரம், SPL ARRANGMENT

இந்நிலையில், `கொரோனா மரணங்களுக்கான சான்றிதழ், முறையாக அளிக்கப்படுவதில்லை' எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், ஸ்ரீராஜலட்சுமி. அவர் தனது மனுவில், ` தமிழ்நாட்டில் கொரோனா தொற்றினால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு மத்திய அரசு பத்து லட்ச ரூபாயும் மாநில அரசு 5 லட்ச ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளன. கொரோனாவால் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களுக்கு 5 லட்சம் வழங்குவதாக தமிழ்நாடு அரசும் தெரிவித்துள்ளது.

ஆனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார், இழப்பீட்டு தொகை பெறுவதற்கு உயிரிழந்தவரின் குடும்பத்திடம் அரசால் வழங்கப்படும் இறப்புச் சான்றிதழில், `அந்த நபருடைய மரணத்துக்குக் காரணம் கொரோனா' என குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றுகளில் நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு உள்ளிட்ட இணை நோய்களால் இறந்ததாகவே கூறி இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

உதாரணமாக, சேலம் நீதிமன்ற பணியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஆனால், நாமக்கல் அரசு மருத்துவமனையோ, இணை நோயால் இறந்ததாகவே குறிப்பு எழுதியுள்ளது. எனவே, கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க உரிய நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

Please wait...

தலைமை நீதிபதியின் கேள்வி

இந்த வழக்கு கடந்த 11 ஆம் தேதி தலைமை நீதியரசர் சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. `இது மிகவும் முக்கியமான வழக்கு' எனக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, `தவறாக இறப்புச் சான்றிதழ்களை வழங்கினால் பாதிக்கப்பட்டவர்களால் எப்படி அரசின் நிவாரண தொகையைப் பெற முடியும்?' என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, `கொரோனா மரணங்கள் தொடர்பாக தமிழக அரசால் இதுவரையில் வழங்கப்பட்ட அனைத்து இறப்புச் சான்றிதழ்களையும் ஆய்வு செய்து அடுத்த விசாரணைக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக வல்லுநர் குழுவையும் அரசு அமைக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

``மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்தவர் உடலைக் கொடுக்கும்போது, `கோவிட் மரணம்' என்றுதான் மருத்துவ குறிப்பை (Discharge summory) எழுதிக் கொடுக்க வேண்டும். இறப்புக்கான காரணமாக இதனைக் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், பல மரணங்களில் `கோவிட் மரணம்' எனக் குறிப்பிடாமல் `சுவாசப் பிரச்னை' உள்பட வேறு காரணங்களைக் குறிப்பிட்டுள்ளனர். சேலம் நீதிமன்றப் பணியாளர் கண்ணனின் மரணம் மட்டுமல்ல, எனக்குத் தெரிந்து இறப்புச் சான்றிதழ் குளறுபடியால் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன," என்கிறார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஸ்ரீராஜலட்சுமி.

நழுவும் மருத்துவமனைகள்!

கொரோனா

பட மூலாதாரம், SPL ARRANGEMENT

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` மாநகராட்சிகளில் கொடுக்கும் இறப்புச் சான்றிதழில் என்ன காரணத்துக்காக இறந்தார் என்பதைக் குறிப்பிடும் வழக்கம் இல்லை. ஆனால், மருத்துவர்கள் என்ன காரணத்துக்காக மரணம் என்பதைக் குறிப்பிடுகிறார்களோ, அதையே எரியூட்டும் மைதானத்திலும் எழுதிக் கொடுப்பார்கள். `கோவிட் மரணம்' எனக் குறிப்பிடாவிட்டால், அரசின் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன.

இதுகுறித்து மருத்துவமனையில் கேட்டாலும், `சுவாசப் பிரச்னையால்தான் மரணம்' எனக் கூறிவிட்டு நழுவிக் கொள்கின்றனர். `கோவிட் காரணமாக சுவாசப் பிரச்னை' எனக் குறிப்பிடுவதில் என்ன தயக்கம் எனத் தெரியவில்லை. நாங்கள் கேட்பதால் மருத்துவமனைகள் பதில் அளிப்பதில்லை. அதுவே நீதிமன்றம் கேள்வியெழுப்பினால் பதில் கொடுத்துதானே ஆக வேண்டும். அரசின் இறப்புச் சான்றிதழிலும், என்ன காரணத்துக்காக மரணம் என்பதைக் குறிப்பிடும் வசதிகள் செய்யப்படவில்லை. அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்" என்கிறார்.

`கொரோனா இறப்புச் சான்றிதழ் வழங்கலில் நிலவும் தெளிவற்ற நிலை' தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் அரசு வழக்கறிஞரும் ராதாபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான இன்பதுரை. ``கொரோனா தொற்றால் இறந்தவர்களை, இணை நோய்களால் மரணம் அடைந்ததாகக் கூறி உடலை ஒப்படைக்கின்றனர். இதில் பெரிய ஆபத்தும் உள்ளது. அந்த உடலை வீட்டுக்குக் கொண்டு செல்லும்போது கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம். இதனை நான் மட்டும் சொல்லவில்லை. துக்க நிகழ்ச்சிகள் மூலமாக அதிகளவில் கொரோனா பரவுவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனும் தெரிவித்துள்ளார். கொரோனாவால் இறந்ததாக சான்றிதழ் கொடுத்தால், துக்க காரியங்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையும் குறையும்" என்கிறார்.

தாமதம் ஏன்?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து பேசுகையில், `` தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அ.தி.மு.க ஆட்சியில் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 7,800 பேர் பாதிக்கப்பட்டனர். அப்போதே 85,000 பேருக்கு தினசரி சோதனை செய்யப்பட்டது. தற்போது குறைந்தது 3 லட்சம் பேருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால், கொரோனா பரிசோதனை விவரங்களையும் 3 நாள்களுக்குப் பின்னரே கொடுக்கின்றனர்.

கடந்த ஆட்சியில் சம்பந்தப்பட்ட நோயாளிக்குப் பரிசோதனை முடிவுகள் வரும் முன்னர், காவல்துறை, உள்ளாட்சி நிர்வாகம், மருத்துவ அதிகாரிகள் என சகலரும் களமிறங்கி தொற்று பாதித்தவரை தனிமைப்படுத்தும் வேலைகளில் இறங்கிவிடுவார்கள். இந்தமுறை 2 நாள்கள் கழித்து பரிசோதனை அறிக்கை வருகிறது. அதற்குள் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், வேறு நபர்களுக்கு கொரோனாவை பரப்பிவிடுவதும் நடக்கிறது. அடுத்ததாக, `ஆக்சிஜன் அளவு 94 என்ற அளவில் இருந்தால் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்' என அரசு தெரிவித்துள்ளது. இது மிகவும் தவறானது. கிராமங்களில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்தால் உடனே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பலரும் இறந்துவிடுகின்றனர். இதனை சரிசெய்வதற்கு அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இறப்புச் சான்றிதழில் எந்த இடத்திலும் காரணத்தைக் குறிப்பிட மாட்டோம். இந்த விவகாரம் தொடர்பாக பிறகு பேசுகிறேன்" என்றார்.

சிக்கல் எங்கே வருகிறது?

கொரோனா மரணம் மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

இதையடுத்து, மாநில கோவிட் தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினரும் தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநருமான குழந்தைசாமியிடம் பேசினோம். `` கோவிட் மரணம் தொடர்பாக எந்தெந்த வகைகளில் சான்று கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக சில வழிகாட்டும் நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படியே தான் கொடுக்கப்பட்டு வருகின்றது. அதேநேரம், `கோவிட் மரணம்' என இறப்புச் சான்றிதழில் போட்டுக் கொடுக்குமாறு சிலர் கேட்கின்றனர். கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் இறந்திருந்தால், `கோவிட் மரணம்' எனக் கொடுக்க வேண்டும் அல்லது `கோவிட் பாசிட்டிவ்' எனப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தாலும் கொடுக்கலாம்" என்கிறார்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` இதில் சிக்கல் எங்கே வருகிறது என்றால், `கோவிட் பாசிட்டிவ்' என பரிசோதனை முடிவு வந்தவர்களைப் பற்றி பிரச்னையில்லை. சி.டி ஸ்கேனில் `பாசிட்டிவ்' என வந்தவர்களுக்கும் பிரச்னையில்லை. இந்த இரண்டும் இல்லாமல் இறந்திருந்தால் அதனை `கோவிட் மரணம்' எனச் சொல்வதில் சிரமம் இருக்கும். கோவிட் அறிகுறிகளால் பல்வேறு நோய்கள் வருகின்றன. சில உறுப்புகள் கடுமையாக பாதிக்கின்றன. அதிலும் வயதானவர்களைப் பிரித்துப் பார்ப்பது கடினம்.

இதில், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் எண், செல்போன் எண் ஆகியவை உள்ளன. அதில் தவறு நடக்க வாய்ப்பில்லை. காரணம், இந்த சோதனை முடிவுகள் அனைத்தும் ஐ.சி.எம்.ஆரின் தளத்துக்குச் சென்றுவிட்டு வருகிறது. சி.டி ஸ்கேன், எக்ஸ்ரே சோதனையில் `கோவிட் பாசிட்டிவ்' என மருத்துவர் அறிக்கை கொடுத்தாலும் எடுத்துக்கொள்ளலாம். இவை இரண்டும் இல்லாமல் இருப்பதால்தான் சிரமம் நீடிக்கிறது" என்கிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு வரும் 28 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, `தமிழ்நாடு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?' என்பதை பாதிக்கப்பட்ட தரப்பினர் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :