முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

குடியரசுத் தலைவ

பட மூலாதாரம், TWITTER @RASHTRAPATIBHVN

இந்தியாவில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான மசோதா கடந்த செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேறியது. காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவை ஆதரித்ததால், மொத்தம் வாக்கெடுப்பில் பங்கேற்ற 326 பேரில் 323 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மூவர் எதிர்த்து வாக்களித்தனர்.

மாநிலங்களவையில் இது தொடர்பாக புதன்கிழமை விவாதம் நடந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 149 பேரும், எதிராக ஏழு பேரும் வாக்களித்தனர்.

பின்னர் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

மோதி

பட மூலாதாரம், PIB

இதுவரை இட ஒதுக்கீட்டின் பயன்களைப் பெறாத, முன்னேறிய வகுப்புகளைச் சேர்ந்தவர்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு, 10% இட ஒதுக்கீடு வழங்க அந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனினும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு இதுவரை இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில்லை. அதற்கு அரசமைப்புச் சட்டத்திலும் வழி இல்லை.

ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் மற்றும் ஐந்து ஏக்கருக்கும் குறைவாக வேளாண் நிலம் வைத்திருப்பவர்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பெறத் தகுதியானவர்களாக இருப்பார்கள் என்று அந்த மசோதா கூறுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: