You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா? உதயநிதிக்கு நோட்டீஸ்
சென்னையில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக வந்துள்ள புகாரை அடுத்து, முரசொலியின் நிர்வாக இயக்குநரான உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு வருமாறு தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நவம்பர் 19ஆம் தேதி திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் சென்னை சாஸ்திரி பவனில் பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அசுரன், முரசொலி, உதயநிதி
அசுரன் திரைப்படத்தைப் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் அக்டோபர் 16ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அசுரன் படத்தைப் பாராட்டி பஞ்சமி நிலமீட்பை மையமாகக் கொண்ட படம் எனப் பதிவிட்டார். அவரது பதிவுக்குப் பதிலாக பாமகவின் நிறுவனர் ராமதாஸ், ''அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்,'' என ஸ்டாலினை விமர்சித்தும், முரசொலி கட்டிடத்தின் நிலம் பற்றிய சர்ச்சைக்கு வித்திட்டார்.
ராமதாஸின் ட்விட்டர் பதிவுக்கு பதில் கொடுக்க முரசொலி நிலம் பஞ்சமி நிலமே அல்ல என்றும் வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை என ஸ்டாலின் பட்டா நகலை ட்விட்டரில் வெளியிட்டார் ஸ்டாலின்.
ஆனால், 1985ல் வாங்கப்பட்ட பட்டவை காட்டுவதற்குப் பதிலாக அந்த கட்டடம் எப்போது கட்டப்பட்டது என்றும் நிலம் எப்போது வாங்கப்பட்டது என்பது மறைக்கப்படுவது ஏன் எனக் கேள்வி எழுப்பி பதில் போட்டார் ராமதாஸ்.
ட்விட்டர் நடந்த போரில் ஒரு கட்டத்தில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமையவில்லை என்பது உறுதி என்றும் அதனை நிரூபிக்க தயார் என்று கூறிய ஸ்டாலின் பஞ்சமி நிலம் என ராமதாஸ் நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகத் தயார் என அறிவித்தார். மேலும் அதனை நிரூபிக்க தவறினால் அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? எனக் கேள்வி கேட்டிருந்தார்.
பாஜக
இதனிடையில், பாஜகவின் மாநிலச் செயலாளர் சீனிவாசன் முரசொலி பஞ்சமி நிலம் தொடர்பான புகாரைத் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகார் கொடுத்தார்.தற்போது அந்த புகாரின் அடிப்படையில், முரசொலியின் நிர்வாக இயக்குநர் என்ற ரீதியில், உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராகி இந்த விவகாரத்தில் விளக்கம் கொடுக்கவேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உள்நோக்கத்தோடு இந்த விசாரணைக்கான அழைப்பு வந்துள்ளதாக திமுக கருதுகிறது. திமுக அளித்துள்ள அறிக்கையில், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் குறித்து விசாரணை ஏதும் செய்யாமலும், அதைப் பற்றி கவலை கொள்ளாமலும் கிடப்பில் போட்டுள்ள மத்திய பா.ஜ.க அரசு, தமிழக மக்கள் மத்தியில் கழகத்தின்மீது அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, பா.ஜ.க.பிரமுகர் கொடுத்த புகாரினை, அவசரம் அவசரமாக, உடனடியாக எடுத்து விசாரணைக்கு அழைத்திருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.
திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் முரசொலி அறக்கட்டளை அறங்காவலர்களில் ஒருவரான ஆர்.எஸ்.பாரதியும் கழக வழக்கறிஞர்களும் ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் முரசொலியில் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ள போதும், அறங்காவலர் மற்றும் வழக்கறிஞர்கள் ஆஜராவது குறித்து ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''நிர்வாக இயக்குநர் என்பவர் அறக்கட்டளையின் நிர்வாகத்தை நடத்துபவர். ஆனால் அறங்காவலர்களான எங்களிடம்தான் முழு விவரம் உள்ளது. நான் வழக்கறிஞர் என்பதால் உதயநிதிக்காக ஆஜராகவுள்ளேன்,'' என்றார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்