"கொரோனாவிடம் இருந்து காப்பாற்றுங்கள்" - சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர்

கொரோனா வைரஸ்

சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது நண்பனின் இழப்பை தாங்க முடியாமல் அங்குள்ள காந்தி சிலையிடம் வந்து கண்ணீர் விட்டு கதறி அழுத நபரின் செயல், பலரது கவனத்தையும் ஈர்த்தது.

சேலம் செவ்வாய்பேட்டை பகுதி சேர்ந்தவர் காமராஜ். இவர் ஆயுத எழுத்து தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரும் வழக்கறிஞருமான கந்தசாமி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நண்பர் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு வந்த காமராஜ், சிலை அமைந்துள்ள மேடையின் மீது ஏறி நின்று,

"அரசே ஏதாவது செய்யுங்கள். மக்கள் கொத்துக் கொத்தாய் சாகிறார்கள். பேரிடர் காலங்களில் ஹெலிகாப்டர் மூலம் உணவு போடுவார்களே. அது போல மக்களுக்கு ஆக்சிஜனை கொடுங்கள். எப்படியாவது மக்களை காப்பாற்றுங்கள்," என்று கண்ணீர் விட்டு கதறினார்.

கொரோனா வைரஸ்

மேலும் காந்தி சிலையை பார்த்து, "அகிம்சையை சொல்லிக் கொடுத்தியே காந்தி. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி பொறுமையா இருந்து செத்து மடியறது காந்தி? என் நண்பன் வக்கீல், அவனுக்கே இந்த நிலையா? நாட்டு மக்களுக்கு ஆக்சிஜன், மருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஏழை மக்களுக்கு மருந்துகள் கிடைக்க வேண்டும். அவர்கள் பிழைக்க வேண்டும்," என்று காமராஜ் அழுதபடி இருந்தார்.

இந்த தகவலறிந்து வந்த சேலம் மாநகர டவுன் காவல் துறையினர், ஊரடங்கு நேரத்தில் இது போல செய்யக் கூடாது என அறிவுரை கூறி அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கொரோனா பாதிப்பால் நண்பர் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் காந்தி சிலையிடம் நாட்டைக் காப்பாற்றச் சொல்லி முறையிட்ட சம்பவம் சேலத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவர் அழுத காணொளியை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :