கொரோனா வைரஸ்: 10 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைக்கும் விவசாயி

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: 10 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைக்கும் விவசாயி
டெல்லியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வயலில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 10 பேரை அவர்களது சொந்த மாநிலமான பிகாருக்கு விமானத்தில் அனுப்பு வைப்பதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியின் திகிபூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பப்பான் சிங் காளான் சாகுபடி செய்து வருகிறார். இவரிடம் 10க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக விவசாயப்பணிகள் பாதிக்கப்பட, தன்னிடம் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களை சொந்த ஊர்களுக்கு சொந்த விமானத்தில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை பப்பான் சிங் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வரும் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு செல்லும் விமானத்தில் தனது பணியாளர்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்துள்ளதாகவும், அவர்களை விமான நிலையம் வரை தனது வாகனத்திலேயே சமூக இடைவெளியை கடைபிடித்து அழைத்து செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
"அவர்களது விமான சீட்டிற்கு மொத்தம் 68 ஆயிரம் செலவானது. இதுதவிர அவர்கள் வீட்டிற்குள் செல்லும்வரை பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக தலா 3 ஆயிரம் வழங்கியிருக்கிறேன். முன்னதாக அவர்களை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்புரயிலில் அனுப்பி வைக்க முயற்சித்தேன்.
அது முடியாமல் போனதால், தற்போது அவர்களை விமானத்தில் அனுப்பி வைக்கிறேன். எனது பணியாளர்கள் நடந்து சென்றோ, இதர ஆபத்தான வழிகளிலோ வீடு திரும்புவதை என்னால் ஏற்க இயலாது" என பப்பான் சிங் கூறியதாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
தினத்தந்தி: இரட்டை குழந்தைகளின் பெயர் ‘குவாரண்டைன்’, ‘சானிடைசர்’
கொரோனா வைரஸ் பலிகளும், பாதிப்புகளும், ஊரடங்கு சிக்கல்களும் தொடரும் இந்த நேரத்தில் சில விசித்திர நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு தாய் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். கொரோனா காலத்தின் இணைபிரியாத தனிமைப்படுத்தல் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றின் நினைவாக தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிடைசர்’ என்ற பெயர் சூட்டப்பட்டதாக கூறுகிறது தினத்தந்தி நாளிதழ்.

பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாக அவர்கள் பெற்றோர் கூறும்போது, ’இந்த இரண்டு பெயர்கள், கொரோனா வைரசுக்கு எதிராக மனிதர்களுக்கு பாதுகாப்பு தரும் முக்கிய விஷயங்களாகும். இதுதான் சிறந்த பெயர்களாக இருக்க முடியும் என்று எங்கள் குழந்தைகளுக்கு இவற்றைத் தேர்வு செய்தோம். அதனால்தான் எங்கள் ஆண் குழந்தைகளுக்கு இந்த பெயரையே சூட்டியுள்ளோம்‘ என்றனர்.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை மீட்பு
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள சோனுரா மாவட்டத்தில் உயிருடன் புதைக்கபட்ட ஆண் குழந்தை ஒன்று அப்பகுதியில் பணிபுரிந்துவந்த கட்டடத் தொழிலாளர்களால் மீட்கப்பட்டது என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி
ஏதோ ஒரு இடத்தில் குழந்தை அழும் சத்தத்தை கேட்ட அவர்கள், அப்பகுதி முழுக்க தேடி உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அக்குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












