கரூரில் ரயில் நிலையத்தின் பெயரை சமஸ்கிருதம் கலந்து எழுத முயற்சி - எதிர்ப்புகளால் மாற்றிய நிர்வாகம்

நேயர்கள் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த செய்திகளை இந்த பக்கத்தில் காணலாம்.

தமிழ்

பட மூலாதாரம், Getty Images

கரூரில், ரயில் நிலையத்தின் பெயரை சமஸ்கிருதம் கலந்த தமிழில் மாற்றி எழுதியதால் எழுந்த எதிர்ப்பை அடுத்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் மீண்டும் தமிழில் எழுதியுள்ளது.

தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் சிமெண்டால் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் இரும்பால் மாற்றப்பட்டு வருகின்றன.

அப்படி மாற்றும் பொழுது கரூர் மாவட்டம் மகாதானபுரத்தில் உள்ள ரயில் நிலையத்திலும் கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட பெயர் பலகைகள் இரும்பால் மாற்றப்பட்டன.

அப்போது மகாதானபுரம் என்று இருந்த தமிழ் எழுத்துக்களை மாற்றி மஹாதானபுரம் என சமஸ்கிருத எழுத்துகளை பயன்படுத்தி எழுதியிருந்தனர்.

இது குறித்து அறிந்த தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், தமிழில் இருந்த பெயர்பலகையில், தமிழில் எழுத்துக்களை மாற்றி சமஸ்கிருத எழுத்து கலந்த தமிழில் எழுதியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ் ஆர்வலர்கள் பலரும் மத்திய அரசு தமிழில் இருந்த பெயர் பலகையில், சமஸ்கிருத எழுத்துக்கள் கலந்த தமிழில் எழுதியுள்ளது. இது சமஸ்கிருத திணிப்பு என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், மகாதானபுரம் ரயில் நிலையம் உள்ள கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிவகாம சுந்தரி தென்னக ரயில்வேயில் இந்த சமஸ்கிருத திணிப்பை கண்டித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார்.

இதையடுத்து, தென்னக ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் மகாதானபுரம் ரயில்நிலையத்தில் மஹாதானபுரம் என மாற்றப்பட்ட பெயர் பலகைகளில். ரயில்நிலையத்தில் இருந்த பெயர் பலகைகளில் ஒரு சில பலகைகளில் மட்டும் பழையபடி தமிழ் எழுத்துக்களில். மகாதானபுரம் என மாற்றி எழுதியுள்ளனர்.

Banner

தமிழக தேர்தல் கருத்துக் கணிப்புகள் - தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு

தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்குப்பதிவிற்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட சில கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவையடுத்து, தமிழ்நாட்டில் எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது குறித்த செய்திக்குறிப்பை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டுள்ளார். அதன்படி, மார்ச் 27ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி இரவு 7.30 மணிவரை வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்ப தடை விதிக்கப்படுகிறது.மேலும் ஒவ்வொரு கட்ட தேர்தல்களின் வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் வாக்குப்பதிவு முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும் எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக சத்யபிரத சாஹூ கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: