You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஆர்.கே.நகரில் நோட்டாவைவிட குறைவாக வாக்குகள் பெற்ற பாஜக' - ஜிக்னேஷ் மேவானியின் நையாண்டி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவைவிடவும் மிகக் குறைவான வாக்குகளை பாஜக பெற்றுள்ள நிலையில், குஜராத் தேர்தலில் சுயேச்சையாக களம்கண்டு வெற்றிபெற்ற சமூக ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி பாஜகவை கிண்டல் செய்து கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதில், குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40,707 வாக்குகள் கூடுதலாக பெற்று அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வெற்றி கொண்டார்.
இச்சூழலில், நோட்டாவிற்கு 2,373 வாக்குகள் பதிவாகியிருந்தன. நோட்டாவைவிட மிகவும் குறைவாக பாஜக வெறும் 1,417 வாக்குகள் பெற்றிருந்தது சமூக ஊடகங்களில் தேசியளவில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
தேர்தலில் தோல்வியை தழுவிய பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன், தேர்தலை பணம்தான் முடிவு செய்துள்ளது என்றும், ஆளுங்கட்சியைவிட அதிகமாக பணம் கொடுத்தோர் முன்னிலை பெற்றுள்ளனர் என்றும் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், குஜராத் தேர்தலில் வட்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தலித் சமூக ஆர்வலரான ஜிக்னேஷ் மேவானி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகளை கிண்டல் செய்து ட்விட்டரில் ட்வீட் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில், உலகிலே மிகப்பெரிய மிஸ்டு கால் கட்சி, தமிழகத்தில் மட்டும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மிஸ்டு கால்களை பெற்ற கட்சி நோட்டா வாக்குகளை காட்டிலும் வெறும் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறது. தமிழக தேர்தல் முடிவுகள் கொண்ட இந்த ஊத்தாப்பம் ஜீரணிக்கும் என்று நம்புகிறேன் என்று கிண்டல் செய்துள்ளார்.
ஜிக்னேஷின் இந்த ட்வீட் பரவலாக பரவி வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :