நடைமுறையை புரிந்து கொள்ளாமல் மக்கள் மீது பழி போடுகிறாரா கமல்?

ஆர்.கே நகர் தொகுதி இடைத் தேர்தல் குறித்து கருத்து கூறியுள்ள நடிகர் கமலஹாசன் "திருடனிடம் பிச்சை எடுக்கலாமா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

"வாக்குகளை விற்கும் மக்களை கமல் சாடியுள்ளது சரியா? நடைமுறை சீர்கேடுகளைக் களைய நடவடிக்கை எடுக்காமல் மக்கள் மீது பழிபோடுவது சரியா?" என்று #வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பிபிசி தமிழ் நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

"பொதுவாக அரசாங்கம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என விளம்பரம் செய்கிறது.திருவாளர் கமலஹாசன் அவர்கள் குறிப்பிட்டதுபோல் பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்து இருந்தார்களெனில் அவரது கருத்து சரிதான்," என்கிறார் மாதவ ரமணன் எனும் நேயர்.

சக்தி சரவணன் எனும் நேயர் இவ்வாறு கூறுகிறார் "மக்களுக்கு ஆனதைச் செய்யாமல், செய்யவிடாமல், நேர்த்தியான வழியை வகுக்காமல், வழியை விடாமல் எப்பொழுதும் மக்களிடம் குறையை காண்பது மக்களாட்சியைக் குறை சொல்வதற்குச் சமம். நெருப்பில்லாமல் புகையாது என்றால் நெருப்பிற்கான நிலைக்களத்தை வெளிப்படுத்தாமல் வெற்று வார்த்தைகளால் நிந்தனைச் செய்து குழப்பம் செய்வோரின் திரைப்படம் தோல்வியுற்றாலும் மக்களிடம்தான் குறையுள்ளது என்பர்."

"நிர்வாகம் என்பது யார்..? அதுவும் மக்கள் தானே.. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளால் ஊழல் அரசியல்வியாதிகள் தழைத்தோங்குகிறார்கள்.. அப்புறம் நிர்வாகம் அப்படித்தான் கேடு கெட்டு கிடக்கும்.. முதலில் மாற வேண்டியது மக்கள்தான். மக்களே மாறாமல் நிர்வாகம் எப்படி மாறும்..?" என்று கேள்வி எழுப்புகிறார் கோபாலசாமி ரவிக்குமார்

"ஏழை மக்கள் பணத்தை வாங்கி கொண்டு இருப்பதிலேயே சிறந்த வேட்பாளருக்கு ஓட்டு போட்டு விட வேண்டும்," என்று பதிவிட்டுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியன்.

"கமல் அவர்கள் அரசியல் களத்தில் நிற்கும்பொழுது நாம் அனைவரும பார்க்கத்தானே போறோம். அவர் பணம் தருகிராரா இல்லையா? ஒருமனிதனை குறைகூறுவது மிகவும் சுலபம். அந்த இடத்தில் அவர் நிற்கும்பொழுது தெரியும்," என்று கூறுகிறார் பழனிச்சாமி எனும் பிபிசி நேயர்.

சந்தோஷ் குமார் இப்படிக்கு கேட்கிறார்," ஓட்டுக்கு பணம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஓட்டுக்கு பணம் கொடுப்பவா்களை என்ன என்று சொல்லாம்?"

"வாக்குக்களை விற்பது தங்களையும் தங்கள் சுய கௌரவத்தையும் விற்பதற்கு சமன்," என்று கூறியுள்ளார் முரளி தேவி.

"அவ்வளவு எளியோர் உள்ளனர் என்பதுதானே விடை," என்று கூறியுள்ளார் கணேஷ் எனும் நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :