You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆதார் தரவு வழக்கில் பத்திரிகையாளர் மீது எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டதற்கு கண்டனம்
ஆதார் அட்டையிலிருந்து தகவல் கசிவது தொடர்பாக கட்டுரை எழுதிய 'த டிரிபியூன்' (The Tribune) பத்திரிகையின் செய்தியாளர் ரச்னா கைராவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின், பிரிவுகள் 419 (தவறான அடையாளம் கொடுத்து ஏமாற்றுதல்), 420 (ஏமாற்று), 468 (மோசடி), 471 (போலி அடையாளத்தை சரியானது என்று சொல்லி பயன்படுத்துவது) ஆகியவற்றின் கீழ் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் நிறுவன அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, ஆதார் சட்டத்தின் பிரிவு 36/37இன் கீழும் அந்த பத்திரிகையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதவிக்கு வந்த ஊடக அமைப்புகள்
வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர், அந்த கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் கைராவிற்கு ஆதரவாக பல பத்திரிகையாளர் அமைப்புகள் குரல் எழுப்பியிருக்கின்றன. இந்த முதல் தகவல் அறிக்கையை கண்டனம் செய்து, The Editor's Guild of India அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
டிரிபியூனில் வெளியான கட்டுரைக்கு எதிரான யுஐடிஏஐயின் நடவடிக்கை அச்சுறுத்துவதற்கு சமமானது என இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"இந்த நியாயமற்ற, அநீதியான நடவடிக்கை, ஊடக சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் ஆகும். கட்டுரைக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்கு பதிலாக ஆதார் நிறுவனம், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய வேண்டும்" என்று The Editor's Guild of India அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது.
அதே சமயம், இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு பத்திரிகையாளருக்கு எதிரான எஃப்.ஐ.ஆரை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
The Foundation for Media Professionals என்ற மற்றொரு ஊடக அமைப்பின் இயக்குனர் மனோஜ் மிட்டா, செய்தியாளர் கேராவுக்கு எதிராக பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை பற்றி தனது ஃபேஸ்புக் பதிவில் இவ்வாறு எழுதியுள்ளார், "நாளிதழ் நிருபர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்திருப்பது அவரை தொந்தரவு செய்யும் ஒரு குழப்பமான போக்கு. கடந்த ஒரு ஆண்டில், ஆதார் தொடர்பாக கருத்து தெரிவிப்பவர்களை ஒடுக்கும் நான்காவது முயற்சி இது".
"Foundation for Media Professional' அமைப்பும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது, கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசின் நம்பகத்தன்மைக்கு எதிராக செயல்பட்டு ஆதாரை காப்பாற்ற அரசு முயற்சி செய்கிறது."
மேலும், "நீதித்துறை இந்த விவகாரத்தில் தனது முடிவை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆதாரில் உள்ள அடிப்படை முரண்பாடுகளை அம்பலப்படுத்திய கேரா மீது எப்படி இத்தகைய பிரிவுகளின்கீழ் எவ்வாறு குற்றச்சாட்டுகள் சுமத்தமுடியும் என்பதை புரிந்துக் கொள்ள முடியவில்லை" என்றும் அந்த அமைப்பு வியப்பை வெளிப்படுத்துகிறது.
ஊடக அமைப்புகள் தங்களுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் 'தி டிரிப்யூன்' பத்திரிகையின் ஆசிரியர் ஹரிஷ் கரே, "நாங்கள் நியாயமான முறையில் செயல்படுகிறோம். டிரிப்யூன் பத்திரிகை தர்மத்தை முன்னெடுத்து செல்கிறது என்று நம்புகிறேன்."
"பொதுமக்களின் நலன்களுடன் தொடர்புடைய சிக்கலான பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் செய்தி வெளியிடுகிறோம். நேர்மையான முறையில் பொறுப்புடன் வெளியிடப்படும் செய்திகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறான முறையில் எடுத்துக்கொள்வது பற்றி நாங்கள் வருந்துகிறோம்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
"புலனாய்வு பத்திரிகையை முன்னெடுத்துச் செல்வதற்கும், சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் நம்மிடம் உள்ள அனைத்து சட்ட வழிகளையும் நாங்கள் பயன்படுத்துவோம்" என்று ஹரிஷ் கரே உறுதிகூறுகிறார்.
யுஐடிஏஐ வெளிட்டுள்ள விளக்கம்
ரச்னா கேராவின் மீதான நடவடிக்கை, ஊடகங்கள் மீதான தாக்குதல் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் நிறுவனம் மீது கண்டனங்கள் வலுப்பெற்ற பிறகு, தனது தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வ அறிக்கையாக வெளியிட்டுள்ளது அந்த அமைப்பு.
'பத்திரிகையாளர் ஒருவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததன் மூலம் ஊடக சுதந்திரத்தை ஆதார் நிறுவனம் மீறிவிட்டதாக ஒருசிலர் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள், ஆனால் அதில் உண்மை ஏதும் இல்லை'.
ஆதாரின் அடிப்படை தரவுத்தளத்தில் சில குளறுபடிகள் இருப்பதாக கூறுவதை நிராகரிக்கும் அதிகாரிகள், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் தரவு முற்றிலும் பாதுகாப்பானது என்று மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றனர்.
ஆதார் நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அளித்துள்ள விளக்கத்தில், "அரசும், சில முக்கிய அமைப்புகளும் குடிமக்களுக்கு உதவுவதற்காக ஆதார் தரவுத்தளத்தை அணுகமுடியும். நடைமுறையில் ஏற்படும் சிக்கல்களை சரிசெய்வதற்கான வழிமுறைகளையும் தொடர்ந்து கண்டறிந்து வருகிறோம். ஏதாவது குறைகள் இருந்தால் உடனடியாக அது தொடர்பான நடவடிக்கைகளையும் எடுக்கிறோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"இந்த வழக்கில், குடிமக்களுக்கு வழங்கப்பட்ட வசதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது, எனவே சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது."
தில்லி காவல்துறையின் கருத்து என்ன?
'குறைகளை சரிசெய்வதற்கான வசதிகளை' 'டிரிபியூன்' செய்தித்தாள் தவறாக பயன்படுத்தியதாக, டெல்லி காவல்துறையின் சைபர் செல்லுக்கு ஜனவரி 5ஆம் தேதி ஆதார் நிறுவனம் புகாரளித்ததாக டெல்லி போலிசார் தெரிவித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையிலேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. புகாரில் பத்திரிகையாளரின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
புகார் தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ள டெல்லி காவல்துறை, ஆதார் அட்டை தொடர்பான கடவுச்சொல்லை பகிர்ந்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆதார் சட்டத்தின் 36/37 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐ.பி.சி மற்றும் ஐ.டி சட்டத்தின் பிரிவு 419/420/468/471 இன் கீழும் ரச்னா கேராவின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையின் தகவல்கள் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் அவ்வப்போது எழுப்பப்படுகின்றன. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் பட்டேல் அண்மையில் ஆதார் அட்டையைப் பற்றிய தனது கவலையை வெளிப்படுத்தும் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
இதுவரை தான் ஆதார் அட்டையை பெறவில்லை என்று கூறியிருந்த பட்டேல், ஆதார் அட்டை கட்டாயமாக்கக்கூடாது குறிப்பிட்டிருந்தார்.
சண்டிகரில் இருந்து வெளியாகும் 'த டிரிப்யூன்' பத்திரிகை ஜனவரி நான்காம் தேதியன்று வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், 'முகவர்' ஒருவரின் உதவியுடன் 500 ரூபாய் செலவு செய்தால் யார் வேண்டுமானாலும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் இருந்து தகவல்களை பெறலாம் என்று செய்தி வெளியிட்டிருந்தது, இது ஆதார் அட்டையின் தகவல்களின் பாதுகாப்பு குறித்த அச்சங்களை மீண்டும் எழுப்பியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :