கொரோனா வைரஸ்: வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற இந்திய மாணவர்களின் கனவு இனி நனவாகுமா?

வெளிநாட்டிற்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள்

பட மூலாதாரம், getty images

உலகின் தலை சிறந்த வணிக கல்லூரியில் ஏம்.பி.ஏ படிக்க வேண்டுமென்ற ஆசைக்காக இரண்டு ஆண்டுக்கு முன்னாள் உழைக்கத் தொடங்கினார் 29 வயதான ரௌணக் சிங்.

2020 ஜனவரியில் கலிஃபோர்னியாவில் இருக்கும் யூசி பெர்க்லி ஹாஸ் வணிக கல்லூரியில் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றார். பல்கலைக்கழகம் அவரது விண்ணப்பத்துக்கு வலு சேர்க்க சில தகவல்களைக் கேட்டிருந்தது.

"இதனால், ஐந்து வருடமாக பார்த்துக்கொண்டிருந்த நிலையான வேலையை விட்டுவிட்டு ஒரு புதிய மனநல நிறுவனத்தில் ஆலோசகராக வேலைக்கு சேர்ந்தேன்" என்கிறார் சிங்.

"புதிய வேலையில் என்னுடைய சம்பளம் குறைவு. ஆனால் இந்த முடிவை நான் பணத்திற்காக அல்லாமல் என்னுடைய அனுபவத்தில் இது ஒரு முக்கிய புள்ளியாக இருக்கும் என்பதற்காகவே எடுத்தேன்" என கூறுகிறார் சிங்.

ஒரு வழியாக பெர்க்லி பல்கலைக்கழகத்தில் அவருக்கு சேர்க்கை அளிக்கப்பட்டது. செப்டம்பர் மாதத்திலிருந்து அவருடைய படிப்பு தொடங்க இருந்தது.

ஆனால் உலகத்தில் பெரிய மாற்றம் நடந்தது. கோவிட்-19 உலகத் தொற்று உடனடியாக நடக்க இருந்த இந்த எதிர்காலத்தையும் நிச்சயமற்றதாக மாற்றியது.

வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களில் ரௌணக் சிங்கும் ஒருவர். ஆனால் இப்போது சர்வதேச பயணக் கட்டுபாடு, இந்த புதிய சமூக இடைவெளி விதி மற்றும் அடுத்த சில மாதங்களில் வரப்போகும் மாற்றங்கள் ஆகியவை குறித்து ஒரு தெளிவு இல்லாமல் இந்த மாணவர்கள் உள்ளனர்.

சீனாவுக்கு பிறகு, இந்தியாவிலிருந்து அதிக மாணவர்கள் வெளிநாட்டிற்கு படிக்க செல்கின்றனர். 10 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கின்றனர் என 2019 ஜூலை மாதத்தில் இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மற்றும் ஜூலை மாதத்தில் மாணவர்கள் விசா மையத்தில் குவிந்து வெளிநாடு சென்று படிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த வருடம் அப்படியில்லை.

"மன அழுத்தம், குழப்பம், பதற்றம் என நிறைய மனநிலைகள் இருக்கின்றன. ஆனால் யாருக்கும் தெளிவு இல்லை" என்கிறார் பிரிட்டன் சென்று இதழியல் படிக்க விரும்பும் 23 வயதான மிகிகா பரூவா.

மிகிகா பரூவா

பட மூலாதாரம், meehika barua

படக்குறிப்பு, மிகிகா பரூவா

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்கு தங்களுடைய படிப்பை அடுத்த வருடம் அல்லது அடுத்த செமஸ்டருக்கு தள்ளி வைக்கலாம் என்ற ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. அதே சமயம் சில பல்கலைக்கழகங்கள் நிலமை சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அடுத்த ஆண்டு வரை அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. அதே நேரத்தில் கிரீன்விச் பல்கலைக்கழகம் சில வகுப்புகள் ஆன்லைனிலும் சில வகுப்புகள் நேரிலும் நடக்கும் என அறிவித்துள்ளது. பிற நாட்டு மாணவர்களுக்கு அடுத்த செமஸ்டர் வரை வகுப்புகளை தள்ளி வைக்கலாம் எனவும் கிரீன்விச் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

"இவ்வாறு வகுப்புகள் தள்ளி வைக்கப்படுவது நியாயமாக தோன்றுகிறது. குறிப்பாக ஒன்றரை வருடம் போராடி இது போன்ற கல்லூரிகளில் சேர்கிறோம். அப்படியிருக்க ஆன்லைன் வகுப்புகள் நியாயமானதாக தோன்றவில்லை", என்கிறார் ரௌணக் சிங்.

இந்த ஆன்லைன் வகுப்புகளால் சிங் போல நிறைய பேர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இது போன்ற பல்கலைக்கழகங்களுக்கு சென்று படிக்க விரும்புவதற்கு காரணம் பிற்காலத்தில் அங்கேயே வேலை பார்க்கலாம் என்பதும் அங்கிருக்கும் கலாச்சார பன்முகத்தன்மையைப் புரிந்து கொள்வதற்காகவும்தான் என்கிறார் பரூவா.

வெளிநாட்டிற்கு சென்று படிக்க இந்திய மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு அதிகம் செலவாகும். காரணம் கட்டணம் அனைத்தும் அந்த அந்த நாட்டின் பணத்தில் கட்ட வேண்டும். தங்கள் சொந்த நாட்டின் பணத்தில் அல்ல. அது போக விண்ணப்பத்திற்கான கூடுதல் கட்டணம் மற்றும் சில பரிசோதனைகள் என அனைத்திற்கும் செலவாகும்.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஆன்லைன் வகுப்புகள் என்றால் விசா, விமான டிக்கெட்டுகள் மற்றும் அங்கு வாழ்வதற்கு செய்யும் செலவுகள் ஆகியவை தேவையில்லை. ஆனால் பல மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே கல்லூரி வகுப்பை கவனிக்க தங்கள் சேமிப்பையோ பிறரிடம் கடன் வாங்கியோ செலவு செய்ய வேண்டுமா என தயங்குகின்றனர்.

சில மாதங்கள் கழித்து நிலைமை சரியாகி மாணவர்கள் அந்த அந்த கல்லூரி வளாகங்களுக்கு சென்று படித்தாலும் அப்போதும் அதற்கான கட்டுப்பாடுகள் இருக்கும்.

உதாரணமாக சிங் கூறுவது போல மருத்துவ செலவு அதிகரிப்பு. குறிப்பாக கோவிட்-19 தாக்கம் அதிகமுள்ள அமெரிக்கா போன்ற நாடுகள் படிப்பதென்றால் இது குறித்து கேள்வி எழும்.

மேலும் வெளிநாட்டில் வேலை என்பது தற்போது குறைந்துள்ளது. இந்த உலகத் தொற்று பொருளாதாரத்தை வீழச் செய்துள்ளது. இதனால் வேலை கொடுப்பவர்கள் வெளிநாட்டு மக்களுக்கு வேலை கொடுத்து விசாவுக்காக பணம் வழங்குவதை பெரிதும் விரும்ப மாட்டார்கள்.

அதிக செலவு செய்து பட்டம் வாங்கி வேலையில்லாமல் இந்தியாவுக்கு திரும்ப வருவது என்பது பல மாணவர்களை அச்சுறுத்தியுள்ளது. குறிப்பாக பெரும்பாலானோர் வெளிநாட்டில் படித்து அங்கேயே நல்ல வேலைக்கு செல்லலாம் என்ற எண்ணத்தோடு உள்ளனர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

பட மூலாதாரம், PA media

படக்குறிப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

சமீபத்திய இந்த பிரச்சனை மற்றும் இதோடு தொடர்புடைய பொருளாதார விளைவு, அதிகமான இந்தியர்களை வெளிநாட்டிற்கு சென்று படிப்பது குறித்து யோசிக்க வைத்துள்ளது. என க்யூஎஸ் என்னும் சர்வதேச கல்வி வலைதளம் தன்னுடைய சமீபத்திய ஆய்வில் கூறியுள்ளது.

இந்த சிக்கலால் பல்கலைக்கழகங்களும் தற்போது சிக்கலான சூழலில் உள்ளன என்கின்றனர் நிபுணர்கள்.

அமெரிக்க பொருளாதாரத்திற்கு சர்வதேச மாணவர்களால் ஒவ்வொரு ஆண்டும் 45 பில்லியன் டாலர்கள் கிடைக்கிறது. அதே போல பிரிட்டனில் பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களிடமிருந்து7 பில்லியன் யூரோக்கள் கட்டணமாக பெறுகிறது. சர்வதேச மாணவர்கள் அங்கு சேர்வதை பற்றி யோசிப்பது பல்கலைக்கழகங்களின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மாணவர்கள் அங்கு சென்றாலும் சமூக விலகல் என்னும் விதியால் அவர்களை தங்க வைப்பதில் பல்கலைக்கழகங்களுக்கு சிக்கல் ஏற்படும். ஆன்லைன் வகுப்புகள் என்றாலும் பல மணி நேரங்கள் ஆகும்.

"எவ்வளவு நல்ல தொழில்நுட்பமாக இருந்தாலும் இணையதளத்தில் சில சிக்கல்கள் ஏற்படும்" என்கிறார் வெளிநாட்டு படிப்புக்கான ஆலோசகரான சாதிக் பாஷா.

பல மாணவர்கள் தங்கள் சேர்க்கையை 2021ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எப்படியிருந்தாலும் இந்தியர்களின் வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் கனவுகள் குறையாது என நம்பிக்கையுடன் கூறியுள்ளார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: