பாஜக தலைவர் எல். முருகன்: "மக்களிடத்தில் பாஜகவின் கொள்கைகளை கொண்டு செல்வோம்"

எல்.முருகன்

''மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு செய்தியை மக்களிடம் கொண்டு செல்லவோம். நேரடியாக அவர்களை சந்தித்துப் பேசி, அவர்களுக்கு தெளிவுபடுத்துவோம்,'' என தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன், சென்னையில் கட்சியின் மூத்த தலைவர்களிடம் வாழ்த்துக்களை பெற்றார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய முருகன், தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்கப்போவதாக தெரிவித்தார்.

''அதிக அளவில் மாணவர்கள் ,இளைஞர்கள் கட்சியில் இணைந்துள்ளார்கள். இங்குள்ள மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலின்படி கட்சியை செயல்படுத்துவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் இப்போது தொடர்கிறது. அதேநேரம், வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இடம்பெறுவார்கள். அதற்காக வாக்கு வங்கியை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபடுவோம். மக்களிடத்தில் பாஜகவின் கொள்கைகளை கொண்டு செல்வோம். தமிழக நலன், தமிழர்கள் நலனை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்,'' என்றார்.

Banner image reading 'more about coronavirus'

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழகத்தில் நிலவும் எதிர்ப்பு குறித்து கேட்டபோது, மார்ச் 20ம் தேதி ஏப்ரல் 5ம் தேதி வரை கிராமங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு செய்தியை கொண்டுசெல்ல வீடுவீடாக சென்று மக்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார்.

''மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு செய்தியை மக்களிடம் கொண்டு செல்லவோம். நேரடியாக அவர்களை சந்தித்துப் பேசி, அவர்களுக்கு தெளிவுபடுத்துவோம்,'' என்றார் முருகன்.

முன்னதாக பாஜக தொண்டர்கள், மூத்த நிர்வாகிகள் சென்னை விமான நிலையத்தில் முருகனுக்கு பூங்கொத்து அளித்து வரவேற்றனர். அந்த சமயத்தில் பேசிய முருகன், தன்னை தலைவராக நியமித்த மோதி மற்றும் அமித்ஷாவுக்கும் நன்றி தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: