ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நிபந்தனை ஜாமின்: விடுவிக்கப்படுவாரா ப. சிதம்பரம்?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்திற்கு இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை)நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அக்டோபர் 24ம் தேதி இதே வழக்கில் பண மோசடி குற்றச்சாட்டில் சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை காவலில் எடுத்தது.

சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து அவரை திகார் சிறையில் இருந்து அவரை கடந்த வாரம் வியாழக்கிழமை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

தன்னுடைய பிணை மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கு எதிராக சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தார்,

ஆர் பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

நீதிமன்ற அனுமதியின்றி அவர் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

வேறு வழக்கில் ப சிதம்பரம் கைது செய்யப்படாமல் இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் ஜாமின் தொகை செலுத்தி விடுவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், விசாரணைக்கு அவர் ஆஜராக வேண்டியிருக்கும்.

அமலாக்கத்துறை தற்போது அவரை காவலில் எடுத்து விசாரித்து வருவதால், உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருந்தாலும், அவர் வெளியில் வர முடியாத நிலை உள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.

ப.சிதம்பரத்தின் மீதான ஊழல் புகார் தொடர்பாக அவரை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில்தான் தற்போது சிதம்பரம் மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :