கொரோனா வைரஸ்: ஊரடங்கை மீறி தொழுகை - தென்காசியில் 4 பேர் கைது; 300 பேர் மீது வழக்கு

பட மூலாதாரம், Design Cells / getty images
தென்காசியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கை மீறி வெள்ளிக்கிழமை தொழுகை செய்ய முயன்ற 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளனர்.
தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுமதியின்றி ஏராளமானோர் தொழுகைக்காக கூடினர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் நடுப்பேட்டையில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றனர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

பின்னர் ஐமாத் தலைவரை அழைத்து, அனைவரும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதால், அங்கு வந்திருந்த இஸ்லாமியர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் கூட்டத்தை கலைக்கவும், தாக்குதலை தடுக்கவும் போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

காவல்துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் 4 பேரை கைது செய்து பிணையில் விடுவித்தனர். அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் பிபிசி தமிழிடம் பேசுகையில், "வெள்ளிக்கிழமை நடுப்பேட்டை பள்ளி வாசலில் தொழுகைக்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடினர். மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் 144 தடை உத்தரவு அமலில் உள்ளபோது இவ்வாறு கூடுவது தவறு என எச்சரித்தோம். ஆனால் அங்கு கூடியிருந்தவர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு இல்லாமல், அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க கூடியிருந்தவர்களை காவல்துறையினர் கலைத்தனர்."

பட மூலாதாரம், Google
"அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், வைரஸ் தொற்று பரவக் காரணம், 144 தடையை மீறி ஒன்று கூடியது, அரசு அதிகாரிகளை திட்டியது என நான்கு பிரிவுகளின் கீழ் 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.
மேலும் அவர் பேசுகையில், நேற்று (வெள்ளிகிழமை) மாலை மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் காவல்துறை சார்பில் இஸ்லாமிய தலைவர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் பள்ளி வாசலுக்கு யாரும் தொழுகைக்காக வரவேண்டாம் என்றும், கொரோனா தொற்று குறித்து இஸ்லாமிய மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.
வரும் மாதங்களில் இந்து கோயில்களில் அதிகம் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அவர்களையும் அழைத்து பேசி திருவிழா நடத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளோம் என்று சுகுணா சிங் தெரிவித்தார்.
வெள்ளியன்று நடந்த சம்பவம் குறித்து கருத்து கேட்பதற்காக தென்காசி இஸ்லாமிய தலைவர்கள் சிலரை பிபிசி தமிழ் தரப்பில் தொடர்பு கொண்டபோது அவர்கள் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












