You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தனது அரசாங்கம் குறித்து புத்தகத்தில் இருக்கும் அனைத்து தகவல்களும் பொய்: டிரம்ப்
தன்னையும் தன் அரசாங்கத்தையும் விமர்சிக்கும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள "அனைத்துத் தகவல்களும் பொய்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புத்தகம் எழுதுவது குறித்து அதன் ஆசிரியர் மைக்கேல் வோல்ஃப் தன்னிடம் எதுவும் பேசவில்லை என்றும் அதில் இருக்கும் "தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், எந்த ஆதாரமும் இல்லாமல் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும்" டிரம்ப் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் தகவல்களை உள்ளடக்கிய புத்தகத்திற்கு டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் தடை விதிக்க முயற்சித்ததையடுத்து, முன்கூட்டியே அப்புத்தகத்தை வெளியிட உள்ளதாக அதன் ஆசிரியர் தெரிவித்திருந்தார்.
`Fire and Fury: Inside the Trump White House` என்ற புத்தகம், அடுத்த செவ்வாய்க்கிழமை வெளியாக இருந்தது. ஆனால், வெள்ளிக்கிழமையன்றே வெளியிடப்படும் என்று அதன் ஆசிரியர் மைக்கேல் வோல்ஃப் கூறினார்.
டிரம்ப் குறித்த பல தவறான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் இருப்பதாக டிரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
டிரம்பின் மகன் ரஷ்யர்களை சந்தித்தது "தேசத்துரோகம்" என்று வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளரான ஸ்டீவ் பேனன் கூறியிருக்கும் பல அதிரடி கருத்துகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஸ்டீவ் பேனன், புத்தியிழந்துவிட்டதாக டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார்.
டிரம்ப் பிரசார அதிகாரிகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உறவுகள் இருந்ததா என்பது குறித்து ஆலோசகர் ராபர்ட் முல்லர் விசாரணையை மேற்கொண்டுள்ளார். அதில் ஒரு பகுதியாக டிரம்பின் மூத்த மகனுக்கு இதில் தொடர்புள்ளதா என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
முன்னதாக, எழுத்தாளர் மைக்கேல் வோல்ஃப் மற்றும் புத்தகத்தின் வெளியீட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் "புத்தகங்களை வெளியிடக்கூடாது, அவற்றை மேலும் அச்சிடுவது, விநியோகிப்பது ஆகியவை உடனடியாக நிறுத்தப்படவேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டது.
டிரம்புக்கு அவப்பெயரை உண்டாக்குவதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியிருப்பதை அடுத்து, டிரம்புக்கும் ஸ்டீவுக்கும் இடையிலான சர்ச்சை தீவிரமடைந்துள்ளது.
வழக்கறிஞர்களின் கருத்து என்ன?
அவதூறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஸ்டீவ் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என டிரம்பின் வழக்கறிஞர்கள், கூறுவதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
"இந்தப் புத்தகத்தில் டிரம்ப்பைப் பற்றிய அவதூறான கருத்துகளை கூறியிருக்கும் ஸ்டீவ் பேனன், அதற்கான எவ்வித அடிப்படை ஆதாரத்தையும் மேற்கோள் காட்டவில்லை" என்று ஏபிசி நியூஸ் கூறுகிறது.
புத்தகத்தை எழுதியுள்ள வோல்ஃப் அல்லது புத்தக வெளியீட்டாளர், ஹென்றி ஹோல்ட் ( Henry Holt and Co Inc) இந்த விவகாரம் பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
புத்தகத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது?
பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள வோல்ஃப்பின் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய தகவல்கள்:
•தேர்தலில் டிரம்ப் பெற்ற வெற்றி அவரது குழுவினருக்கே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது
•தேர்தல் நாள் இரவில் டிரம்பின் மனைவி மெலனியா கண்ணீர் வடித்தார்.
•அதிபர் பதவியேற்பு விழாவில் பிரபலங்கள் கலந்து கொள்ளாதது டிரம்ப்புக்கு சீற்றத்தை ஏற்படுத்தியது.
•"வெள்ளை மாளிகை சோகமாகவும், சற்று அச்சத்துடன் இருப்பதாக" புதிய அதிபர் கருதுகிறார்.
•டிரம்பின் மகள் இவாங்காவும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னரும் இவாங்காதான் அமெரிக்காவின் "முதல் பெண் அதிபர்" என்ற திட்டத்துடன் இருந்தார்கள்.
•தனது தந்தையின் சிகை அலங்காரத்தை கேலி செய்யும் இவாங்கா டிரம்ப், அதற்கு தந்தையின் நண்பர்களே காரணம் என்று அடிக்கடி கூறுவார்.
இந்த புத்தகத்தில் 200க்கும் அதிகமான பேட்டிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
.