You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வசந்தகுமார் காலமானார் - கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர் மரணம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பியும் வசந்த் அன்ட் கோ உரிமையாளருமான வசந்தகுமார் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) மாலை காலமானார்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்த முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார் வசந்தகுமார். இதற்கு முன்பு இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த முதலாவது சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த ஜே. அன்பழகன் இருந்தார்.
70 வயதான வசந்தகுமார், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு 10ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து தமது தொகுதியான கன்னியாகுமரி மாவட்டத்திலும் சென்னையிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த வசந்தகுமார், சமீபகாலமாக சென்னையில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், வயது மூப்பு, சக்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் நோயின் வீரியம் அதிகரித்து அவரது நுரையீரல் செயலிழக்கும் நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக செயற்கை சுவாச உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அவரது மரணம் தொடர்பாக அவர் சேர்க்கப்பட்டிருந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், கடுமையான கோவிட் நிமோனியா பாதிப்புடன் மிகவும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த வசந்தகுமாரின் உடல்நிலை மோசமடைந்து கொரோனா தொற்று ஏற்படுத்திய சிக்கல்களால் மாலை 6.56 மணிக்கு அவர் உயிரழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசந்தகுமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் முன்பாக, அவரது மனைவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
வசந்தகுமாரின் மறைவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமது டிவிட்டர் பக்கத்தில் இரங்கலை பகிர்ந்துள்ளார்.
வசந்தகுமார் உயிரிழந்த தகவல் கேட்டு மிகவும் துயரம் அடைந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் கூறியுள்ளனர்.
"மிஸ் யூ அண்ணாச்சி"
தமிழகத்தின் விருதுநகர் தொகுதி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தமது டிவிட்டர் பக்கத்தில், வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்துக்கு செல்லும்போது உங்களுடைய குரலை எப்போதும் இழப்போம். மிஸ் யூ அண்ணாச்சி என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வசந்தகுமார், கார்த்தி சிதம்பரம், செல்வராசு, ராமலிங்கம் ஆகியோர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.பி.க்கள் வரிசையில் உள்ளனர்.
இந்த நிலையில், வசந்தகுமாரின் மறைவுக்கு பல அரசியல்வாதிகளும் அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
"மூத்த உறுப்பினரும், நல்ல நண்பருமான வசந்தகுமாருடன் பல நல்ல நினைவுகள் இருக்கின்றன. அவர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது" என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து கடுமையான உழைப்பால் தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்தவர் என்று கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜய்காந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வசந்தகுமார் நல்ல நண்பர் மற்றும் பழகுவதற்கு எளிமையானவர். அவரது மறைவுச்செய்தி தம்மை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக கூறியுள்ளார்.
திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று தமது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், "நடுத்தர குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு" என்று தமது டிவிட்டர் பக்தத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் வசந்தகுமார். இந்த நிலையில், வசந்தகுமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பொன். ராதாகிருஷ்ணன்,
"தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் முக்கிய ஒருவராக உயர்ந்து சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று உழைத்த வசந்தகுமாரின் மரணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாபெரும் இழப்பாகும். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று பணிபுரிந்த நிலையில் அவருடைய மரணம் பாராளுமன்ற தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் தந்துள்ளது. காமராஜரின் தொண்டராக, தொழிலதிபராக, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட ஹெச். வசந்த குமார் அவர்களின் மறைவுக்கு அவரது குடும்பத்தாருக்கும், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆன்மா நற்கதியடைய அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்" என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வசந்தகுமாரின் மறைவுச்செய்தி கேட்ட பிறகு வயோதிக நிலையில் இருக்கும் அவரது மூத்த சகோதரரும் முதுபெரும் காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தன் உடல் சுகவீனம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யார் வசந்தகுமார்?
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில், 1950ஆம் ஆண்டு, ஏப்ரல் 14ஆம் தேதி, சுதந்திரப்போராட்ட தியாகி ஹரிகிருஷ்ண பெருமாள்-தங்கம்மை தம்பதிக்கு பிறந்தவர் வசந்தகுமார்.
1970களில் விற்பனையாளராக பணியாற்றி வந்த வசந்தகுமார், பின்னர் சொந்தமாக தொழில் தொடங்கினார்.
1978ல் வசந்த அண்ட் கோ என்ற பெயரில் மின் சாதன பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையை ஆரம்பித்தார்.
பின்னர் தமிழகம் முழுவதும் கிளைகள் தொடங்கி வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கினார் வசந்தகுமார். காங்கிரஸ் கட்சியின் வர்த்தக அணியின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றி வந்த அவர், கட்சி மற்றும் தமது அரசியல் தேவைக்காக வசந்த் டிவி என்ற பெயரில் ஒரு தனியார் தொலைக்காட்சியையும் தொடங்கி நடத்தி வந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி ஆனந்தனின் சகோதரர் வசந்தகுமார்.
2006 மற்றும் 2016ஆம் ஆண்டு நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். 2019ல் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த அவர், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
பிற செய்திகள்:
- எஸ்.பி. பாலசுப்ரமணியம்: தொடரும் வென்டிலேட்டர் சிகிச்சை - நிலவரம் என்ன?
- நீட், ஜேஇஇ தேர்வு: காங்கிரஸ் எதிர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்துமா?
- கொரோனா: ஐடி நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம் என்ன காரணம்?
- ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகுவதாக தகவல் - உடல்நலப் பிரச்சனை காரணமா?
- நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக் கோரி 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: