உங்கள் ஃபேஸ்புக் தகவல்களை தேர்தல் நேரத்தில் பாஜகவும் காங்கிரஸும் பயன்படுத்தியதா?

    • எழுதியவர், ஜூபைர் அஹ்மத் மற்றும் ஆயிஷா பெரெரா
    • பதவி, பிபிசி

அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 ஆம் ஆண்டு நடந்தது. அந்த தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிகா ஃபேஸ்புக் பயனாளிகள் ஐந்து கோடி பேரின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தியது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

இப்போது, இந்த நிறுவனம் இந்திய தேர்தல்களிலும் ஆதிக்கம் செலுத்தி இருப்பதாக முணுமுணுக்கப்படுகிறது.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் இந்தியாவில் ஸ்ட்ரடெஜிக் நிறுவனம் (Strategic Communications Laboratories - SCL) மற்றும் ஒவ்லினொ பிஸ்னஸ் இன்டலிஜென்ஸ் (Ovleno Business Intelligence - OBI) நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

இந்தியாவின் பத்து மாநிலங்களில், அந்த நிறுவனத்தில் 300 நிரந்திர பணியாளர்களும், 1,400 -க்கும் மேற்பட்ட ஆலோசனை ஊழியர்களும் பணிபுரிவதாக அந்த நிறுவனத்தின் இணையதளம் கூறுகிறது. (http://www.ovleno.in)

எங்கள் வாடிக்கையாளர்கள்

இந்த நிறுவனத்தின் தலைவராக அம்ரீஷ் தியாகி இருக்கிறார். இவர் செல்வாக்குமிகுந்த அரசியல்வாதியான கே.சி. தியாகியின் மகனாவார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் பிரசாரத்தில் தனது பங்கு குறித்து முன்பே இவர் விவரித்து இருக்கிறார்.

எஸ்.சி.எல் - ஒ.பி.ஐ நிறுவனம் வழங்கும் சேவைகளில், 'அரசியல் பிரசார மேலாண்மை` யும் ஒன்று. அதில், சமூக ஊடகங்களை எப்படி பயன்படுத்துவது, நிர்வகிப்பது, தேர்தல் பிரசார மேலாண்மை மற்றும் கைபேசி ஊடக மேலாண்மை ஆகியவை அடக்கம்.

சமூக ஊடக மேலாண்மையின் கீழ் , 'சமூக ஊடக கணக்குகளை நிர்வகிப்பது`, `இணையத்தில் நற்பெயர் ஏற்படுத்துவது` ஆகியவை வருகின்றன.

இந்தியாவின் இரண்டு பெரிய கட்சிகளும், அதாவது பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் எங்கள் வாடிக்கையாளர்கள் என்கிறது இந்நிறுவனம்.

இந்நிறுவனம் இதுவரை பா.ஜ.கவின் நான்கு தேர்தல் பிரசாரங்களை வெற்றிகரமாக செய்துள்ளது என்று இந்த நிறுவனத்தின் துணை தலைவர் ஹிமான்ஷு ஷர்மாவின் லின்கிடுஇன் (LinkedIn) கணக்கு சொல்கிறது . அதில் ஒன்று 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்.

மறுக்கும் கட்சிகள்

ஆனால், காங்கிரஸ் பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த நிறுவனத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றன. இந்த நிறுவனத்துடனான தொடர்பை மறுக்கின்றன.

"கட்சி எஸ்.சி.எல் நிறுவனத்தையோ அல்லது அம்ரிஷ் தியாகியையோ கேள்விபட்டது இல்லை. அவர்களுடன் இணைந்து பணியாற்றினோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை." என்று பிபிசியிடம் தெரிவித்தார் பா.ஜ.கவின் சமூக ஊடக பிரிவின் தலைவர் அமித் மால்வியா.

காங்கிரசுக்கு சமூக ஊடக திட்டங்களை வகுத்துதரும் திவ்யா, பிபிசியிடம், காங்கிரஸ் என்றுமே எஸ்.சி.எல் நிறுவனத்தின் சேவையையோ அல்லது அதனுடன் தொடர்புடைய பிற நிறுவனத்தின் சேவையையோ பயன்படுத்தியது இல்லை என்கிறார்.

இது குறித்து அந்த நிறுவனத்தின் விளக்கத்தை பெற முயற்சித்தோம். ஆனால், இதுவரை அவர்கள் தரப்பு விளக்கத்தை பெற முடியவில்லை.

தேர்தல் செலவு

தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்ததிற்காக பணியாற்றி வரும் அரசுசாரா அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் தலைவர் ஜக்தீப் சோக்கர் பிபிசியிடம், தேர்தல் செலவு குறித்து அரசியல் கட்சிகள் அளிக்கும் பிரமாண பத்திரத்தில், சமூக ஊடகங்களுக்காக எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும். ஆனால், எத்தனை பேர் அதுபோல செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.

தேர்தல் பிரசாரத்திற்காக இப்படி தகவல்களை திரட்டுவது அமெரிக்காவில் முறைகேடாக பார்க்கப்படுகிறது. எஸ்.சி.எல் நிறுவனம் ஒரு வேளை அது போன்ற பிரசாரங்களில் இங்கு ஈடுப்பட்டு இருந்தால், அது எந்த அளவுக்கு குற்றச்சாட்டாக பார்க்கப்படும் என்று தெரியவில்லை.

தேசிய பொது நிதி மற்றும் கொள்கைக்கான நிறுவனத்தில் தொழிற்நுட்ப கொள்கை தொடர்பாக ஆய்வு செய்து வரும் ஸ்மிரிதி பர்ஷீரா பிபிசியிடம், சட்டப்படி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று சட்டப்பிரிவுகளை விளக்குகிறார்.

ஆனால், இப்போது உள்ள சட்டத்தில், வங்கி பயனர்களின் தகவல்கள் ஆகியவைதான் முக்கிய தரவுகளாக கருதப்படுகிறது. ஒருவரின் பெயர், விலாசம், விருப்பங்கள் முதல் நண்பர்கள் பட்டியல் வரை உள்ள தனிநபர் சார் பிரத்யேக தகவல்களை இச்சட்டவரையறைக்குள் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்களாக சுட்டவில்லை என்கிறார் அவர்.

இந்த குற்றச்சாட்டுகளில் ஃபேஸ்புக்கின் பங்கு என்ன?

ஃபேஸ்புக்கில் அவ்வபோது சில புதிர் போட்டிகள் பகிரப்படுகிறதுதானே.... அதாவது உங்களுடைய எதிர்காலத்தை சொல்லுகிறோம், நீங்கள் முற்பிறவியில் என்னவாக இருந்தீர்கள் என்பது போல போட்டிகள். அது போல ஒரு புதிர் போட்டி 2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கில் உலாவியது. அந்த போட்டியை உருவாக்கியது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலெக்ஸாண்டட் கொகன்.

அந்த புதிர் போட்டி அதில் பங்குபெறுபவர்களின் தகவல்களை மட்டும் கோருவதுபோல வடிவமைக்கப்படவில்லை. அவர்களது நண்பர்கள் குறித்த தகவல்களையும் கோருவது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஆனால், பின்னர் பேஸ்புக் இதுபோல தகவல்கள் வெளியே போவதை தடுக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டது.

ஆனால், கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தில் முன்னர் பணி புரிந்த கிறிஸ்டோபர், அந்த புதிர் போட்டியில் 270,000 பேர் பங்கேற்றதாகவும், ஏறத்தாழ 5 கோடி பேரின் தகவல்கள், குறிப்பாக அமெரிக்காவில் மட்டும், திரட்டப்பட்டதாக கூறி இருந்தார்.

இந்த தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திடம் விற்கப்பட்டதாகவும், அதன் மூலம் உலவியல் ரீதியாக மக்களை கண்டறிந்து, அவர்களுக்கு டிரம்ப்புக்கு சாதகாமான தகவல்கள் வழங்கப்பட்டதகாவும் கூறுகிறார். ஆனால், இந்த குற்றச்சாட்டை கேம்பிரித் நிறுவனம் மறுக்கிறது.

ஃபேஸ்புக் விதிமுறைகளுக்கு எதிரானதா?

ஃபேஸ்புக், இது போன்ற புதிர் மற்றும் அப்ளிகேஷன்ஸ் மூலம் எங்களது விதிமுறைகளை மீறுகிறார்கள் என்பதை அறிந்தவுடன், அவற்றை ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கிவிட்டோம் என்கிறது.

எதிர்வினை என்ன?

அமெரிக்க காங்கிரஸ் செனட்டர்கள், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பர்க் ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை எவ்வாறு காக்கிறது என்பது தொடர்பாக காங்கிரஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர்.

ஐரோப்பிய நாடாளுமன்றமும், தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியது.

பிரிட்டன் பிரதமர் தெரீசா மேவின் செய்தி தொடர்பாளர், இது கவலை அளிப்பதாக கூறி இருந்தார்.

ஃபேஸ்புக்கில் உங்கள் தரவுகளை காப்பது எப்படி?

இது விரிவான விஷயம் என்றாலும், அடிப்படையாக உங்களது பயனர் முகவரி மற்றும் கடவுசொல்லை கோரும் எந்த ஆப்-களையும் ஃபேஸ்புக்கில் பயன்படுத்தாதீர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: