'கொடநாட்டில் கொலை - கொள்ளை நடந்தபோது ஏன் மின்சாரம் இல்லை?'

பட மூலாதாரம், THE INDIA TODAY GROUP
தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த ஐந்து கொலைகளுக்கு பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக தெஹல்கா புலனாய்வு இணைய இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் சுமத்திய குற்றச்சாட்டு, தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
கொடநாடு கொலை - கொள்ளை குறித்து தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எடப்பாடி பதவி விலகி முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசாவும் கூறியுள்ளனர்.
வெள்ளியன்று டெல்லியில் செய்தியாளர்களை மேத்யூ சாமுவேல் சந்தித்தார். அதிமுகவினர் செய்த முறைகேடுகள் குறித்த ஒப்புதல் வாக்குமூலங்களை, காணொளியாகப் பதிவு செய்து கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா வைத்திருந்ததாகவும், அவற்றைக் கைப்பற்றினால் அமைச்சர்கள் உள்ளிட்டோரைத் தாம் கைப்பற்ற முடியும் என்று எடப்பாடி நினைத்ததாகவும் மேத்யூ கூறியிருந்தார்.
கொடநாட்டில் கொள்ளை நடந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் உடனிருந்தனர்.
அப்போது பேசிய சயான், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் தமது நண்பர் என்றும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சில முக்கிய ஆவணங்களை எடுக்க கனகராஜ் தங்களை அழைத்ததாகவும், தங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி இருந்ததாக கனகராஜ் கூறியதாகவும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
கனகராஜ் உள்ளிட்ட 11 பேர் அங்கு சென்று, அவர்களில் நான்கு பேர் உள்ளே சென்றபின், கனகராஜ் சில ஆவணங்களை எடுத்ததாகவும் சயான் கூறினார்.
கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் ஏப்ரல் 2017இல் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த இரவில் காவலாளி கொலை செய்யப்பட்டது குறித்து கேட்கப்பட்டபோது, அவரைக் கொலை செய்வது எங்களுக்கு நோக்கமில்லை என்றும், அவரைக் கட்டி மட்டுமே போட்டதாவும், ஆனால் அவர் மூச்சு முட்டி இறந்ததாகவும் சயான் கூறினார்.
கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்கவே அவர்கள் சென்றதாக காவல்துறை கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த சயன், "அது குற்றப்பத்திரிகையில் இல்லை. வெளியில் ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள்," என்றார்.

பட மூலாதாரம், FACEBOOK / MATHEW SAMUEL
கொடநாட்டுக்கு தாம் சென்று பதிவு செய்ததாக, அங்கிருந்த சிலரின் பேட்டிகளை உள்ளடக்கிய ஆவணப்படம் ஒன்றையும் மேத்யூ வெள்ளியன்று வெளியிட்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பு ஊடகங்களில் ஒளிபரப்பான பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தம்மைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சென்னை சைபர்கிரைம் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று, சனிக்கிழமை, மாலை செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும், வெள்ளியன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறப்பட்டவை அனைத்தும் பொய் என்றும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த சற்று நேரத்திலேயே வேறொரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார்.
ஜெயலலிதா மரணமடைந்த சில நாட்களிலேயே தொடர்ச்சியாக பல சந்தேகத்துக்கு இடமான நிகழ்வுகள் நடந்துள்ளன என்றும் முறையான விசாரணை நடத்த வேண்டுமானால் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும் ராசா கூறினார்.
"ஜெயலலிதா இறந்த இரண்டு மாதங்களிலேயே சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். 24.2.2017 அன்று கொடநாட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்படுகிறார். "
"அடுத்த இரண்டு மாதங்களில் 28.4.2017 அன்று ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணமடைந்தார். இந்த நிகழ்வு நடந்து 24 மணி நேரத்துக்குள் கேரளாவில் நடந்த இன்னொரு வாகன விபத்தில் சயான் தன் மனைவி மற்றும் குழந்தைகளை இழந்தார். பின்னர் கொடநாட்டில் சி.சி.டி.வி பொறுப்பாளராக இருந்தவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது, " என்று ராசா தெரிவித்தார் .

பட மூலாதாரம், RAVEENDRAN
"நான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோதுதான், கொடநாட்டில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க, சிறப்பு அனுமதி பெற்று தனி மின் இணைப்பு வழங்கப்பட்டது. நிலைமை அப்படி இருக்க காவலாளி கொலை மற்றும் கொள்ளை நடந்த இரவில் குறிப்பிட்ட நேரம் மட்டும் எப்படி மின்சாரம் இல்லாமல் போனது? எப்படி 27 சி.சி.டி.வி கேமராக்கள் இயங்காமல் போயின?" என்றும் ராசா கேள்வி எழுப்பினார்.
மேத்யூ கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் தாம் ஈடுபடவில்லை என்று முதலமைச்சர் மறுப்புத் தெரிவிக்காமல், இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது விசாரிக்கப்படும் என்று கூறும்போதே அவரது பதற்றம் தெரிகிறது என்றும் ராசா கூறினார்.
"கொடநாட்டில் இருந்து தமிழக அரசின் பணிகளை மேற்கொள்வதை ஜெயலலிதாவே ஒப்புகொண்டுள்ளார். தமிழகத்தின் தலைமைச் செயலகம் போல ஒரு முதல்வர் பயன்படுத்திய வளாகத்தில், அந்த இரவில் ஒரு காவலர் கூட இல்லையா?" எனவும் அவர் கேட்டார்.

பட மூலாதாரம், Getty Images
"சயான் மற்றும் அவரது நண்பர் மனோஜின் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும். அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது உண்மை என்றால் சட்டப்படி, சதித் திட்டம் தீட்டியதில் எடப்பாடி பழனிசாமிதான் முதல் குற்றவாளி" என்று ராசா குற்றம் சாட்டினார்.
"ஜெயலலிதாவின் ஓட்டுநராக இருந்த கனகராஜ் நான்கு கைக்கடிகாரங்களையும், ஒரு பேப்பர் வெய்ட்டையும் கொள்ளையடிக்கவே அங்கு சென்றார் என்று சொல்வது நம்பும்படி இல்லை."
"காவல் ஆணையர் முதல்வரின் அதிகாரத்தின் கீழ் உள்ளார் என்பதால், முதலமைச்சர் பதவி விலகி, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்," என ராசா வலியுறுத்தினார்.
மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












